விக்ருதி வ்ருட முதல் நாளில், அசுர சந்தி வேளையில், ஆண்டி முர்ரேயும் ஃபிலிப் கோல்ஷ்ரைபரும் மோன்டே கார்லோ களிமண் தளத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரணமான மாலைப் பொழுதில் இந்த வலைப்பூவின் முதல் பதிவை வெளியிடுவதில் பெருமிதம் அடைகிறேன்.

சிறு வயதில் இருந்தே விளையாட்டுகளின் மேல் எனக்கு ஆர்வம் அதிகம். பெரும்பாலான இந்தியர்களைப் போலவே எனக்கும் கிரிக்கெட்டின் மேல் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. அவ்வப்போது, “இதெல்லாம் கிரிக்கெட்டா?” என்று ஐபிஎல்-ஐப் பார்த்து அலுத்துக் கொண்டாலும்,  தொடர்ந்து பார்ப்பதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. இருப்பினும் இந்தப் பதிவில் கிரிக்கெட்டைப் பற்றி எழுதக் கூடாது என்று எண்ணியுள்ளேன்.

ஒரு விளையாட்டை நுட்பமாக ரசிப்பது என்பது ஒரு வகை இசையை ஆழ்ந்து அனுபவிப்பதற்கு நிகரான அனுபவம்.  போரிஸ் பெக்கரும், ஸ்டிஃபான் எட்பர்கும் ஆடும் போது, ஆலத்தூர் சகோதரர்கள் மாறி மாறி ஸ்வரம் பாட்வது போல இருக்கும். ஃபெடரரின் backhand winner-கள் மதுரை மணியின் தார ஸ்தாயி கார்வைகள் போலத் துல்லியமானவை. சமீபத்தில், ஆர்ஸெனலுக்கு எதிரான ஆட்டத்தில், மெஸ்ஸி கோல்கீப்பரின் தலைக்கு மேல், அநாயசமாக பாலை உந்திவிட்ட போது, யாருமே எதிர்பார்க்காத சமயத்தில் வந்து விழுந்த மோராவைப் போலத் தோன்றியது.  சரி சொல்ல வந்து விஷயத்தை விட்டு எங்கெங்கோ செல்கிறேன்…

குறிப்பாக டென்னிஸ், கால்பந்து, ஃபார்முலா ஒன் ஆகியவற்றுக்கு இந்தியாவில் பெரும் following இருக்கிறது. (செஸ்ஸும், பேட்மிண்டனும் என்னைப் போன்ற ஒரு சிலரால் பார்க்கப்படும் விளையாட்டுகள்). நேற்று கூட ஸ்கிலாச்ச்சி, க்ளின்ஸ்மென், ஹாகி,  வால்டராமா, ரொமாரியோ என்று பல நாட்டு கால்பந்து ஆட்டக்காரர்களைப் பற்றி மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருந்தேன். தமிழ் வலைப்பூ உலகில் இவற்றைப் பற்றி தொடர்ந்து யாரும் எழுதுவதாக (எனக்குத்) தெரியவில்லை (தெரிந்தால் தெரியப் படுத்தவும்). ஆர்வம் இருப்பின் இவ் வலைப்பூவைக் கூட்டுப் பதிப்பாகக் கூட கொண்டு வரலாம்.

இந்த வருடம் விளையாட்டு ரசிகர்களுக்கு வரப் பிரசாதம். வருடம் தவறாமல் வரும் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள், ஃபார்முலா ஒன் போட்டிகள், கால்பந்து சேம்பியன்ஸ் லீக் போன்றவற்றைத் தவிர கால்பந்து உலகக் கோப்பை, செஸ்ஸில் உலக சாம்பியம் போட்டி ஆகியவையும் நடைபெற உள்ளன.

பழைய விம்பிள்டன் நாயகர்கள், மரடோனாவின் மாயக் கால்கள், மெஸ்ஸியின் மந்திர ஜாலங்கள், ஷுமாக்கரின் சூறாவளிப் பயணங்கள் என்றெல்லாம் எழுத ஆசை. பார்ப்போம் நடக்கிறதா என்று.