இட்லிவடைக்காக எழுதிய பதிவு:
 

மூன்றாவது, நான்காவது ஆட்டங்கள் கடந்த இரண்டு நாட்களில் நடந்து முடிந்தன.

முடிந்த ஆட்டங்களைப் பற்றி “கண்டேன் சீதையை” பாணியில் சொல்ல வேண்டுமென்றால்,“வெற்றி ஆனந்துக்கே”.

மூன்றாவது ஆட்டத்தின் நகர்த்தல்கள் முதல் ஆட்டத்தை ஒத்து இருக்குமா என்பதே ரசிகர்களின் ஆவலாக இருந்தது. ஆனந்த் முதல் ஆட்டத்தில் அடைந்த தோல்விக்குப் பின், Grunfeld-ஐ ஏறக்கட்டிவிட்டு Slav defense-ஐ தேர்வு செய்தார். கடந்த இரண்டு ஆட்டங்களைப் போலவே, 1.d4 என்ற நகர்த்திலிலேயே இந்த ஆட்டமும் தொடங்கியது. ஆனந்தின் ஆட்டங்களை உற்று நோக்கும் போது, அவர் காலம் காலமாக, 1.e4/e5 ஆட்டக்காரராக இருந்துள்ளார். 2008-ல் நடந்த கிராம்னிக்குடனான ஆட்டத்தில்தான் 1.d4-ல் தொடங்கி ஆட ஆரம்பித்தார். அதுவே அவரது வெற்றிக்கு அடித்தளமாய் அமைந்தது. இந்த போட்டியிலும் 1.d4/d5-ல் தொடங்குவது ஆனந்தின் strategy-ஆகப்படுகிறது. இதன் மூலம், 1.e4/e5-க்கு எதிராய் டொபலோவ் தயார்படுத்தியிருக்கும் அனைத்து திட்டங்களும் வீணாகிவிடும் என்பதே ஆனந்தின் எண்ணமாக இருக்கும்.

டொபலோவுக்கு கிராம்னிக்குடனான போட்டி ஒரு கசப்பான அனுபவம். இரண்டாவது ஆட்டத்திலேயே கிராம்னிக் வெற்றிகரமாய் டொபலோவுக்கு எதிராக உபயோகித்த வழிமுறையை ஆனந்தும் கையாண்டதைப் பார்த்தோம். மூன்றாவது ஆட்டத்திலும் கிராம்னிக் கருப்பு காய்ளுடன் விளையாடும் போது பயன்படுத்திய Slav Defense-க்கு ஆனந்தும் தாவினார். இது ஒரு psychological ploy.

மூன்றாவது ஆட்டத்தைப் பொறுத்த மட்டில், ஆனந்த் பொறுமையின் சிகரமாய் திகழ்ந்தார். “எல்லா ரிஸ்கையும் டொபலோவே எடுக்கட்டும், பிரச்னையில் சிக்கிக் கொள்ளாமல் இருந்தால் போதும்.”, என்பதே ஆனந்தின் திட்டம். டொபலோவ் சில காய்களை வெட்டுக் கொடுப்பதன் மூலம், தாக்குவதற்கான புதிய களங்களை உண்டாக்க முயன்றார். ஆனந்த், அவர் அளித்த வாய்ப்புகளை நிராகரித்து, ஆட்டத்தை சமநிலையில் வைத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தார். “எதிராளி தவறு செய்தால் ஒரு புள்ளி, இல்லையென்றால் அரை புள்ளி”, என்று இரு முடிவுகளுக்கும் open-ஆக இருந்தார் ஆனந்த். டொபலோவோ, வெற்றியைத் தவிர வேறெதற்கும் விளையாடுவதில்லை என்பதில் குறியாக இருந்தார். ஆனால், எவ்வளவு முயன்றும் ஆனந்தின் தற்காப்பை டொபலோவால் ஊடுருவ முடியவில்லை. முப்பது நகர்த்தல்களுக்குளேயே ஆட்டம் டிராவில்தான் முடியும் என்பது தெளிவாகியுள்ளது.

எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று முயலப் போய், ஏதேனும் தவறு செய்து, டிராவை தோல்வி ஆக்கிக் கொள்வாரா டொபலோவ் என்பதே ஆட்டத்தை கவனித்தவருக்குக் கிடைத்த ஒரே சுவாரஸ்யம். தான் டிரா offer-கள் கொடுக்கவும் போவதில்லை, ஏற்கவும் போவதில்லை என்று டொபலோவ் கூறியிருந்ததால், வழியே இல்லாமல் சமநிலை ஆட்டத்தை தொடர்ந்து ஆடி வேண்டியதாயிற்று. ஆனந்தும், “ஆடும் வரை ஆடிப் பார்”, என்று ஈடுகொடுத்து வந்தார். ஒரு கட்டத்த்ல், போட்டியின் arbiter-ஐ டொபலோவ் அழைத்து வந்தார். அவர் மூலமாக டிராவை தெரிவிக்க நினைத்தார். ஆனந்தோ aribter-ஐக் கண்டுகொள்ளவே இல்லை. தனது நகர்த்தல்களை ஆடி டொபலோவை கடுப்பேற்றினார். ஒரு வழியாய், சில நகர்த்தல்களை மீண்டும் மீண்டும் வைத்து, repetition மூலம் டிராவை அடைந்தனர்.

ஆட்டம் முடிந்ததும் இருவரும் கை கொடுத்துக் கொள்வது மரபு. இந்த ஆட்டம் முடிந்ததும் அது நடக்கவில்லை. Press Conference-ன் போது டொபலோவ் இருவரும் கை கொடுக்க மறந்துவிட்டதாகக் கூறினார். ஆனந்தோ, “அதையும் arbiter மூலமாகத்தான் கொடுக்க வேண்டுமோ என்ற குழப்பத்தால் கொடுக்கவில்லை”, என்று டொபலோவை நக்கலடித்தார்.

ஆட்டத்திலும் சரி, ஆட்டத்துக்கு வெளியிலும் சரி, டொபலோவின் சளும்பலுக்கு எல்லாம் சளைக்கப் போவதில்லை என்பது போல அமைந்தது ஆனந்தின் பதில்.ஆட்டத்தைப் விமர்சித்த கிராண்ட்மாஸ்டர்கள், “இந்த ஆட்டம் கிராம்னிக் ஆடியது போலவே இருந்தது”, என்றனர்.போட்டியின் முடிவில் ஆனந்தின் seconds-களுள் ஒருவராக கிராம்னிக் அறிவிக்கப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. எதிரிக்கு எதிரி நண்பன் இல்லையா? கிராம்னிக்குக்கு இருக்கும் ‘டொபலோவ் வெறுப்பு’ அவரை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும்.

நான்காவது ஆட்டத்தையும், வெற்றி பெற்ற இரண்டாவது ஆட்டத்தைப் போலவே, Catalan Opening-ல் தொடங்கினார் ஆனந்த். இரண்டாவது ஆட்ட தோல்விக்குப் பின், டொபலோவ் மீண்டும் ஒரு முறை அதே சூழலில் சிக்கியிருக்க வேண்டுமா என்பது முக்கியமான கேள்வி. ஏற்கெனவே கிராம்னிக்கிடம் இதே சூழலில்தான் டொபலோவ் பாடாய்ப் பட்டார். ஆனந்த் மெது மெதுவாய், தனது Queen Side-ஐ பலப்படுத்தி வந்தார். ஆட்டத்தின் எந்த ஒரு நேரத்திலும், ஆனந்த் தனது preparation-ஐ விட்டு வெளி வந்ததாகத் தெரியவில்லை. பாதி ஆட்டம் வரை, கிராம்னிக்கின் ஆட்டம் போலவே விளையாடி வந்த ஆனந்த், 23-ஆவது நகர்த்திலில் தனது குதிரையை “castled செய்யப்பட்ட ராஜாவுக்கு அருகில் உள்ள இரண்டு pawn-களுக்காக” தியாகம் செய்தார். இதன் மூலம், டொபலோவின் ராஜா, வெட்ட வெளியில் மாட்டிக் கொண்டார். Queen Side-லேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்த டொபலோவுக்கு திடீரென்று வந்த king side attack அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். அந்த நகர்த்தலைத் தொடர்ந்து, அடுத்த 5-6 நகர்த்தல்களில் சிறிது பிசகியிருந்தால் கூட டொபலோவுக்கு சாதகமாய் ஆட்டம் திரும்பியிருக்கும். ஏனெனில், டொபலோவ் கூடுதல் காய்களுடன் களத்தில் இருந்தார். ஆனந்தோ, கம்ப்யூட்டர்கள் வெற்றிக்கென்று கணித்த நகர்த்தல்களை ஒன்றன் பின் ஒன்றாக நகர்த்தி டொபலோவை திக்குமுக்காட வைத்தார். இன்னும் சில நகர்த்தல்கள் போனால் check and mate ஆகிவிடுவார் என்ற நிலையில், 32-வது நகர்த்திலில் டொபலோவ் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

இதன் மூலம், இரண்டாவது ஓய்வு தினத்துக்குள்ளும் ஆனந்த் நிறைவாய் நுழைந்திருப்பார். இரண்டாவது ஆட்டத்தில் பெற்ற வெற்றியிலாவது டொபலோவின் பிழை ஆனந்துக்கு பெரிதும் உதவியது. பிழையான நகர்த்தல்களை எதுவும் டொபலோவ் வைக்காத போதும், ஆனந்த் வெற்றியை அடைந்தது அவருக்கு பெரிய திருப்தியை அளித்திருக்கும்.

பொதுவாக ஆனந்த் நன்றாக விளையாடும் போது, எதிராளியைவிட வேகமாக ஆடுவார். இந்தத் தொடரில் முதல் மூன்று ஆட்டங்களில் ஆனந்த் டொபலோவைவிட மெதுவாகவே விளையாடி வந்தார். நான்காவது ஆட்டத்தில் பழைய ஆனந்தைப் போல மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்தினார். It is a sign that shows Anand is back in his elements.

செஸ் உலகம் இரண்டு விஷயங்களை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது.

1. டொபலோவ் இப்போது எப்படி ஆடுவார். இதற்கு முன் பல டோர்னமெண்டுகளில், பின் தங்கிய நிலையிலிருந்து முன்னேறி, இறுதியில் வெற்றியையும் அடைந்திருப்பவர் இவர். கிராம்னிக் உடன் மோதிய ஆட்டத்திலும், இரண்டு புள்ளிகள் பின்தங்கியிருந்த போதும், அபாரமாக ஆடி, ஒரு கட்டத்தில் கிராம்னிக்கைவிட அதிகம் புள்ளிகள் கூட பெற்றிருந்தார். அதனால், அடுத்த சில ஆட்டங்கள் சுவாரஸ்யமாக இருக்கும்.

2. டேனைலோவ் கிராம்னிக்குடனான ஆட்டத்தில் ஏற்படுத்திய Toilet Gate சர்ச்சை போல, புதிதாக எதையாவது கிளப்புவாரா? சர்வ நிச்சயமாய் கிளப்புவார் என்றே பலர் ஊகிக்கின்றனர்.

அடுத்த ஆட்டத்தில் டொபலோவ் வெள்ளைக் காய்களுடன் ஆடுவார். அதற்கு அடுத்த இரு ஆட்டங்களிலும் ஆனந்துக்கு வெள்ளைக் காய்கள்.(ஆறு ஆட்டங்களுக்குப் பின் odd number ஆட்டங்களில் ஆனந்துக்கு வெள்ளைக் காய்கள்.) ஆதலால், ஐந்தாவது ஆட்டத்தில் டொபலோவ் எப்படியாவது ஜெயிக்கப் பார்ப்பார். அப்படி முயல்கையில், over-push செய்து தோல்வியுற்றால், சாம்பியன்ஷிப்பைக் கிட்டத்தட்ட ஆனந்த் வென்றுவிட்டார் என்றே வைத்துக் கொள்ளலாம்.

- லலிதா ராம்

பி.கு:
1. அடுத்த அப்டேட் ஆறாவது ஆட்டத்துக்குப் பின்.
2. ஆனந்தின் வெற்றியை நீங்களும் இங்கு ஆடிப் பார்க்கலாம்.
3. படங்கள் இங்கே

இட்லிவடைக்காக எழுதிய பதிவு.

சென்ற வார இறுதியில் இரண்டு ஆட்டங்கள் நடந்தன. ஆட்டங்களின் முடிவில் சமநிலை ஏற்படும் என்று பலர் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இருவரும் தலா ஒரு ஆட்டத்தை வெல்வர் என்று அதிகம் பேர் ஊகித்து இருக்க முடியாது.

பொதுவாக, இது போன்ற Match-களில் முதல் சில ஆட்டங்கள் மொக்கையாக இருக்கும். சென்ற முறை ஆனந்த கிராம்னிக்கை எதிர்த்து ஆடிய போது கூட, முதல் ஆட்டம் அப்படித்தான் அமைந்தது. ஆனால், டொபலோவ் அப்படி ஆட மாட்டார் என்று அனைவரும் அறிந்ததே. ஆனந்தும் டொபலோவுக்கு இணையாக, முதல் ஆட்டத்திலேயே பல sharp position நிறைந்த Grunfeld Opening-ஐ எடுத்து ஆடியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

To cut the long story short – முதல் ஆட்டம் டொபலோவுக்கு சுலபமான வெற்றியைத் தந்தது. ஆனந்த் டொபலோவ் போன்ற தேர்ந்த ஆட்டக்காரர்கள் ஆடும் போது, வெற்றி தோல்வி சகஜம்தான். எனினும், ஆனந்த் தோல்வியடைந்த விதம் அவரது ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்து இருக்கும்.
செஸ் ஆட்டக்காரர்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகை tactical players. அதிரடியாய் ஆடி, புதிய கோணங்களை உருவாக்கி, சில காய்களை பலி கொடுத்து, அதற்கு ஈடாய் சிலவற்றைப் பெற்று, ஒரு வழியாய் அமளி அடங்கும் போது, வலுவான நிலையில் இருக்கும் ஆட்டக்காரர்கள் இவர்கள். காஸ்பரோவ், ஃபிஷர், டொபலோவ் போன்றவர்கள் இந்த வகை ஆட்டக்காரர்கள்.

இரண்டாவது வகை Positional Players. இவர்கள் வலிக்காமல் அடிப்பதில் வல்லவர்கள். சிறிது சிறிதாய் முக்கிய கட்டங்களைப் பிடித்து, எதிராளி தனக்கு எந்த பாதகமும் இல்லை என்ற மாயை வலையைப் பின்னி, சிறிது சிறிதாய் ஆட்டத்தை தன் வசப்படுத்தும் ஆட்டக்காரர்கள் இவர்கள். கார்போவ், கிராம்னிக் போன்றவர்கள் இந்த வகை ஆட்டக்காரர்கள்.

ஆனந்தைப் பொறுத்த மட்டில் அவரை ‘universal player’ என்றே வகைப்படுத்துகின்றனர். அதாவது இரண்டு வகை ஆட்டத்தையும் சரளமாக ஆடக் கூடியவர் ஆனந்த். எதிராளிக்கேற்ப தன் ஆட்டத்தை மாற்றிக் கொள்வதே ஆனந்தின் பெரிய பலம். கிராம்னிக்குக்கு எதிராக ஆனந்த் பெற்ற மகத்தான வெற்றிக்கும் இதுவே முக்கிய காரணம். Positional Player, நன்கு ஆராயப்பட்ட நிலைகளில் காய்களை வைத்திருக்கவே விரும்புவார். Tactical Player-ஓ அதிகம் ஆராயப்பட்டிராத நிலைகளை நோக்கி ஆட்டத்தை நகர்த்துவார்.

Tactical Player-ஆன டொபலோவுடன் ஆடும் பொது, ஆனந்த் Positional Play-வையே விளையாடி, அவரை பொறுமையிழக்கச் செய்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆனந்தோ முதல் ஆட்டத்தில், டொபலோவுக்கு பிடித்த வகையில், complicated சூழலை உருவாக்கினார்.

இருவரும் முதல் இருபது நிமிடங்களுக்குள் 20-க்கும் மேற்பட்ட நகர்த்தல்களை மின்னல் வேகத்தில் நகர்த்தினர். ஆட்டத்தைக் காண்பவர்களுக்கு அங்கு ஒரு ரேபிட் செஸ் ஆட்டம் நடப்பதாகவே தோன்றியது. இரு ஆட்டக்காரர்களும், ஆர அமர கணினியின் துணை கொண்டு வீட்டில் அமர்ந்து உருவாக்கிய திட்டங்களையே செயல்படுத்தி வந்தனர். முதல் 22 நகர்த்தல்களுக்குப் பின்னும் ஆட்டம் சமநிலையிலேயே இருந்தது. 23-ஆவது நகர்த்தலுக்கு ஆனந்த் நேரம் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார். பிஷப்பை நகர்த்துவதே சரியான தற்காப்பாக இருக்கும் பட்சத்தில், ஆனந்த் சம்பந்தமே இல்லாமல் தனது ராஜாவை நகர்த்தினார். அந்த ஒரு நகர்த்தலே ஆனந்தின் தோல்விக்கு வழி வகுத்தது.

ஆட்டத்தை கவனித்த வல்லுனர்கள், “ஆனந்த் 23-வது நகர்த்தலின், ஆட்டத்தின் எந்த காயை நகர்த்தினால் நல்லது என்று யோசிக்கவில்லை. தான் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்த home preparation-ஐ ஆட முயன்றார். அவர் தயார் செய்திருந்த நகர்த்தல் மறந்து விட்டதால், ஞாபகப்படுத்துக் கொள்ள நேரம் எடுத்துக் கொண்டார். கடைசியில் ராஜாவை நகர்த்துவதுதான் தான் திட்டமிட்ட நகர்த்தல் என்று நினைத்து அதை ஆடவும் செய்தார். Most probably he mixed up on the order of the moves he memorized.”, என்கின்றனர்.

ஆனந்துக்கு இது மிகப் பெரிய சறுக்கல். எதிராளியின் பலத்துக்குள் தானே போய் சிக்கிக் கொண்டு, எண்ணி வந்த ஆட்டத்தை மறக்கவும் செய்வார் என்றும் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

டொபலோவ் முன்பு சொன்னது போல, ஆனந்தின் வயது அவருக்கு எதிராக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதா?

40 மணி நேர கார் பயணமும், சாம்பியன் பட்டத்தைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் கொடுக்கும் மன அழுத்தமும் ஆனந்தின் ஆட்டத்தை பாதிக்கின்றனவா?

12 ஆட்டங்கள் மட்டுமே நடக்கும் தொடரில், ஒவ்வொரு தோல்வியும் costly-ஆக அமையக் கூடும். ”இந்த அடியில் இருந்து ஆனந்த் மீள்வாரா?”

போன்ற கேள்விகள் செஸ் உலகெங்கும் எதிரொலித்தன.

“இதே போல ஆடினால், ஆனந்த் மிகப் பெரிய புள்ளி வித்தியாசத்தில் தோற்க நேரிடும்”, என்றெல்லாம் டொபலோவ் ரசிகர்கள் கொக்கரித்தனர். என் போன்ற தீவிர ஆனந்த் ரசிகனுக்குக் கூட, இவர்கள் சொல்வது உண்மையாகிவிடுமோ என்ற எண்ணம் எழாமலில்லை.

அடுத்த நாள் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்த் வெள்ளைக் காய்களுடன் களமிறங்கினார். ஆனந்த் வெற்றியைக் குறி வைத்து ஆடுவாரா? அல்லது டிராவுக்காக ஆடுவாரா? டிராவுக்கு ஆடப் போய், over defensive-ஆகி அதுவே அவர் வீழ்ச்சிக்கு காரணமாகிவிட்டால்? இரண்டாவது ஆட்டத்திலும் தோற்றால், கிட்டத்தட்ட இந்தத் தொடரையே தோற்றார்ப் போல்தான். ஆனந்துக்கு, இரண்டாவது ஆட்டம் மிக மிக முக்கியமான ஒன்று.

இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்த் தனது positional player அவதாரத்தில் களமிறங்கினார். டொபலோவுக்கு எதிராக கிராம்னிக் வெற்றிகரமாக உபயோகித்த Catalan Opening-ல் ஆட்டத்தைத் துவக்கினார். 14 நகர்த்தல்கள் முடிந்த போது, ஆனந்தின் காய்கள் நல்ல நிலைகளை அடைந்திருந்த போதும், அவர் ஒரு pawn-ஐ பலி கொடுத்திருந்தார். டொபலோவின் காய்களின் அமைப்பு முழுவதுமாய் வளர்ந்திராத நிலையில், ராணியை exchange செய்ய ஆனந்த் அழைப்பு விடுத்தார். ஆட்டத்தை live-ஆக அலசிய பலருக்கு இது ஒரு புதிரான நகர்த்தலாக இருந்தது. ஆட்டம் நடக்கும் போது ஆனந்தை ஷார்ட் போன்ற கிராண்ட்மாஸ்டர்கள் திட்டித் தீர்த்தாலும், ஆட்டம் முடிந்த பின், “This was a weaker move. But, this may be pure genius from a psychological point of view.”, என்றனர்.

ராணியுடன் ஆடியிருந்தால், டொபலோவ் புதியதொரு நிலைக்கு ஆட்ட்த்தை எடுத்துச் செல்லும் சாத்தியக்கூறுகள் அதிகம். இருவரிடமும் ராணி இல்லாத போது, பொறுமையாய் முக்கிய கட்டங்களைப் பிடித்தல் அவசியமாகிறது.

டொபலோவை நன்குணர்ந்த ஆனந்த், அவர் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து சமநிலையைத் தகர்க்கும் நகர்த்தலைச் செய்யக் கூடும் என்று ஊகித்திருப்பார். அது, இருபத்தி ஐந்தாவது நகர்த்தலில் நடந்தது.

போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தான் டிரா offer-கள் கொடுக்கப் போவதில்லை என்று டொபலோவ் அறிவித்திருந்தார். அதனால், எப்படியும் வெற்றியை நோக்கியே ஆட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். டொபலோவின் 25-ஆவது நகர்த்தலுக்குப் பின், ஆனந்தின் கை கொஞ்சம் கொஞ்சமாக ஓங்கியது. முன்பு பலி கொடுத்த pawn-ஐ மீட்டெடுத்தோடு, இன்னொரு pawn-ஐயும் ஆனந்த் கைப்பற்றினார். ஒரு கட்டத்தில் ஆனந்தின் இரண்டு passed pawn-கள் டொபலோவை துன்புறுத்த ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல், 43-ஆவது நகர்த்தலில் டொபலோவ் தோல்வையை ஒப்புக் கொண்டார்.

ஆனந்த் வெற்றி பெற எப்படி ஆட வெண்டும் என்று வல்லுனர்கள் ஊகித்தனரோ அதே வகையில் ஆனந்தின் ஆட்டம் அமைந்தது.

சாம்பியன்ஷிப்பைத் தக்க வைத்தல், 40 மணி நேர கார் பயணம், எதிரியின் நாட்டில் வாசம், முந்தைய நாள் தோல்வி என்று ஆனந்தின் மனநிலையைக் கெடுக்கும் எண்ணற்ற காரணங்களுக்கிடையில், துல்லியமாய் ஆடிய ஆனந்தின் ஆட்டம் அவரது ரசிகர்களுக்குப் பெறும் நிறைவை அளித்திருக்கும்.

மூன்றாவது ஆட்டத்தில் டொபலோவ் வெள்ளைக் காய்களுடன் ஆடுகிறார். சென்ற முறை ஆடியதை விட, ஆக்ரோஷமாக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். ஆனந்த் மீண்டும் டொபலோவ் வழிக்கே சென்று அவரை வெல்ல முயல்வாரா அல்லது பொறுமையாய் டொபலோவை தவறு செய்யத் தூண்டுவாரா?

நாளை தெரிந்துவிடும்.

40 மணி நேர மாரத்தான் கார் பயணத்துக்குப் பின் ஆனந்த் பல்கேரியா அடைந்தார். முதல் ஆட்டம், ஒரு நாள் தாமதத்துக்குப் பின், இன்று தொடங்குகிறது.

ஆனந்தைப் பற்றி இங்கு ஏற்கெனவே விவரமாய் எழுதியுள்ளேன். (ஏனோ இன்று சொல்வனம் வேலை செய்யவில்லை. சீக்கிரம் செய்யும் என்று நம்புகிறேன்) அதனால் டொபலோவைப் பற்றி பார்க்கலாம். 1975-ல் பிறந்தவரான டொபலோவ், World Under-14 & World Under-16 பட்டங்களைப் பெற்று செஸ் உலகில் முன்னேறத் துவங்கி, 1992-ல் கிராண்ட்மாஸ்டர் தகுதியைப் பெற்றார்.  செஸ்ஸைப் பொறுத்த மட்டில், இந்தியாவுக்கு ஆனந்தைப் போல பல்கேரியாவுக்கு டொபலோவ்.  உலக விளையாட்டு அரங்கில் பல்கேரியாவின் பெயரை முன்னிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதால், டொபலோவ் அந் நாட்டின் அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண ரசிகர் வரை அனைவராலும் விரும்பப்படுபவர். (நல்ல காலம் பல்கேரியாவில் ஐபிஎல் நுழையவில்லை).

டொபலோவ் தன் ஆட்டத்தை பெரும்பாலும் அதிரடியாகவே ஆடுவார். நிறைய நேரம் எடுத்துக் கொண்டு உள்ளதில் மிகச் சிறந்த நகர்த்தல்களைக் கண்டுபிடித்து ஆட்டத்தை தொடர்வதை விட, யாரும் பார்த்திராத ஆட்ட நிலைகளை உருவாக்கி, எதிராளியை திக்குமுக்காட வைப்பதில் வல்லவர். இந்த வகை ஆட்டத்தில் ரிஸ்க் ரொம்ப அதிகம். டொபலோவின் மிகப் பெரிய பலம் அவரது துணிச்சல்தான். தன் துணிச்சலான நகர்த்தல்களினால் பல முறைத தோல்வியைச் சந்தித்திருப்பினும் டொபலோவ் தன் aggressive approach-ஐ மாற்றிக் கொள்ளாமல் ஆடி வருகிறார். முதலில் தற்காத்துக் கொள்வோம். எதிராளி தவறு செய்தால், அதை வைத்து ஆட்டத்தை ஜெயிப்போம் என்ற வகை ஆட்டக்காரர்களுக்கிடையில் டொபலோவ் தனித்துத் தெரிகிறார்.  இவர் தோல்வியை அடைந்த பல ஆட்டங்கள் கூட ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன.  (உதாரணமாக இந்த ஆட்டத்தைக் கூறலாம்.)

பல மறக்க முடியாத ஆட்டங்களை டொபலோவ் ஆடி வந்த போதும், 1995-லிருந்து 2005-வரை உலக சாம்பியன் ஆகும் கனவு நிறைவேறாமலே இருந்து வந்தது. (இப்போது கூட இவர் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படும் சாம்பியன் அல்ல.)  காஸ்பரோவ் ஏற்படுத்திய பிளவால், ஒரே சமயத்தில் செஸ் உலகில் இரு சாம்பியன்கள் இருந்து வந்தனர். 2005-ல் FIDE என்ற அமைப்பின் போட்டியின் மூலம் டொபலோவ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆனந்த் முதலான எட்டு முன்னணி வீரர்கள் ஆடிய டயுள்-ரவுண்ட் ராபின்  டோர்னமெண்டில் முதல் ஏழு ஆட்டங்களில் ஆறு வெற்றியைப் பெற்று, சுலபமாக பட்டத்தை வென்றார் டொபலோவ்.

2005-ல் காஸ்பரோவ் ஓய்வு பெற்றார். அதன் பின், செஸ் உலகம் இணைவதற்கான சாத்தியகூறுகள் உருவாகின. 2006-ல் பொதுவாக ஒரு சாம்பியனைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு, அப்போதைய சாம்பியன்களான கிராம்னிக்கும், டொபலோவும் எலிஸ்டாவில் பன்னிரெண்டு ஆட்டங்கள் கொண்ட தொடரை ஆடுவது என்று முடிவானது. (போட்டியின் முடிவிலும் முழுமையான unification நடக்கவில்லை. அது 2008-ல் ஆனந்த் கிராம்னிக்கை வென்றவுடன்தான் நடந்துள்ளது).

இந்தக் கட்டத்த்தில், டொபலோவின் மேனேஜர் சில்வியோ டேனைலோவைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

இவர் செஸ் இண்டெர்னேஷனல் மாஸ்டராக இருந்திருக்கிறார் என்பதை விட டொபலோவின் மேனேஜராக இருப்பவர் என்றே அனைவராலும் அறியப்படுபவர். இன்று, டொபலோவை ‘bad boy of chess’ என்று பலர் அழைக்க முக்கிய காரணமாய் விளங்குபவர். அநேகமாய், டோபலோவ் சார்பில் நேர்காணல்கள் இவர்தான் வழங்குவார். பேசும் போது எடுத்தே கவிழ்த்தேன் என்று எதையாவது சொல்வார். எதிராளியைத் தூண்டிவிடுவதில் இவருக்கு நிகரே இல்லை எனலாம். 90-களில் டொபலோவின் கோச்சாக இருந்து பின்பு அவரது மேனேஜர் ஆனவர். இந்தப் பின்னணியின் டொபலோவ் கிராம்னிக்கின் ஆட்டங்களைக் காண்போம்.

முதல் நான்கு ஆட்டங்கள் முடிந்த போது கிராம்னிக் 3-1 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தார். அப்போது டேனைலோவ் ஒரு அறிக்கை கொடுத்தார்:

“ஒவ்வொரு நகர்த்தலுக்குப் பின்னும் கிராம்னிக் தன் இருக்கையை விட்டு எழுந்து செல்கிறார். சராசரியாக ஒரு ஆட்டத்தில் 50 முறையாவது relaxation room-க்குப் போகிறார். 25 முறையாவது toilet-க்கு போகிறார். வீடியோ சர்வைலன்ஸ் இல்லாத toilet(!!!)-க்கு அடிக்கடி கிராம்னிக் செல்வது சந்தேகத்தை அளிக்கிறது.  இந்த முறைகேட்டை உடனடியாக சீர் செய்யாவிட்டால் டொபலோவ் தொடர்ந்து விளையாடமாட்டார்.”

இந்த அறிக்கையைத் தொடர்ந்து நடந்த பரிசீலனையில், டேனைலோவ் கூறிய குற்றச்சாட்டுகள் மிகப் படுத்தப்பட்டவை என்று தெரிய வந்தாலும், இரு ஆட்டக்காரர்களுக்கு தனித் தனி கழிப்பறைகள் கொடுப்பதை நிறுத்தி, இருவருக்கும் ஒரே கழிப்பறையைக் கொடுப்பது என்று முடிவானது. இதற்கு கிராம்னிக் மறுப்பு தெரிவித்து, ஐந்தாவது ஆட்டத்தை forfeit செய்தார். அதன் பின் இரு பக்கமும் மாறி மாறி அவதூற்றினை வாரி இறைத்துக் கொண்டனர். கடைசியாக, “ஆட்டம் தொடரும். பழைய படியே கிராம்னிக் பிரத்யேக கழிப்பறைக்குச் செல்லலாம். ஆனால், அவர் forfeit செய்த ஆட்டம் செய்ததுதான். அந்த ஆட்டத்தில் டொபலோவ் வென்றதாகக் கருதப்படும்”, என்று முடிவானது.  இது நியாயமா? டேனைலோவ் இருக்கும் இடத்தில் எல்லாமே நியாயம்தான்.

அதன் பின் நடந்த ஆட்டங்களில் இரு முறை டொபலோவ் வென்று முன்னணியில் இருந்தார். பத்தாவது ஆட்டத்தில் கிராம்னிக் அபாரமாக விளையாடி சமநிலைப் படுத்தினார். 12 ஆட்டங்களும் முடிந்த போது இருவரும் தலா 6 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதனால், ராபிட் ஆட்டங்கள் தொடங்கின. மூன்று ராபிட் ஆட்டங்கள் டிராவில் முடிந்த பின், கடைசி ஆட்டத்தில் கிராம்னிக் வென்று உலக சாம்பியன் ஆனார். அதன் பின், கிராம்னிக்கின் toilet-ன் கூரையில் கேபிள்களைக் கண்டுபிடித்ததாகவும், கிராம்னிக்கின் நகர்த்தல்கள் பல Fritz9 என்ற கம்ப்யூட்டர் பேகேஜ் சிபாரிசு செய்த நகர்த்தல்களாகவே இருப்பதாகவும் டேனைலோவ் புதிய சர்ச்சையைக் கிளப்பினார்.  ”I believe that his (Kramnik’s) play is fair, and my decision to continue the match proves it” என்று முதலில் சொன்னவரும் டொபலோவ்தான்.  தோல்விக்குப் பின் பேச்சை மாற்றி அவதூறை இறைக்க ஆரம்பித்தார்.  இதற்குப் பின்னும் “severe reprimand” உடன் டோபலோவ் தப்பித்துக் கொண்டார்.

2006-ல் கிராம்னிக் சாம்பியன் ஆனாலும், 2005-ஐப் போலவே 2007-லும் டோர்னமெண்ட் நடத்துவதாக FIDE அறிவித்து இருந்தது. கிராம்னிக் உலக சாம்பியன் என்றால், 2007 ஆட்டங்களுக்கு அர்த்தமே இல்லை. இந்தக் குழப்பம் தீர கிராம்னிக் ஒரு நிபந்தனை விதித்தார், டோர்னமெண்டில் நான் ஜெயித்தால் நான்தான் சாம்பியன். தோற்றால், ஜெயித்தவருக்கும் எனக்கும் அடுத்த வருடம் ஒரு போட்டி வைக்க வேண்டும்.” இந்த நிபந்தனைக்கு இணங்கியதால் ஆட்டம் நடந்தது. டபிள் ரவுண்ட் ராவின் முறையில் நடந்த போட்டியில், ஆடிய பதினான்கு ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்காமல், ஒன்பது புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை மெக்ஸிகோவில் ஆனந்த் வென்றார். ஆனந்துக்கும் கிராம்னிக்குக்கும் இடையிலான போட்டி 2008-ல் ஜெர்மனியில் நடை பெற்றது. கூடவே இன்னொரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

2008-ல் FIDE ஒரு Super GM டோர்னமெண்ட் நடக்கும், அதில் வெற்றி பெறுபவர் டொபலோவுடன் மோதுவார். அந்த ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் ஆனந்த்-கிராம்னிக் போட்டியில் வென்று சாம்பியன் ஆனவருக்கு சேலஞ்சராக ஆடுவார் என்றது ஒப்பந்தம்.

இதெல்லாம், எந்த ஊர் நியாயம் என்றெல்லாம் கேட்கப்படாது. அதான் முன்னாலேயே சொல்லிவிட்டேனே டேனைலோவ் ஜெகஜால கில்லாடி என்று. சென்ற வருடம் டொபலோவும் காம்ஸ்கியும் ஆடிய போட்டியில் டொபலோவ் வென்று ஆனந்துக்கு சாலஞ்சரானார்.

உலக சாம்பியன் போட்டி எங்கு எப்பொது நடத்தலாம் அதற்கு தேவையான பொருளையும் prize money-ம் யார் தருவார்கள்? எவ்வளவு தருவார்கள்? என்றெல்லாம் குழப்பங்கள் தொடர்ந்தன. கடைசியில் பல்கேரியாவின் பிரதமரின் ஆதரவுடன், அந் நாட்டின் தலைநகரில் ஆட்டம் நடக்கும் என்று முடிவானது.  போட்டி ஆரம்பிக்கும் சில வாரங்கள் முன், “ஆனந்த் போட்டியை நடத்துவதில் அக்கறையில்லாமல் இருந்தார். அவர் நினைத்திருந்தால் இந்தியாவில் ஸ்பான்ஸர்கள் பிடித்திருக்கலாம். என்னையே எல்லா வேலையும் செய்ய வைத்துவிட்டார்.”, என்று டொபலோவ் புலம்ப ஆரம்பித்துவிட்டார். தன் சொந்த நாட்டில் ஆடுவது மிக மிகக் கஷ்டமான விஷயம். இருப்பினும் வேறு வழியேயில்லாமல் ஆடுவதாக அவர் தெரிவித்த போது சிரிப்புதான் வந்தது.

இன்று தொடங்கவிருக்கும் ஆட்டம், நேற்றே தொடங்கி இருக்க வேண்டியது. ஐஸ்லேண்ட் எரிமலையால் தாமதமாகத் துவங்குகிறது. இருவருக்கும் நடக்கவிருக்கும் போட்டியில் ஜெயிக்கப் போவது  யார்?

இந்தக் கேள்வி, பல முன்னணி செஸ் வீரர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையானவரின் பதில், “இருவரும் மிக மிக நல்ல ஆட்டக்காரர்கள். ஆனந்தின் நிதானம் அவரது பலம். வெறும் செஸ் பலத்தை மட்டும் வைத்துப் பார்த்தால், ஆனந்த் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஆட்டங்கள் பல்கேரியாவில் நடக்கின்றன.  அது சிங்கத்தின் குகையில் சென்று சிங்கத்தை அடக்குவதற்கு சமானம். ஒரு சிங்கம் மட்டுமென்றால் பரவாயில்லை. இரண்டு சிங்கங்கள் இருக்கின்றன. உலக சாம்பியன் ஆவதற்கு இதை விட்டால் வேறு நல்ல வாய்ப்பு கிடைக்காத என்ற நிலையில் இரு சிங்கங்களும் பசியுடன் இருக்கின்றன. ஜெயிப்பதற்காக அவை எதை வேண்டுமானாலும் செய்யும். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது டொபலோவுக்கு வாய்ப்புகள் அதிகம்”.

பல்கேரியாவில் ஆடுவதற்கு ஆனந்த் ஒப்புக் கொண்டதை, “A Terrible Blunder”, என்றே பலர் கருதுகின்றனர். (உதாரணம்: இதையும், இதையும் பார்க்கலாம்) பல்கேரியத் தரப்பு தன் சத்தாய்ப்பை சென்ற வருடமே தொடங்கிவிட்டது.  “ஆனந்த் செஸ் ஆடாமல், உலக சாம்பியன் ஆன மிதப்பில் இருக்கிறார்.  அப்படி அவர் ஆடினாலும், இன்று இருக்கும் இளம் வீரர்களுடன் அவரால் தாக்கு பிடிக்க முடியாது. சாம்பியன்ஷிப்பை தக்க வைக்க ஆனந்த் வேண்டுமென்றே போட்டி நடைபெறாமல் இருக்கும்படி அலைக்கழிப்பார். இதன் மூலம் நாங்கள் nervous ஆகிவிடுவோம் என்பதே ஆனந்தின் எண்ணம்”, என்றெல்லாம் போன வருடமே டேனைலோவ் உளறிக் கொட்டினார்.

ஆனந்தை விட ஐந்து வயது இளையவராதலால், இது போன்ற தொடர்களுக்குத் தேவைப்படும் Stamina தன்னிடம் அதிகம் இருப்பதாக டொபலோவ் சில வாரங்களுக்கு முன் கூறியுள்ளார்.  இதெல்லாம் ‘part of mind games’. டொபலோவ் ஆட்டத்தின் போது டிரா offer செய்ய மாட்டார். ஆனந்த் பேசினாலோ, draw offer செய்தாலோ அதை சட்டை செய்ய மாட்டார், என்று கூறியுள்ளார். பழம் தின்று கொட்டை போட்டவரான ஆனந்துக்கு இவை எல்லாம் சலனத்தை ஏற்படுத்தாது என்றே நினைக்கிறேன்.

முதல் சில ஆட்டங்களுக்குள் ஆனந்த் முன்னிலையை அடைந்தால் டொபலோவ் குழுவினர் என்ன செய்வார்கள் என்று பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

இதுவரை ஆனந்தும் டொபலோவும் ஆடிய ஆட்டங்களை வைத்துப் பார்க்கும் போது, ஆனந்த் டொபலோவை விட நிறைய வெற்றியைப் பெற்றுள்ளார். கூர்ந்து நோக்கின், அதில் நிறைய வெற்றிகள் வேகமாக ஆடும் ரேபிட் ஆட்டங்களின் வந்துள்ளன. கிளாசிகல் ஆட்டங்களில் டொபலோவ் ஆனந்தை விட ஒரு ஆட்டம் அதிகமாக ஜெயித்துள்ளார். இதிலிருந்து, இரு ஆட்டக்காரர்களும் சம வலிமை கொண்டவர்களே என்பது தெளிவாகிறது.

எது எப்படியோ செஸ் ரசிகர்களுக்கு நல்ல தீனி கிடைக்கப் போகிறது. என்னைப் பொறுத்த மட்டில் ஆனந்த் ஜெயித்தால் ரொம்ப சந்தோஷம் தோற்றால் ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஏனெனில், சென்ற முறை பட்டத்தை வென்றவுடன், ஆனந்தின் கவனமெல்லாம் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதிலேயே இருந்து வருகிறது. இதனால், இடைப்பட்ட காலங்களின் அவர் ஆடிய ஆட்டங்களின் தற்காப்பாக ஆட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருந்தது. இந்த வருட போட்டியில் ஜெயித்தாலும் தோற்றாலும், ஆனந்த் தன் பெயரை என்றும் நிலைக்கும்படி செய்துவிட்டார். இன்னும் எத்தனை வருடங்கள் தொடர்ந்த ஆட முடியும் என்று டெஹ்ரியாத நிலையில், இந்த உலக சாம்பியன் என்ற பாரத்தைச் சுமக்காமல் இருந்தால், பழைய Tiger from Madras மீண்டும் ரசிகர்கள் அடிக்கடி பார்க்க முடியும்.

இந்த அட்டத்தைப் பற்றிய இன்னொரு கொசுறு செய்தி: 1920-களுக்குப் பின் இரு ரஷ்யரல்லாதவர் ஆடும் முதல் சாம்பியன்ஷிப் போட்டி இதுதான்.

Follow

Get every new post delivered to your Inbox.