பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடிப் போவார் ஒருவர். பத்தடிக்கு ஒரு தடவை பந்தை வைத்திருக்கிற அந்த ஒருவர் வீழ்த்தப்படுவார். அதையடுத்த ஐந்து நிமிடங்களுக்கு நண்டு மாதிரி வியூகம் அமைத்துக் கொண்டு இரு அணியினரும் பந்தை சுற்றி நிற்பார்கள். ஒருத்தர் துணிச்சலாக பந்தை எடுத்து அந்த நண்டின் கால் பகுதியில் நிற்பவரிடம் வீசுவார். பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடிப் போவார் அவர். பத்தடிக்கு ஒரு தடவை பந்தை வைத்திருக்கிற அந்த ஒருவர் வீழ்த்தப்படுவார்.

இப்படி இரு திசையிலும் தேங்கித் தேங்கி ஒரு வெள்ளம் பாயும். ஒரு வழியாக H மாதிரி இருக்கிற கோல் போஸ்ட் கூப்பிடு தூரத்தில் தென்பட்டதும் பந்தைக் கையில் வைத்திருக்கிற புண்ணியவான் “பூம்!” என்று அதை பலம் கொண்ட மட்டும் எட்டி உதைப்பார். எட்டி உதைப்பார் என்று சொன்னால் இந்த உதையின் உக்கிரம் தெரிவதில்லை. ஏறத்தாழ பீரங்கியை விட்டுப் புறப்படுகிற குண்டு மாதிரி அந்தக் கோணல் வடிவ பந்து வெடித்துக் கிளம்பும். ஏறத்தாழ எப்போதும் அது உதைத்தவரின் உத்தேசத்துக்குப் போக்கு காட்டி விட்டு எங்கேயோ போய் விழும்.

சுவாரசியமான விளையாட்டு. நேரம் காலம் போவது தெரியாமல் நண்டு பிடிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். வாழ்க்கை அசுவாரசியப்படுகிற தருணங்களில் எல்லாம் நான் இந்த விளையாட்டைத்தான் பார்ப்பது. நேரம் கிடைக்கும்போது பாருங்கள்-

ரூல்ஸ் ரக்பி பார்த்தால் கனத்த இதயம் கொண்ட தத்துவ மேதைகள் (ஹிஹி…) கடி ஜோக் அடிப்பார்கள் என்று மாம்பலத்தில் கண்டெடுக்கப்படவுள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது- எங்கே என்று கேட்காதீர்கள். இனிதான் ஆர்டர் பண்ண வேண்டும்.

ஏன் சொல்கிறேன் என்றால் அபத்தங்களை அர்த்தமுள்ளதாக மாற்றக்கூடிய ரசவாதம் இந்த விளையாட்டுக்கு உண்டு. அதனால்தானோ என்னவோ நாமெல்லாம் நடக்கிற காரியமா இது என்று தாண்டிச் செல்கிற தீண்டாமைக்கு (discrimination) எதிரான இயக்கத்தை இந்திய ரூல்ஸ் ரக்பி வீரர் ராகுல் போஸ் துவக்கி இருக்கிறார். தீண்டாமை என்றால் வெறுமே ஜாதிக்கு எதிரான இயக்கம் என்று நினைக்காதீர்கள்- நிறம், பணம், ஊனம், மொழி என்று எங்கெங்கு எந்தக் காரணத்தால் மக்கள் தூர ஒதுக்கி நிறுத்தப்பட்டாலும் அது தப்பு, இதை மாற்ற வேண்டும் என்று ஒரு தொண்டு நிறுவனத்தைத் துவக்கி இருக்கிறார் ராகுல் போஸ்.

கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று உங்களில் சிலர் யோசிக்கலாம், ஆமாம், அவரேதான் இவர்.

நடிகர், கதாசிரியர், இயக்குனர், ரூல்ஸ் ரக்பி விளையாட்டு வீரர், தொண்டு நிறுவனக் களப்பணியாளர் என்று பல முகங்கள் இருக்கின்றன இந்த சகலகலா வல்லவருக்கு (மனுஷன் கமலை மிஞ்சிய ஆளாய் இருப்பான் போலிருக்கிறது- யூட்யூபில் ராகுல் போஸ் என்று தட்டச்சு செய்தால் தேடு பொறி Rahul Bose kiss, Rahul Bose kissing, Rahul Bose hot scenes, rahul bose and mallika sherawat என்று குறிப்பெடுத்துத் தருகிறது! )

சரி, விஷயத்துக்கு வருகிறேன் :)

தன் தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்ட வேண்டி இந்திய விளையாட்டு வீரர்கள் தனக்கு தானமாய்க் கொடுத்த நினைவுப் பொருட்கள் இருப்பத்தைந்தை ராகுல் போஸ் இந்நேரம் ஏலம் விட்டிருப்பார். அவற்றைத் திரட்டியது குறித்த அனுபவத்தை இங்கே , தெஹல்காவில் அருமையாக எழுதி இருக்கிறார், படித்துப் பாருங்கள்.

விஸ்வநாதன் ஆனந்த் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் பான் நகரில் தான் வென்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் பதக்கத்தைத் தருகிறார்.

ஆனந்தின் இந்த வெற்றியின் முக்கியத்துவத்தைப் பார்ப்போம்.

”Classical Championship”, “Fide Championship” என்று இரு வகையில் சாம்பியன்கள் தேர்வு செய்யும் நிலையை மாற்றி “Unified Champion”-ஆக ஒருவரைத் தேர்வு செய்யலாம் என்று 2007-ல் முடிவெடுக்கப்பட்டது. அந்தத் தேர்வு Tournament முறையில் அமையும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போதைய Classical Champion-ஆன கிராம்னிக் ஒரு நிபந்தனை விதித்தார். “டோர்னமெண்டில் நான் ஜெயித்தால் நான்தான் சாம்பியன். தோற்றால், ஜெயித்தவருக்கும் எனக்கும் அடுத்த வருடம் ஒரு போட்டி வைக்க வேண்டும்.” இந்த நிபந்தனைக்கு இணங்கியதால் ஆட்டம் நடந்தது. டபிள் ரவுண்ட் ராபின் முறையில் நடந்த போட்டியில், ஆடிய பதினான்கு ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்காமல், ஒன்பது புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை மெக்ஸிகோவில் ஆனந்த் வென்றார்.

இந்தியாவில் ஆர்ப்பாட்டமான வரவேற்பு அவருக்குக் கிடைத்த போதும், “ஆனந்த் நல்ல டோர்னமண்ட் ஆட்டக்காரர் என்று தெரியாதா என்ன? காஸ்பரோவ் போன்ற Classical சாம்பியன்கள் இந்த வகையிலா ஜெயித்தார்கள்? எட்டு பேர் ஆடும் போட்டியில், சரியாக விளையாடாதவரை ஜெயித்து, நல்ல ஆட்டக்காரருடன் டிரா செய்தால் கூட ஜெயித்து விட முடியும். Match format-ல் நடை பெறும் போட்டியில், எதிராளி நல்ல ஆட்டக்காரராக இருந்தால் டிரா செய்து ஒப்பேற்ற முடியாது. ஆனந்த் காஸ்பரோவிடமும், அதற்கு முன் காம்ஸ்கியிடமும் தோற்றதிலிருந்து, இந்த வகைப் போட்டியில் ஆடி ஜெயிக்க போதுமான தன்னம்பிக்கை அவரிடம் இல்லை”, என்ற வாதம் எழ ஆரம்பித்தது. காஸ்பரோவையே match format-ல் வீழ்த்தியவர் கிராம்னிக். “என் பட்டத்தை செஸ் உலகின் நன்மைக்காக, ஆனந்திடம் இரவல் கொடுத்திருக்கிறேன்”, என்று கிராம்னிக் சொன்னபோது அவரை ஆதரித்தவர்கள் எண்ணற்றவர்கள்.

ஆனந்தின் ரசிகர்களும், ரசிகரல்லாதவரும் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்தனர். கிராம்னிக்கும் ‘mind games’ என்ற பெயரில் ஆனந்தை சமயம் கிடைத்த போதெல்லாம் சதாய்த்துக் கொண்டே இருந்தார். ஒரு காலத்தில் ஆனந்தின் ஆலோசனைக் குழுவில் இருந்த பீட்டர் லீகோ, கிராம்னிக்கின் ஆலோசகர்களுள் ஒருவர் என்றபோது, பரபரப்பு உச்சத்தை அடைந்தது. போட்டியின் தொடக்கத்துக்கு முன், ”சாம்பியன் ஆனந்த். அவருடைய சாலஞ்சர் கிராம்னிக்.”, என்பதுதான் உண்மையெனினும், “கிராம்னிக் சாம்பியன். அவரை எதிர்ப்பவர் ஆனந்த்”, என்பது போன்ற மனநிலையை கிராம்னிக் ஏற்படுத்த முயன்றார். இவ்வளவுக்கும் இடையில், ஆனந்த் அமைதியாகவே இருந்தார்.

ஆனந்தின் ஆட்டங்களைப் பார்த்தோமெனில், அவர் பெரும்பான்மையான ஆட்டங்களை ‘e-4′ என்ற கட்டத்திலிருந்து தொடங்குவார். அந்த வகை ஆரம்பங்களை அறவே தவிர்த்து ‘d-4′-லிருந்து ஆட்டத்தைத் தொடங்குவது என்று ஆனந்த் எடுத்த முடிவு கிராம்னிக்கின் ‘e-4′-க்கு எதிரான திட்டங்களை வீணாக்கியது.

அக்டோபர் 2008-ல் தொடங்கிய போட்டியின் முதல் ஆட்டம் மிகச் சாதாரண டிராவில் முடிந்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்தின் கை ஓங்கிய போதும், போதிய நேரமில்லாததால் அந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது. கிராம்னிக் ‘positional play’-ல் வல்லவர். அதாவது, தடாலடியாக காய்களை நகர்த்தாமல், காய்கள் இருக்கும் இடங்களை வைத்துக் கொண்டு சிறிது சிறிதாய் தனக்கு சாதகமாய் ஆட்டத்தை மாற்றிக் கொள்வதில் வல்லவர். இதை உணர்ந்த ஆனந்த், அதிகம் அறியப்படாத, கிராம்னிக்கால் அதிகம் ஆராயப்பட்டிருக்காத position-களை ஆட்டத்தின் சில நகர்த்தல்களுக்குள்ளேயே உருவாக்க ஆரம்பித்தார். தனது திட்டங்களைச் செயல்படுத்துவதை விட்டு, ஆனந்த் உருவாக்கும் புதிய நிலைகளை ஆராய்வதில் கவனம் செய்ய வேண்டியாகிவிட்டது. ’Bb7′ என்ற முற்றிலும் புதியதொரு நகர்த்தல் மூலம் மூன்றாவது ஆட்டத்தை ஆனந்த் கடுமையாகப் போராடி வென்றார்.

கிராம்னிக்கின் விளையாட்டில், அவர் வெற்றிகளுக்கு பெரும்பாலும் வெள்ளைக் காய்களையே நம்பியிருந்தார். தனக்குக் கருப்புக் காய்கள் வாய்க்கும் போதெல்லாம் டிராவை நோக்கியே ஆட்டத்தைச் செலுத்துவார். மூன்றாவது ஆட்டத்தில் வெள்ளைக் காய்களுடன் விளையாடி தோற்றதால், அடுத்த ஆட்டத்தில் கருப்பு காய்களை எபப்டிக் கையாள்கிறார் என்று காண ரசிகர்கள் ஆர்வமாய் இருந்தனர். கிராம்னிக், தன் வழக்கப்படி தற்காத்தே விளையாடி டிராவைப் பெற்றார்.

மூன்றாம் ஆட்டத்தின் தோல்வியை ஆராய்ந்து, அந்த ஆட்டத்தில் தனக்கு வெற்றியை கொடுத்திருக்கக் கூடிய நகர்த்தல்களைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைத்த கிராம்னிக், மூன்றாவது ஆட்டத்தின் நகர்த்தல்களையே ஐந்தாம் ஆட்டத்திலும் ஆடினார். ஆனந்தும் அப்படியே செய்ய, ஆட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராம்னிக்குக்கு வெற்றி கொடுக்கக் கூடிய நகர்த்தல் வருமென்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் ஒரு முறை ஆனந்த் வென்றார். ஆட்டம் முடிந்ததும், “கிராம்னிக் இப்படி ஆடியிருக்க வேண்டுமா?”, என்று பலர் ஆராய்ந்தனர். ஆனால், ஏனோ “ஆனந்த் மூன்றாம் ஆட்டத்தில் ஆடிய படியே ஐந்தாம் ஆட்டத்திலும் ஆடியிருக்க வேண்டுமா?”, என்ற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. கிராம்னிக் எதையோ கண்டுபிடித்திருப்பார். அதனால் இப்படி ஆடுகிறார் என்று நினைத்துப் பதறாமல், தன் ஆட்டத்தின் மேல் ஆனந்த் வைத்திருந்த நம்பிக்கை அசாத்தியமானது.

ஆறாவது ஆட்டத்தில் கிராம்னிக் தன் இயல்புக்கு மாறாக ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனந்தோ, பொறுமையாக கிராம்னிக் எப்படி ஆடி ஜெயிப்பாரோ அந்த வகையில், கொஞ்சம் கொஞ்சமாய் முக்கியமான கட்டங்களைப் பிடித்ததன் மூலம் தன்பக்கத்துக்கு வலு சேர்த்து, பொதுவாய் கிராம்னிக் எப்படி விளையாடி ஜெயிப்பாரோ அது போல ஆட்டத்தை ஜெயித்து. 4.5-1.5 என்ற கணக்கில் முன்னிலை அடைந்தார்.

மொத்தம் பன்னிரண்டு ஆட்டங்கள் கொண்ட போட்டியில், முதலில் 6.5 புள்ளிகள் பெறுபவருக்கு வெற்றி. ஆறு ஆட்டங்களிலேயே முன்னிலை பெற்றுவிட்ட ஆனந்த் வெல்வாரா? அல்லது 1994-ல் காம்ஸ்கியுடன் விளையாடிய போது ஏற்பட்ட சரிவு போல ஆகுமா? என்ற கேள்வி எழும்பியது. மூன்று புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தபோதும், ஆனந்த் தன் வழக்கமான பாணியிலேயே விளையாடினார். அடுத்த மூன்று ஆட்டங்கள், ஆனந்த் டிராவுக்காக ஆடாத போதும், டிராவில் முடிந்து, 6-3 என்று முன்னிலை பெற்றிருந்தார். இன்னும் ஒரு டிரா பெற்றால் பட்டம் என்ற நிலையில், பத்தாவது ஆட்டத்தில் கிராம்னிக் அற்புதமாய் விளையாடினார். கிராம்னிக்கின் திட்டங்களுள் முதல் முறையாக மாட்டிய ஆனந்த், முதல் முறையாகத் தோல்வியுற்றார். முதல் பத்து ஆட்டங்களில் d4-ல் ஆட்டத்தைத் துவங்கி கிராம்னிக்கை அசர வைத்த ஆனந்த், 11-ஆவது ஆட்டத்தில் அவருக்கு ரொம்பப் பழக்கப்பட்ட e-4-ல் ஆட்டத்தைத் துவங்கினார். ஜெயித்தே ஆக வேண்டிய நிலையில் இருந்த கிராம்னிக், ஆட்டத்தை மிகவும் குழப்பமான சுழலுக்குள் தள்ளிய போதும், ஆனந்த் அசராமல் ஈடுகொடுத்தார். இறுதியில் கிராம்னிக் வேறு வழியின்று draw offer கொடுத்தார். 6.5-4.5 என்ற வித்தியாசத்தில், ஆனந்த் மூன்றாவது முறையாக, மூன்றாவது வகையில் உலக சாம்பியன் பட்டம் பெற்றார்.

1990-களில் இருந்து அடை காத்த கனவு 2008-ல் நனவானதின் சின்னமே, பான் நகரில் ஆனந்த் வென்ற பதக்கம்.

ராகுல் போஸ் இந்தப் பதக்கத்தின் முக்கியத்துவம் தெரிந்தவராதலால், “ஏன்? ஏன்? வேற ஏதாவது கொடுக்ககூடாதா?” என்று கேட்கிறார்.

ஆனந்த், “இல்லை இல்லை நீ செய்வது பெரிய வேலை. எடுத்துக் கொள். இது இனி உன்னுடையது, ” என்று சொல்கிறார்.

ஆனந்தின் மனைவி அருணா, ராகுல் போஸை அமர்த்திவிட்டு உள்ளே செல்கிறார். திரும்பி வரும்போது அவர் கையில் ஆனந்த் ஜெயித்த முதல் உலக சாம்பியன்ஷிப் கோப்பை. அதையும் ஏலம் விடக் கொடுக்கிறார் அவர்.

அபினவ் பிந்த்ரா (மறந்திருக்க மாட்டீர்களே?) தான் இருபத்தைந்து பதக்கங்கள் வெல்லக் காரணமாயிருந்த துப்பாக்கியைத் தருகிறார். இந்த இருபத்தைந்தில் அவர் வென்ற உலக சாம்பியன்ஷிப் பதக்கமும், உலக சாதனை செய்து ஜெயித்த மெடலும், அவ்வளவு ஏன், ஒலிம்பிக் சாதனை செய்து வென்ற பதக்கமும் எல்லாம் அடக்கம். அவ்வளவு முக்கியமான துப்பாக்கியைத் தருகிறார் பிந்த்ரா.

சாய்னா நெஹ்வால், கீத் சேதி, டைகர் படோடி, ஹாக்கி வீரர் அஜித் பால் சிங் என்று பலரும் மனமுவந்து பொக்கிஷங்களை தாரை வார்த்துள்ளனர்.

ராகுல் போஸ் இந்தக் கட்டுரையில் ஒரு தத்துவ முத்தை உதிர்க்கிறார். “விளையாட்டு வீரர்களுக்கு உலகம் ஒரு மாயை என்று சொல்லத் தேவை இல்லை. அர்ஜுனன் உலக அளவில் விளையாடி இருந்திருந்தால் கிருஷ்ணர் கீதோபதேசம் செய்திருக்க வேண்டி வந்திருக்காது. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை அப்படி. கணத்துக்கு கணம் வாழ்ந்தாக வேண்டும். வெற்றி தோல்விதான் அவர்களுக்கு அனைத்தும். ஆனால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்றும் தெரிந்து வைத்திருப்பவர்கள் அவர்கள். இன்று எதை நன்றாக செய்ய முடியுமோ, அதை செய்கிறார்கள் அவர்கள். விளையாட்டு வீரர்கள் மாபெரும் தத்துவ மேதைகள்,” என்கிறார் போஸ்.

- சுவாரஸ்ய மேட்டர்கள்: நாட்பாஸ், மொக்கை செஸ் விவரங்கள்: லலிதா ராம்

என்னப்பா இது, கிரிக்கெட் தவிர என்று பேர் போட்ட காரணத்துக்காக நம் வாழும் தெய்வம் சச்சின் கொடுத்த மட்டை குறித்த செய்தியைக் கூட ஈவு இரக்கமில்லாமல் இருட்டடிப்பு செய்யலாமா என்று கேட்கிற கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அவர் தந்த மட்டையும், டைகர் படோடியின் ஜாகெட்டும் இங்கு அடிக்குறிப்பில்தான் வரும்.

சச்சின் டெண்டுகர் பெரிய மனசு பண்ணி நியூ ஜீலாந்து அணிக்கு எதிராக 133 பந்துகளில் 163 ரன்கள் குவித்து சாதனை படைத்த மட்டையை ராகுல் போஸிடம் ஏலம் விடக் கொடுத்திருக்கிறார். இந்த மட்டை சச்சின் அடித்த ஒரு நாள் கோப்பை சதங்களில் நான்காவது பெரிய சதத்தை அடித்துத் தந்திருக்கிறது. உலக அரங்கில் ஏலம் என்றால் ஆனந்தின் பதக்கத்துக்கு அதிகப்படியான வரும்படி இருக்கக் கூடும். இந்தியாவில் ஏலம் நடப்பதால் சச்சினின் மட்டைதான் அதிக விலைக்குப் போகும் என்று சொல்லத் தேவையில்லை.

இந்த வாரம் விளையாட்டு ரசிகர்களுக்கு எக்கெச்செக்க தீனி.

காமன் வெல்த் ஆட்டங்களில் இந்தியா பட்டையை கிளப்புகிறது. துப்பாக்கி சுடுதலை பார்பதற்கு ஒன்றும் சுவாரஸ்யமாக (எனக்கு) இல்லை என்ற போதும் இந்தியா நிறைய பதக்கங்கள் அள்ளியதைக் குறித்து மகிழ்ச்சி.

எனக்கு சுமாராக விளையாட வரும் ஆட்டம் டேபிள் டென்னிஸ் என்பதால், அதனை விரும்பிப் பார்த்தேன். யான்-ஓவ்-வால்ட்னர் காலத்திலிருந்து டேபிள் டென்னிஸை டிவி-யில் தொடர்ந்து பார்க்கும் பிரகஸ்பதி நானாகத்தான் இருப்பேன்.

90-களில் அவரைப் பற்றி எப்போதாவது ஸ்போர்ஸ்டாரில் வரும் செய்திகளை கத்திர்த்து வைத்துக் கொள்வேன். (அவை எல்லாம் எங்கே போயிற்றோ). இந்த காமன் வெல்த் ஆட்டங்களிலும் டேபிள் டென்னிஸை தொடர்ந்து பார்த்தேன்.

குழு ஆட்டங்களில் ஆண்கள் வெங்கலமும், பெண்கள் வெள்ளியும் வென்றனர். சைனா காமன்வெல்தில் இல்லாத நிலையில், தங்கமே வென்றிருக்கலாம். தனி நபர் ஆட்டங்களில் அசந்தா ஷரத்கமல் தங்கம் வெல்வார் என்று நம் இக்கை இருந்தது.அவரும் கவுழ்த்துவிட்டார். எதிர்பாரா வண்ணம் சாஹாவுடன் சேர்ந்து ஷரத் கமல் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார். நேற்று இரவு ஹைலைட்ஸ் பார்த்தேன். த்ரில்லிங் ஆட்டம். ஆளுக்கு இரண்டு செட் வென்ற நிலையில், சாஹா அற்புதமாய் பல அதிரடி ஷாட்கள் ஆடினார். 11-8 என்று கடைசி செட்டை வென்று இன்னொரு தங்கம் இந்தியாவுக்குக் கிடைக்கச் செய்தனர்.

ஹாக்கியிலும், edge of the seat thriller. சினிமாவில் வருவது போல, கடைசி நிமிடம் வரை பின் தங்கி இருந்து, 1-3 deficit-ஐ நீக்கி, பினால்டி ஸ்ட்ரோக்கில் ஒரு கோல் வித்தியாசத்தில் இந்தியா வந்தது. ஷாருக் கான் கேமிராவை கொண்டு வந்திருந்தால், சக்-தே இந்தியா பட ஷூட்டிங் செலவு மிச்சமாயிருக்கும். இந்தியா முதன் முரையாய் இறுதி ஆட்டத்துக்குச் செல்கிறது. ஆஸ்திரேலியாவை வெல்வது கடினம் என்றாலும், India have nothing to lose என்பதால் கவலையின்றி ஆடலாம். ஒருவேளை ஜெயித்தாலும் ஜெயிக்கலாம்.

பேட்மிண்டன் அரை இறுதியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னாவும், இரட்டைஅய்ர் பிரிவில் ஜ்வாலா-அஸ்வினி ஜோடியும் தகுதி பெற்றிருக்கிறது. காட்டிய கொஞ்ச நேரத்தில் இரட்டையர் ஆட்டம் பார்க்க படு சூப்பராய் இருந்தது. வழக்கமாய் ஜ்வாலாதான் அதிரடியில் இறங்குவார். அரை இறுதியில் அஸ்வினி சரமாரியாய் ஸ்மாஷ்களை அள்ளி வீசினார்.

சிங்கபூர் ஜோடியிடம் ஏற்கெனவே குழு ஆட்டங்களில் தோற்றிருந்தாலும், இப்போது ஆடுவது போலத் தொடர்ந்தால் நிச்சயம் தங்க மங்கைகள் ஆகலாம்.

ஒற்றையர் பிரிவில் சாய்னா அரை இறுதியில் சுலபமாக வென்றாலும், ஆட்டத்தில் zing மிஸ்ஸிங். அதிகம் அலட்டிக் கொள்லாமல் ஆடியது போலவே தோன்றியது. முன்பு நடந்த ஆட்டத்தில் போராட்டத்துக்குப் பின் தோற்ற மலேசிய வீராங்கனை வாங் மியூ சூ, இப்போது அடி பட்ட புலியாய் சீறுவார். சாய்னா பழைய துல்லிய ஆட்டத்துக்குத் திரும்பாவிடில் தங்கம் இழக்கும் வாய்ப்பும் உள்ளது.

இங்கிலாந்தும் இந்தியாவும் இரண்டாவது இடத்துக்கு மயிர்பிடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு தங்கமும் மிக மிக முக்கியமானவை.

தங்கம் என்றதும் நினைவுக்கு வருவது தடகள தங்கங்கள்தான். இம்முறை இந்தியாவுக்கு டிஸ்கஸ் த்ரோ மற்றும் 400 மீட்டர் ரிலே ஓட்டம் இரண்டிலும் தங்கம் கிடைத்துள்ளது. டிஸ்கஸில் மூன்று பதக்கங்களையுமே இந்தியர்கள் வென்றுள்ளனர். அதற்கு காரணம் அவர்கள் வீட்டில் கோபத்தில் புருஷன்மார்களை நோக்கி பாத்திரங்களை வீசுவதுதான் என்று ஒரு வதந்தி உலவுகின்றது. ரிலே ரேஸும் பார்க்க விறுவிறுப்பாய் இருந்தது, முதல் இரண்டு leg-ல் பின் தங்கி இருந்த இந்திய அணி, மூன்றாவதில் விட்டததைப் பிடித்து, நான்காவதில் கிடைத்ததைத் தக்க வைத்து தங்கத்தை வென்றது.

கிரிக்கெட்டே கதி என்ற நாட்டில், இது போன்று மற்ற ஆட்டங்களில் உழைத்து, வெற்றியும் பெரும் இவர்களைப் பொன்றவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும். ஜாவா கோர்ஸ், கமாஸில் ஜாவளி, நுனி நாக்கு ஆங்கிலம், அமெரிக்க மாப்பிளை என்று வாழ்க்கையை பிளான் செய்து கொள்ளாமல், சொந்த முயற்சியினால் இது போன்ற தடகள ஆட்டங்களில் தீவிரமாய் ஈடுபடும் வீராங்கனைகளுக்கு ஹாட்ஸ் ஆஃப்.

காமன்வெல்த் தவிர, தலைவர் ஆனந்த் பில்போ-வில் ஆடிக் கொண்டிருக்கிரார். கார்லசனை வென்றதன் மூலம், தற்போதைய தர வரிசையில் உலக நம்பர் 1 ஆகவும் விளங்குகிறார். இதுவரை நடந்த ஆட்டங்களில் 1 வெற்றியும் மூன்று டிராகளும் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். கிராம்னிக் இரண்டு வெற்றிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

கார்ல்சன் சொதப்பலாய் ஆரம்பித்தாலும், இப்போது நன்றாக ஆட ஆரம்பித்துள்ளார். ஷுரோவுடனான ஆட்டம் 175 நகர்த்தல்கள் வரை சென்றது. பல நேரங்களில் கார்சனின் கை ஓங்கி இருந்த போதும், அதை வெற்றியாக்க முடியாமல் போனது. நேற்ரைய ஆட்டத்தில் one-pawn-down நிலையிலும், end game பிஸ்தாவான கிராம்னிக்கிடம் மிகவும் போராடி டிராவைப் பெற்றார். 2009-ல் தொட்டதெல்லாம் தங்கமான கார்ல்சனுக்கு, இந்த வருட ஒலிம்பியாடும், பில்போ மாஸ்டர்ஸும் சறுக்கல்கள்தான். மாடலிங்கில் கவனம், டீனேஜுக்குரிய கவனச் சிதறல்கள், over confidence, திமிர்த்தனன் என்று பல காரணங்களை ரசிகர்கள் கார்ல்சனின் சரிவுக்குக் காரணமாகக் கூறுகின்றனர். சரிவு வராத ஆட்டக்காரரே கிடையாது. இதெயெல்லாம் கார்ல்சன் பொருட்படுத்த மாட்டார் என்றே நினைக்கிறேன். இந்த வருடம் போனால் அடுத்த வருடம். அவருக்கென்ன வயசுக்கா பஞ்சம்?

கலியுக பிரத்யட்ச அவதாரம் என்று பலரால் கன்னத்தில் போட்டுக் கொள்ளப்படும் திருவாளர் ரொஜர் ஃபெடரர் மகராஜ், ஷாங்காயில் ஆடிக் கொண்டிருக்கிறார். எப்படியோ நல்ல படியாய் ஆடி, அடுத்த வருட கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை இன்னும் சில பட்டங்களை வென்று, குறிப்பாய் சம்பிராஸின் விம்பில்டன் ரிக்கார்டை உடைக்க வேண்டி பலர் பூ மிதிக்கு வேண்டிக் கொண்டிருப்பதாக நம்பவே முடியாத வட்டாரச் செய்திகள் கூறுகின்றன.

நேற்று சாய்னா நெஹ்வால் இரு ஆட்டங்களில் வென்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரை இறுதிக்கு தேர்ச்சியுற்றார்.

முதல் ஆட்டத்தில் ஆடிய அயர்லாந்தின் காரொலின் பிளாக்குக்கு நேற்று “பிளாக் அவுட்” என்று சொல்லும் வகையில், 21-0, 21-2 என்று வெகு சுலபமாய் வென்றார். அதிகம் அலட்டிக் கொள்ளாமல் பிளாக்கை வெகு எளிதில் தவறிழைக்க வைத்தார் சாய்னா. ஆட்டம் முடிந்து பேசுகையில், “ஒரு கட்டத்தில் நான் ரேலி ஆட முயன்றேன். ஆனால் பிளாக் பதட்டத்தில் நிறைய முறை கார்க்கை வெளியில் அடித்து பாயிண்டை இழந்தார்”, என்றார்.

அடுத்த ஆட்டத்தில், கனடாவின் ரைஸை எதிர்த்து சாய்னா ஆடினார்.

30 வயது ரைஸ் சாய்னாவின் நெடுங்கால நண்பராம். சில வருடங்களுக்கு முன் வரை ஆட்டங்களின் போது சாய்னாவுக்கு பல அறிவுரைகளைக் கூறுவாராம். குருவை மிஞ்சிய சிஷ்யையாகிவிட்டார் சாய்னா. தன்னை விட வயதில் இளையவர்கள் பலர் வந்துவிட்ட நிலையில், மூன்று நாட்களுக்குள் இரண்டு முறை சாய்னாவிடம் தோற்றுவிட்ட ஆனா ரைஸ், ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார்.

“நான் ஆட வந்த போது, எனக்கு பிரத்யேக பயிற்சியாளர் யாருமில்லை. பல ஆட்டங்களின் போது என் எதிராளிகளைப் பற்றிய, அவர்களை எதிர்கொள்ள வேண்டிய முறைகளைப் பற்றி எல்லாம் ஆனா எனக்கு நிரைய டிப்ஸ் வழங்கியுள்ளார். சில காலம் அவருடன் சேர்ந்து நான் இரட்டையர் ஆட்டம் விளையாடினேன். அதுவும் நான் வளர பேருதவியாய் இருந்தது.”, என்கிறார் சாய்னா.

கண்கள் பனிக்க ஆட்டத்தை விலகினாலும் உள்ளம் ஆட்டத்திலேயே இருப்பதாகக் கூறும் ஆனா, “I know I am not fast enough to compete with these youngsters”, என்றும் கூறுகிறார். ”இப்படி grace-உடன் ரிடையராக இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு எப்போது அறிவு வரும்”, என்று கேட்டார் ஒரு நண்பர் :-) .

சாய்னாவுக்கு தங்கத்துக்கும் இடையே இன்னும் இரு ஆட்டங்களே உள்ளன. அவர் வெல்லும் வரை டெல்லி அரங்கங்கள் அவர் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கும். அவர் ஆட்டம் பார்க்க வரும் கூட்டத்தைத் தவிர, சாய்னா வெல்வதைப் பார்ப்பதற்கே டெல்லி வந்திருக்கும் தீபிகா படுகோனுக்காகவாவது கூட்டம் அலை மோதும்:-)

காமன் வெல்த் போட்டிகள் தொடங்கி 3 நாட்கள் ஓடிவிட்டன. ஆபீஸில் உழைக்க வேண்டிய நிர்பந்தப்படுத்தப் படுவதால், பல ஆட்டங்களைப் பார்க்க முடியவில்லை. ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாய் பார்த்த ஆட்டங்களில் பேட்மிண்டனும், டேபிள் டென்னிஸும் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தன.

குறிப்பாக நேற்றைய பேட்மிண்டன் ஆட்டத்தில் சாய்னா நெஹ்வாலின் ஆட்டம் படு விறுவிறுப்பாய் அமைந்தது.

Of course, It takes two for TangO!.

Wong Mew Choo (என்ன எழவு பேரு இது என்று நாம் நினைத்தாலும் வங்கிபுரப்பு வெங்கடசாய் லட்சுமண் என்ற பெயரைப் படிக்க முயலும் சீன சகோதரனை எண்ணி ஏதும் சொல்லாமல் இருப்ப்பதே உசிதம்;-))…சரி மேட்டருக்கு வருவோம்…

சூ-வை எதிர்த்து சாய்னா களமிறங்கும் போதே இந்தியா 0-2 trailing. கலப்பு இரட்டையர் பிரிவில் ஜ்வாலாவும் (இந்தப் பேர் நல்லா இருக்கு), டிஜுவும் நன்றாக விளையாடினாலும், மூன்றாவது செட்டில் அதீத அதிரடி முயற்சியால் பல தவறுகள் செய்து தோல்வியுற்றனர்.

சாய்னா இந்த ஆண்டே இதற்கு முன் இரு முறை சூ-வை வென்றிருந்தார் என்ற போதும், it was back on the wall situation.

டிடி ஸ்போர்ட்ஸ் உபயத்தால் பாதி நேரம் சாய்னாவின் ஆட்டத்தையும், உபத்ரவத்தால் மெகா சைஸ் கோலி குண்டை உருட்டி இந்தியா இங்கிலாந்திடம் தோற்றதையும் பார்க்க வேண்டியதாகிவிட்டது.  அவ்வாறு பார்த்த போதெல்லாம் சாய்னாவின் கை ஓங்கியே இருந்தது.

முதல் செட்டில் பரபரவென லீடை குவித்து முதலில் 11 புள்ளிகளை அடைந்த சாய்னா, பிரேக்குக்குப் பின் எதிர் கோர்ட்டுக்குச் சென்றார். அப்போதுதான் சூ-வின் மந்திரக்காளி வேலைகள் தொடங்கின. உங்களில் எத்தனை பேருக்கு மைக்கேல் சாங் என்ற டென்னிஸ் வீரரை நினைவில் இருக்கும் என்று தெரியவில்லை. நிச்சயம் திருப்பி அனுப்பவே முடியாது என்று நினைக்கவல்ல ஷாட்-களை எப்படியோ அடைந்து எதிராளியின் கோர்ட்டுக்குள் அனுப்புவதில் வெகு சமர்த்தர். 1989-ல் எட்பர்கின் ஃப்ரென்ச் ஓபன் கனவை ஐந்து செட்டில் தகர்த்தவர். 1-ஸ்லாம் வொண்டர் என்று வரலாறு அவர் பெயரில் முத்திரை குத்திவிட்ட போதும், அவர் ஆட்டத்தை பார்த்தவர்கள் நெஞ்சத்தில் நிச்சயம் இடம் பெற்றிருப்பார்.

நேற்று சூ-வின் ஆட்டம் எனக்கு சாங்கை நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. சாய்னா கச்சிதமாய் அடிக்கும் டிராப் ஷாட்-களை எப்படியோ அடைந்து துல்லியமாய், பேஸ்லைனுக்கு வெகு அருகில், ஆனால் வெளியில் செல்லாமல், லிஃப்ட் செய்த விதம் படு சூப்பர். பற்பல புள்ளிகளில் ராலிகள் வெகு நேரத்துக்கு தொடர்ந்தன. சாய்னா கோர்ட்டின் அத்தனை முனைகளுக்கும் சூ-வை அலைய விட்ட போதும், கார்க்கை திருப்பி அனுப்பி, சாய்னா-வின் சின்ன தவறைக் கூட பயன்படுத்தி துல்லியமாய் ஆடி புள்ளியை வென்று பெரும் நெருக்கடியை உருவாக்கி வந்தார் சூ.

முதல் கேமில் சமநிலை இருந்த போது ஆட்ட ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் அஞ்சல் செய்யப்பட்ட போது சூ முதல் கேமை வென்றிருந்தார். சாய்னா கேம் பாயிண்டுகளை உபயோகித்துக் கொள்ளாத நிலையில் 26-24 என்று சூ வென்றார் என்பதை கழிசடை கமெண்டேடரின் திராபை ஹிந்தியின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

இரண்டாவது கேமிலும் சாய்னா 10-4 என்று முன்னணியில் இருந்தார். பிரேக்குக்குப் பின் சாய்னாவின் தவறுகளாலும் சூ-வின் துல்லிய ஆட்டத்தாலும் ஸ்கோர் சமநிலையை அடைந்தது. ஒரு கட்டத்தில் 15-14 என்று சூ முன்னணியில் இருந்தார். அதன் பின் அதிரடியாய் ஆடாமல், எதிராளி தவறு செய்யும் வரை காத்திருக்கும் ஆட்டத்துக்குத் தாவினார் சாய்னா. Back of the court-ல் இருந்து சாய்னா ஆடிய டிராப் ஷாட்கள், ஸ்மாஷ் செய்வது போன்று பாவ்லா காட்டி கடைசி நிமிடத்தில் ஷாட்டை மாற்றி அதை டிராப்பாக்கிய  சாதுர்யம், mid-court-ல் இருந்தபடி அவர் செய்த அதிவேக interception எல்லாம் காணக் கிடைக்காத காட்சிகள்.

ஒரு வகையில் சாய்னாவின் அற்புத ஆட்டத்தை பார்க்க முடிந்ததற்கு நாம் சூ-விற்குதான் நன்றி சொல்ல வெண்டும்.

மிகுந்த போராட்டத்துக்குப் பின் 21-17 என்று இரண்டாவது கேமை சாய்னா வென்றார்.

மூன்றாவது கேமின் தொடக்கத்திலேயே சூ தளர ஆரம்பித்தார். அவர் நன்றாக விளையாடிய போதும், மனதளவில் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டது போலவே தோன்றியது. முடிந்த வரை போராடினார் என்ற போது, “நிச்சயம் வென்றே ஆக வெண்டும்”, என்ற சாய்னாவின் உறுதி, சூ-விடம் மிஸ்ஸிங். முதல் இரண்டு கேம்களை வைத்துப் பார்க்கும் போது, மூன்றாவது கேம் இந்தியத் தங்க மங்கைக்கு (எப்படியும் சிங்கிள்ஸில் தங்கம் வாங்கிவிடுவார் என்ற நம்பிக்கைதான்) சுலபமாகவே அமைந்தது.  சூ-வின் பல புள்ளிகள் அவரது சிறப்பான ஆட்டத்தால் கிடைத்தது என்று சொல்வதை விட சாய்னாவின் தவறுகளால் கிடைத்ததென்று சொல்வதே பொருத்தம்.

வெற்றியை நெருங்க நெருங்க ரசிகர் கூட்டத்தின் ஆரவாரமும் பெருகியது. ஒரு கட்டத்தில் அரங்கமே “சாய்னாஆஆஆஆ சாய்னா” என்று கோஷமிடத் துவங்கியது.  21-14 என்று மூன்றாவது செட்டை வென்று மலேசியாவுக்கு எதிராக 3-0 என்று கிளீன் ஸ்வீப் ஆகாத வண்ணம் கௌரவத்தைக் காத்தார் சாய்னா.

தனி நபர் பிரிவில், மகளிருக்கான போட்டியில் விரைவில் தங்கம் வெல்வார் என்று நம்புவோம்.

மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் போன்ற ஆட்டங்களில் இந்தியா வென்ற போதும், அந்த ஆட்டங்களின் நுணுக்கங்களை அறியாமல் அவற்றை ரசிக்க முடியவில்லை.

டென்னிஸில் ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் இரண்டிலும் இந்தியாவின் தங்கக் கனவு தங்காமல் போனது. சிங்கிள்ஸ் பிரிவில் சோம்தேவ் வர்மன் வெல்லக் கூடும். சானியா மிர்சாவுக்கு இன்னொரு செத்த பாம்பு கிடைத்தால் அவரும் தங்கம் வெல்வார். ஸ்போர்ஸ்டாரின் ஸ்டார் போஸ்டரில் அவர் படம் வெளி வரக் கூடும்.

இந்த வலைப்பூவை தனி நபராய் நடத்துவது கஷ்டமாக இருக்கிறது.கூட்டுப் பதிவாக நடத்தினால் நிறைய ஆட்டங்களைப் பற்றி எழுத முடியும்.

ஆள் சேர்க்க நான் ரெடி, வந்து சேர நீங்க ரெடியா?

Follow

Get every new post delivered to your Inbox.