தலைப்பைப் பார்த்து இந்தியாவில் நடக்கும் செஸ் போட்டி என்று நினைத்துவிட வேண்டாம்.

காலம் காலமாய் நடந்து வரும் கோரஸ் செஸ் போட்டிதான் டாடாவின் சமீப கால acquisition-க்குப் பின் பெயர் மாறியுள்ளது.

இந்த ஆண்டு டொபலோவ் இல்லை என்ற போதிலும் வலுவான போட்டி. நாளைய சாம்பியன் கார்ல்சன், நாளை மறுநாளைய சாம்பியன் அனிஷ் கிரி (இவர் இந்தியர் அல்ல. பாதி நேபாளி, இப்போதைக்கு டச்சுக்காரர்), போட்டி தொடங்கு நான்கு ரவுண்டு முடிந்து விட்டது.

ஆனந்த் நான்கில் இரண்டு வென்று, 3 புள்ளிகளுடன் (நாகாமுராவும்) முன்னணியில் உள்ளார்.

ஆட்டம் பற்றிய விவரங்கள் எல்லாம் பல தளங்களில் நிறையவே கிடைக்கின்றன என்பதாலும், செய்தி பழசுதான் என்பதாலும், நான் சோம்பேறி என்பதாலும் விவரங்களைத் தவிர்க்கிறேன்.

ஆனந்தின் நான்காவது ரவுண்ட் வெற்றி வெகு அற்புதம்.

கிராம்னிக்குடன் ஆடிய மேட்சுக்குத் தயாரித்த பண்டமாம். இப்போதுதான் வெளியே வந்துள்ளது. ஆனந்த் டோர்ணமெண்டை வென்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதைப் போன்ற பதுக்கல்களை வெளியிடுவது அவசியம்தான். இந்தத் தொடரை வென்றால் ஆனந்த் மீண்டும் நம்பர் 1 ஆக முடியும். (இப்போதே லைவ் ரேட்டிங்கில் ஆகிவிட்டார்).

அந்த ஆட்டத்தைப் பற்றி ஆனந்தே சொல்வதைப் பார்த்து மகிழுங்கள்:

ஆடிய ஆட்டத்தை இவ்வளவு வேகமாக நினைவுக்குக் கொண்டு வர நம்மால் முடியுமா?

சும்மாவா வருவாள் சுகுமாரி?

anand1

உலக சாம்பியன் ஆனந்துக்கு இன்று 41 வயதாகிறது. இன்று காலை விழித்த போது, லைவ் ரேட்டிங்கிலும் நம்பர் 1-ஆக ஆனந்த் பெயர் இருந்திருக்கும். போன வருடம் அவர் பிறந்த நாளன்று சொல்வனத்தில் வெளியான என் கட்டுரையின் மீள் பதிவு.

விஸ்வநாதன் ஆனந்துக்கு இன்று (11, டிசம்பர்) 40 வயது! மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு 25-ஐ தாண்டி வயசாகி பல வருடங்கள் ஓடிவிட்டன என்றால் நம்பக் கஷ்டமாயிருப்பது போல, ஆனந்துக்கு வயசாகி விட்டதென்றாலும் நம்புவது கடினம். இதற்கு அர்த்தம், அவர்கள் உருவத்தில் இளைஞர்களாய் தெரிகிறார்கள் என்பதல்ல. என் சிறு வயது முதலே prodigy-ஆக இவர்களைப் பார்த்துப் பழகிவிட்டு,  திடீர் என்று இவர்களுக்கும் வயதாகிவிட்டது என்றால் நம்பக் கஷ்டமாக இருக்கிறது. நண்பர் பிரகாஷ், சுஜாதா மறைந்த போது, “இவர் எல்லாம் செத்து போவார் என்று கனவில் கூட நினைக்கவில்லையே” என்று சொன்னது போலத்தான் இதுவும்.

பதினேழு வயதில் உலக ஜூனியர் சாம்பியன், பதினெட்டு வயதில் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமை என்று, 1980-களின் கடைசியிலிருந்து வெற்றிகளைக் குவிக்கத் துவங்கிய ஆனந்தால் சதுரங்கத்தின் பக்கம் உந்தப்பட்டோர் ஏராளம். சசிகிரண், ஹரிகிருஷ்ணா, ஹம்பி, நெகி என்று உலக அரங்கில் வெளுத்து வாங்கும் எண்ணற்ற இந்தியர்களின் ஆதர்ச புருஷர் ஆனந்த். எந்த அரங்கிலும் எதுவும் வாங்காத எனக்கும் ஆனந்த்தான் ஆதர்ச புருஷன். 1990-களில், இண்டர்நெட்டில் செஸ் ஆட்டங்களை நேரடியாகப் பார்க்க முடியாத காலங்களில் கூட பேப்பரில் வரும் ஆட்ட நகர்த்தல்களை மணிக்கணக்காய் வைத்துப் பார்த்த எண்ணற்ற பள்ளி மாணவர்களில் நானும் ஒருவன்.

1991-ல் காஸ்பரோவ், கார்போவ் இருவரும் (மற்றும் பலரும்) பங்கு பெற்ற போட்டியில் நிச்சயமான வெற்றியாளராக ஆனந்த் ஜெயித்ததிலிருந்து ஆனந்தின் ஒவ்வொரு ஆட்டத் தொடரையும் தவறாமல், புரிந்தும் புரியாமலும், தொடர்ந்து வருகிறேன். 18 வருடங்களில் எத்தனை ஏற்ற இறக்கங்கள்! அவர் ஜெயித்தபோது மகிழ்ந்து, தோற்றபோது துவண்ட கணங்கள் கணக்கிலடங்கா. ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்னும் துவளாமல் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் ஆனந்தின் வாழ்க்கையில் சதுரங்கத்தைத் தாண்டியும் படிப்பினைகள் உண்டு.

young-anand1எட்டு வயதிலிருந்து போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆனந்தின் முதல் செஸ் குரு அவரது தாய் சுசீலா. இதைப் பற்றி ஒரு நேர்காணலில் கூறிய ஆனந்த், “எனக்கு ஆறு வயதான போது என் அம்மா சதுரங்கம் ஆடச் சொல்லிக் கொடுத்தார். எனக்கு அந்த ஆட்டம் நன்றாக வருவதை உணர்ந்த்தும், தொடர்ந்து உற்சாகப்படுத்தினார். கொஞ்ச நாளில், என் அப்பாவின் பணி நிமித்தமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் சில வருடங்கள் தங்க நேர்ந்தது. அப்போதுதான் பிலிப்பைன்ஸில் ‘Karpov-Korchnoi’ சாம்பியன்ஷிப் ஆட்டம் நடந்து முடிந்திருந்தது. அந்த ஆட்டம் நடந்த இடத்தை நாங்கள் சென்று பார்த்தோம். பின்னாளில் அங்குதான் எனக்கு உலக ஜூனியர் சாம்பியன் பட்டம் கிடைக்கும் என்று நான் அப்போது உணரவில்லை. செஸ் அலை அப்போது அங்கு வீசிக் கொண்டிருந்தது. டிவி-யில் மத்தியான நேரத்தில் சதுரங்கப் புதிர்களை ஒளிபரப்புவார்கள். என் அம்மா அந்தப் புதிர்களைக் குறித்து வைத்துக் கொள்வார். பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், நானும் அம்மாவும் சேர்ந்து விடை கண்டுபிடிப்போம். சரியான விடை சொல்பவருக்கு ஒரு புத்தகம் வழங்குவார்கள். நாங்கள் பல முறை அந்தப் பரிசை வென்றோம். ஒரு நாள், என்னை போட்டி நடத்துபவர்கள் அழைத்து, எங்களிடம் இருக்கும் புத்தகங்களில் உனக்கு வேண்டியவற்றை எல்லாம் எடுத்துக் கொள். ஆனால், இனி போட்டியில் கலந்து கொள்ளாதே. வேறு யாராவது ஜெயிக்கவும் வாய்ப்பு கொடு என்றனர்.”, என்று நினைவு கூர்கிறார்.

தனது பத்தாவது வயதில் இந்தியா திரும்பிய ஆனந்தின் சதுரங்கப் பசிக்கு ‘Tal Chess Club’ தீனி போட்டது. Blitz எனப்படும் வேகமாக விளையாடக்கூடிய ஆட்டங்கள் அங்கு நடை பெற்றன. ஐந்து நிமிடத்துக்குள் ஒரு ஆட்டம் முடிந்து விடும். அந்த கிளப்பின் வழக்கப்படி ஜெயித்தவர் தொடர்ந்து ஆடலாம். பத்து வயது சிறுவனிடம் ஒருவர் மாற்றி ஒருவர் தோல்வியைத் தழுவுவது வழக்கமானது. ஆனந்தின் ஆட்டத்தில் முக்கியமான அம்சம் அவரது வேகம். நொடிப் பொழுதில் காய்களை நகர்த்தும் சாமர்த்தியம், அவர் இள வயதில் ஆடிய Blitz ஆட்டங்கள் மூலமே கிடைத்ததென்று ஆனந்த் கூறியுள்ளார்.

1983 நடந்த தேசிய அளவில் நடந்த போட்டியில், சப்-ஜூனியர் பிரிவில் ஆடிய ஒன்பது ஆட்டங்களிலும் வெற்றியைப் பெற்று பட்டத்தை வென்றதன் பின், International Master பட்டம், தேசிய சாம்பியன் பட்டம் (மூன்று முறை) என்று அடுத்தடுத்து பல வெற்றிகள். Manuel Aaron, Max Euwe என்ற கிராண்ட்மாஸ்டரைத் தோற்கடித்ததே இந்தியாவின் அதிக பட்ச சாதனையாக இருந்த காலகட்டமது. “கிராண்ட்மாஸ்டர் ஆவதில் உள்ள கஷ்டங்கள் நமக்குத் தெரியும் சமயத்தில், நாம் ஒரு கிராண்ட்மாஸ்டரை எதிர்த்து விளையாடும் போது அவர்களை ஒரு பிரமிப்போடு பார்க்கிறோம். அதனாலேயே ஒரு மனத்தடை உருவாகிவிடுவதுண்டு”, என்கிறார் ஆனந்த். 1985-ல் Mestel என்ற கிராண்மாஸ்டரை வென்றபின், வரிசையாகப் பல கிராண்ட்மாஸ்டர்கள் ஆனந்தின் சூராவளி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் வீழ்ந்தனர். இந்தியா கிராண்ட்மாஸ்டரையே பார்த்திராத வேளையில் ஆனந்தின் வெற்றிகள் நம்பிக்கையளித்தன. கல்கத்தாவில் ஒரு முறையும், லண்டனில் ஒரு முறையும், கடைசி ஆட்டத்தை வென்றால் தகுதிக்குத் தேவையான புள்ளிகள் கிடைக்கும் என்ற நிலையில், அரைப் புள்ளி வித்தியாசத்தில் கிராண்ட்மாஸ்டர் தகுதி கிடைக்காமல் போனது. 1987-ல் பிலிப்பைன்ஸில் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றபோது, சர்வதேச சதுரங்க உலகம் அவரைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தது. ஸ்பாஸ்கி, கார்போவ், காஸ்பரோவ் போன்ற உலக சாம்பியன்கள் எல்லாம் ஒரு காலத்தில் உலக ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வருடம், தன் பதினெட்டாவது வயதில் பத்மஸ்ரீ விருதினை ஆனந்த் பெற்றார்.

உலக செஸ் என்றாலே ரஷ்யாதான் என்ற நிலை பத்து வருடங்களுக்கு முன் வரை கூட இருந்தது. கார்ல்ஸன், டொபலோவ், ஆனந்த் என்று ரஷ்யர் அல்லாதவர் முதல் மூன்று இடத்தைப் பிடித்திருக்கும் இந்நாளில் கூட ரஷ்யா ஒரு வலுவான செஸ் நாடாகத்தான் திகழ்கிறது. இள வயதிலேயே திறமை வாய்ந்தவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு முறையான பயிற்சி தரக்கூடிய நல்லதொரு அமைப்பு ரஷ்யாவில் இருந்தது. கார்போவ், காஸ்பரோவ், கிராம்னிக் போன்ற சாம்பியன்கள் எல்லாம் போட்வினிக் ஸ்கூலில் இருந்து வந்தவர்களே. இன்று 17 வயதுக்குள் கார்ல்சனைப் போன்றவர்கள் ரஷ்யாவிலிருந்து வராத போதும், சதுரங்க உலகைக் கோலாச்சவில்லையா என்று கேட்கலாம். அதற்கான பதில், இன்று இருக்கும் கணினியும், இணையமும் அன்றிருக்கவில்லை. சக்தி வாய்ந்த கம்ப்யூடர் எஞ்சின்கள், எண்ணற்ற ஆட்டங்களின் திரட்டல்கள் என்று விரல் சொடுக்கும் நேரத்தில் கணினி கொடுக்கும் விவரங்கள் குவிந்து கிடக்கும் இந்நாளில் ரஷ்யரல்லாத ஒருவர் முன்னணி ஆட்டக்காரராக இருப்பது ஆச்சரியம் இல்லை. தகவல்கள் அதிகம் கிடைக்காத சமயத்தில், ரஷ்யாவில் சாம்பியன்களிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் வசமே சதுரங்கப் பட்டம் நிலைத்து நின்றது. ரஷ்யரல்லாத ஒரே சாம்பியன், அந்தக் காலத்தில் பாபி ஃபிஷர்தான். அவரும் கூட அமெரிக்கா போன்ற ஒரு பணக்கார நாட்டிலிருந்து வந்தவர்.

இந்தியாவில் பிறக்காமல் ரஷ்யாவில் பிறந்திருந்தால் ஆனந்த் என்னவாகியிருப்பார்? அதற்கு ஆனந்த் கூறிய பதில்:

“சோவியத் யூனியனில் வளர்ந்திருந்தால், நான் வேறு விதமாக வளர்ந்திருப்பேன். பயிற்சிக்கான வாய்ப்புகள் எனக்குக் கிடைத்திருக்கக் கூடும். ஆனால், இந்தியனாக இருந்ததில் பல சாதகங்கள் இருந்தன. எட்டாவது சிறந்த ரஷ்யன் என்னைவிட நல்ல பயிற்சியைப் பெற்றிருக்கக் கூடும். ஆனால், அவனுக்குப் பெரிய போட்டிகளில் விளையாட அழைப்பு கிடைக்க அவன் முதல் மூன்று இடங்களுக்குள்ளாகவாவது வர வேண்டியிருக்கும். அந்த அளவு பயிற்சி இல்லாத போதும், நான் ‘சிறந்த இந்தியன்’ என்பதாலேயே எனக்குப் பல போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளை நான் சரி வரப் பயன்படுத்திக் கொண்டேன்.”

சில புத்தகங்களையும், Tal club-ல் விளயாடக் கிடைக்கும் வாய்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு, சென்னையில் வளர்ந்த சிறுவன் உலக ஜூனியர் பட்டம் வெல்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை, அந்தக் காலகட்டத்தோடு பொருத்திப் பார்க்கும் போது உணர முடியும். 1991-க்கு முற்பட்ட இந்தியாவில் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவத்தை பின்வருமாறு ஆனந்த் ஒரு நேர்காணலில் நினைவுகூர்ந்துள்ளார்.

“வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தேவையான அன்னியச் செலாவணியை வாங்க முதலில் டில்லிக்குச் சென்று விளையாட்டி அமைச்சகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களின் ஒப்புதலுக்குப் பின், Civil aviation ministry-க்குச் சென்றால், அவர்கள் ஏர் இண்டியாவில் டிக்கெட் கொடுப்பார்கள். அந்த டிக்கெட் இருந்தால்தான் அன்னியச் செலாவணியைப் பெற முடியும். அதை வாங்க டில்லியில் ஒரு ஸ்டேட் பாங்க் கிளையும், ஒரு தாமஸ் குக் கிளையும் இருந்தன.  ஏர் இண்டியா டிக்கட் மாலை ஐந்து மணிக்குத்தான் கிடைக்கும். அதற்குள் SBI மூடிவிடும். அதனால் தாம்ஸ் குக் செல்வோம். அன்னியச் செலாவணியைப் பெறவே இரவு 9 மணி ஆகிவிடும். இரவு 11 மணிக்கு விமானம் ஏற வேண்டியிருக்கும். சென்னையிலிருந்து கொழும்புக்குச் செல்ல வேண்டும் என்றால் கூட, டில்லி சென்று ஒப்புதல் பெற்றுதான் ஸ்ரீலங்கா செல்ல முடியும். சில சமயங்களில் அமைச்சகங்களிலிருந்து வர வேண்டிய ஒப்புதலில் நிகழ்ந்த தாமதங்களால், போட்டிகள் தொடங்கிய பின் கூடச் சென்று விளையாடியிருக்கிறேன்.”

1987 உலக ஜூனியர் பட்டம் பெற்ற அடுத்த ஆண்டே, டில்லியிலும் கோயம்பத்தூரிலும் வென்றதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் தகுதியையும் ஆனந்த் பெற்றார். அதன்பின் எண்ணற்ற ஆட்டங்களில் வெற்றி பெற்று, லயோலா கல்லூரியில் பி.காம் படிப்பை முடிக்கும் போது உலகத் தர வரிசையில் ஐந்தாம் இடத்தில் இருந்தார். உலக அளவில் ஆடும் போதும், பயங்கர வேகத்தில் காய்களை நகர்த்திய ஆனந்தை ‘Tiger from Madras’ என்றழைத்தனர். 1991-ல் அறிமுகமான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினைப் பெற்ற பெருமையும் ஆனந்தை வந்தடைந்தது.

அப்போது செஸ் உலகு, Fide, PCA என்ற இரு அமைப்புகளாக பிளவுண்டிருந்தது. ஒரு பக்கம் கார்போவ் சாம்பியன். மறு பக்கம் காஸ்பரோவ் சாம்பியன். இவர்களை எதிர்த்து விளையாட இரு அமைப்புகளும் தகுதிச் சுற்றுகள் மூலம் ஆட்களை தேர்வு செய்தன. 1994-ல் FIDE cycle-ன் காலிறுதிப் போட்டியில் காம்ஸ்கியை எதிர்த்து விளையாடினார் ஆனந்த். இந்தியாவில் நடந்த அந்த ஆட்டத்தில், மளமளவென வெற்றிகளைக் குவித்தார். அவர் பெற்ற வெற்றிகளே அவருக்கு எமனாகின. காம்ஸ்கியை விட அதிக புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், இருக்கும் முன்னிலையைத் தக்க வைத்துக் கொண்டாலே போதுமான நிலையில், ரொம்பவே தற்காப்பாக ஆடியதால் தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்க நேரிட்டது. வெற்றியின் விளிம்பிலிருந்த ஆனந்த், யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஆட்டத்தை இழந்தார்.

anand-kasparov1995-ல் PCA Cycle-லிலும் ஆனந்தும் காம்ஸ்கியும் பல வெற்றிகளைக் குவித்தனர். Candidates இறுதிப்போட்டி ஆனந்துக்கும் காம்ஸ்கிக்கும் இடையே ஏற்பட்டது. இம்முறை ஆனந்த் சுலபமாக வென்று, உலக சாம்பியன் பட்டத்துக்காக காஸ்பரோவுடன் மோதினார். நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் நடை பெற்ற அந்தப் போட்டியில் முதல் எட்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. ஒன்பதாவது ஆட்டத்தை ஆனந்த் வென்ற போதும், அடுத்த ஐந்து ஆட்டங்களில் நான்கைத் தோற்றார். 10.5-7.5 என்ற வித்தியாசத்தில் காஸ்பரோவ் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார். ஆனந்தின் சதுரங்க வாழ்வின் மிகப் பெரிய சறுக்கல் என்றே அதைக் கூற வேண்டும். “சில ஆட்டங்களில் நான் நன்றாக விளையாடவில்லை. ஆனால் இத்தோடு என் வாழ்க்கை முடிந்துவிடவில்லை”, என்று ஆனந்த் சொன்னதை, என்னைப் போன்ற தீவிர ஆனந்த் ரசிகர்கள்தான் நம்பியிருக்கக் கூடும்.  ஆனால், சொன்ன படியே செய்து காட்டி உலகின் முதல் மூன்று ஆட்டக்காரர்களுள் ஒருவராக 1996-ல் இடம் பிடித்தார்.

1997-ல் ஆனந்தின் ஏறுமுகம் மீண்டும் தொடங்கியது. பல போட்டிகளில் வெற்றி வாகை சூடிக் கொண்ட போதும், உலக சாம்பியன் என்ற பட்டம் பெற ஆனந்த் 2000 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. 2000-ல், தெஹரானில் நடந்த இறுதிப் போட்டியில் 3.5-0.5 என்ற வித்தியாசத்தில் ஷிரோவை வென்றதன் மூலம் உலக சாம்பியன் ஆனார். ஒரு உலக சாம்பியன் கிடைத்துவிட்டதை எண்ணி இந்தியா மகிழ்ந்திருந்த போதிலும், ‘Knock-out’ முறையில் நடத்தப்பட்ட போட்டியை, ஏற்காத பலரும் இருந்தனர். ”128 பேரில் ஆரம்பித்து, கடைசியில் ஒருவர் ஜெயிப்பதை விட, இருவர் பல ஆட்டங்கள் விளையாடி, கடைசியில் ஒருவர் ஜெயிக்கும் முறையில்தான் அனைத்து பெயர் பெற்ற சாம்பியன்களும் பட்டத்தை வென்றிருக்கின்றனர். அப்படி ஜெயிக்காத ஒருவர் உண்மையான சாம்பியன் ஆக முடியாது. காலிஃப்மென், பொனோமரியோவ் போன்ற FIDE knock out சாம்பியன்கள் வரிசையில் ‘also ran’-ஆகத்தான் ஆனந்தைக் கொள்ள முடியும்.” என்ற வாதமும் அப்போது பரவி இருந்தது. குறிப்பாக, அப்போது நம்பர் 1-ஆக இருந்த காஸ்பரோவை எதிர்த்து விளையாடாமல் ஆனந்த் பெற்ற வெற்றியின் மூலம் அவரை சாம்பியனாகக் கொள்ள முடியாது என்ற வாதமும் வலுவாக இருந்தது. இவற்றை எல்லாம் ஆனந்த் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஜெயித்த போதும் தோற்ற போதும் சலனமில்லாமல் இருப்பதே ஆனந்தின் நெடுநாள் வெற்றிக்கு முக்கிய காரணம்.

2002-ல் FIDE champion பட்டத்தை இழந்த பிறகு, Classical Chess-ல்fide-champion ஆனந்துக்கு அவ்வப்போது சறுக்கல்கள் ஏற்பட்ட போதும், Rapid Chess-ல் முடிசூடா மன்னன் இவர்தான் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. டென்னிஸில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் போல், சதுரங்கத்தில், Dortmund, Linares மற்றும் Corus Tournaments-ஐ கொள்ளலாம். இந்த மூன்று போட்டிகளையும் மூன்று முறையாவது வென்ற பெருமை ஆனந்தைச் சேரும். 64 என்ற சதுரங்கப் பத்திரிகை அளிக்கும் செஸ் ஆஸ்கர் என்ற விருது, உலக ஆட்டக்காரர்கள், செஸ் பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்கள் ஆகியோரிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் மூலம் வழங்கப் படும் விருது. 1997-ல் தொடங்கி, இந்த விருதினை ஆறு முறை பெற்ற ரஷ்யரல்லாதவர் ஆனந்த் ஒருவர்தான். (காஸ்பரோவும் கார்போவும் ஆனந்தை விட அதிக முறை இந்த விருதினைப் பெற்றவர்கள்.)  2000-ல் பத்ம பூஷண் விருதும் அவருக்குக் கிடைத்தது.

ஆனந்தின் சிறப்பு அவரது வேகம். அந்த வேகத்துக்குக் காரணம், அவருக்கு இருக்கும் அபாரமான உள்ளுணர்வு. ஒரு நகர்த்தலை, அதன் ஆழங்களுக்குச் செல்லாத போதும் கூட சரியானதா, இல்லையா என்று உணரச் செய்யும் உள்ளுணர்வு அபாரமானது. இந்த முறையில் விளையாடுவது, ஒரு சாதாரணனுக்கு மிகவும் அபாயகரமாக முடியக் கூடும். இப்படிப்பட்ட விபரீதமான முறையில் விளையாடிய போதும், பல வெற்றிகளைக் குவித்ததோடன்றி, எதிர்த்து விளையாடுபவரின் complicated home preparation-ஐ கூட துல்லியமாக defend செய்யக் கூடிய ஆனந்தின் ஆற்றல் வியப்பானது!

கணினியின் வருகை சதுரங்க உலகையே கலக்கிப் போட்டது. ‘Deep Blue’ என்ற செஸ் கணினியிடம் காஸ்பரோவ் தோற்ற போது பெரும் அதிர்ச்சி அலை எழும்பியது. காலப்போக்கில் கணினியின் பயனை வீரர்கள் உணர ஆரம்பித்தனர். கணினி இல்லாத காலத்தில் தொடங்கினாலும், வலிமை வாய்ந்த கணினிகள் துணை கொண்டு ஆய்வுகள் புரியக் கூடிய காலத்திற்கு ஏற்ப, தன் ஆட்டத்தை ஆனந்த் மாற்றிக் கொண்டது தனிச் சிறப்பு. காஸ்பரோவ் அறிமுகம் செய்த ‘Advanced Chess’ என்ற வகை ஆட்டத்தில், போட்டியின் போதே கணினியின் உதவியை நாடலாம். இந்த வகை ஆட்டம் நடை பெறும் Leon Tournament-ஐ பல முறை வென்ற பெருமையும் ஆனந்தைச் சாரும்.

2007-ல் Linares போட்டியை வென்ற போது, உலக தர வரிசையில் ஆனந்த் முதல் இடத்தைப் பெற்றார். ELO Rating-ல் 2800 புள்ளிகளைத் தாண்டியுள்ள சொற்பமானவர்களில் ஆனந்தும் ஒருவர் என்பது குறிப்படத்தக்கது. அந்த வருடம் அவருக்கு ‘பத்ம விபூஷண்’ அளித்ததன் மூலம் ஜனாதிபதி பெருமை தேடிக் கொண்டார்.

”Classical Championship”, “Fide Championship” என்று இரு வகையில் சாம்பியன்கள் தேர்வு செய்யும் நிலையை மாற்றி “Unified Champion”-ஆக ஒருவரைத் தேர்வு செய்யலாம் என்று 2007-ல் முடிவெடுக்கப்பட்டது. அந்தத் தேர்வு Tournament முறையில் அமையும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போதைய Classical Champion-ஆன கிராம்னிக் ஒரு நிபந்தனை விதித்தார். “டோர்னமெண்டில் நான் ஜெயித்தால் நான்தான் சாம்பியன். தோற்றால், ஜெயித்தவருக்கும் எனக்கும் அடுத்த வருடம் ஒரு போட்டி வைக்க வேண்டும்.” இந்த நிபந்தனைக்கு இணங்கியதால் ஆட்டம் நடந்தது. டபிள் ரவுண்ட் ராபின் முறையில் நடந்த போட்டியில், ஆடிய பதினான்கு ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்காமல், ஒன்பது புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை மெக்ஸிகோவில் ஆனந்த் வென்றார். அப்போது ஒவ்வொரு ஆட்டத்தையும் இரவு எவ்வளவு நேரமானாலும் இணையத்தின் வழி ரசித்த எண்ணற்ற சதுரங்க ரசிகர்களுள் நானும் ஒருவன்.

மீண்டும், இந்தியாவில் ஆர்ப்பாட்டமான வரவேற்பு அவருக்குக் கிடைத்த போதும், “ஆனந்த் நல்ல டோர்னமண்ட் ஆட்டக்காரர் என்று தெரியாதா என்ன? காஸ்பரோவ் போன்ற Classical சாம்பியன்கள் இந்த வகையிலா ஜெயித்தார்கள்? எட்டு பேர் ஆடும் போட்டியில், சரியாக விளையாடாதவரை ஜெயித்து, நல்ல ஆட்டக்காரருடன் டிரா செய்தால் கூட ஜெயித்து விட முடியும். Match format-ல் நடை பெறும் போட்டியில், எதிராளி நல்ல ஆட்டக்காரராக இருந்தால் டிரா செய்து ஒப்பேற்ற முடியாது. ஆனந்த் காஸ்பரோவிடமும், அதற்கு முன் காம்ஸ்கியிடமும் தோற்றதிலிருந்து, இந்த வகைப் போட்டியில் ஆடி ஜெயிக்க போதுமான தன்னம்பிக்கை அவரிடம் இல்லை”, என்ற வாதம் எழ ஆரம்பித்தது. காஸ்பரோவையே match format-ல் வீழ்த்தியவர் கிராம்னிக். “என் பட்டத்தை செஸ் உலகின் நன்மைக்காக, ஆனந்திடம் இரவல் கொடுத்திருக்கிறேன்”, என்று கிராம்னிக்  சொன்னபோது அவரை ஆதரித்தவர்கள் எண்ணற்றவர்கள்.

ஆனந்தின் ரசிகர்களும், ரசிகரல்லாதவரும் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்தனர். கிராம்னிக்கும் ‘mind games’ என்ற பெயரில் ஆனந்தை சமயம் கிடைத்த போதெல்லாம் சதாய்த்துக் கொண்டே இருந்தார். ஒரு காலத்தில் ஆனந்தின் ஆலோசனைக் குழுவில் இருந்த பீட்டர் லீகோ, கிராம்னிக்கின் ஆலோசகர்களுள் ஒருவர் என்றபோது, பரபரப்பு உச்சத்தை அடைந்தது. போட்டியின் தொடக்கத்துக்கு முன், ”சாம்பியன் ஆனந்த். அவருடைய சாலஞ்சர் கிராம்னிக்.”, என்பதுதான் உண்மையெனினும், “கிராம்னிக் சாம்பியன். அவரை எதிர்ப்பவர் ஆனந்த்”, என்பது போன்ற மனநிலையை கிராம்னிக் ஏற்படுத்த முயன்றார். இவ்வளவுக்கும் இடையில், ஆனந்த் அமைதியாகவே இருந்தார்.

ஆனந்தின் ஆட்டங்களைப் பார்த்தோமெனில், அவர் பெரும்பான்மையான ஆட்டங்களை ‘e-4′ என்ற கட்டத்திலிருந்து தொடங்குவார். அந்த வகை ஆரம்பங்களை அறவே தவிர்த்து ‘d-4′-லிருந்து ஆட்டத்தைத் தொடங்குவது என்று ஆனந்த் எடுத்த முடிவு கிராம்னிக்கின் ‘e-4′-க்கு எதிரான திட்டங்களை வீணாக்கியது.

அக்டோபர் 2008-ல் தொடங்கிய போட்டியின் முதல் ஆட்டம் மிகச் சாதாரண டிராவில் முடிந்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்தின் கை ஓங்கிய போதும், போதிய நேரமில்லாததால் அந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது. கிராம்னிக் ‘positional play’-ல் வல்லவர். அதாவது, தடாலடியாக காய்களை நகர்த்தாமல், காய்கள் இருக்கும் இடங்களை வைத்துக் கொண்டு சிறிது சிறிதாய் தனக்கு சாதகமாய் ஆட்டத்தை மாற்றிக் கொள்வதில் வல்லவர். இதை உணர்ந்த ஆனந்த், அதிகம் அறியப்படாத, கிராம்னிக்கால் அதிகம் ஆராயப்பட்டிருக்காத position-களை ஆட்டத்தின் சில நகர்த்தல்களுக்குள்ளேயே உருவாக்க ஆரம்பித்தார். தனது திட்டங்களைச் செயல்படுத்துவதை விட்டு, ஆனந்த் உருவாக்கும் புதிய நிலைகளை ஆராய்வதில் கவனம் செய்ய வேண்டியாகிவிட்டது. ’Bb7′ என்ற முற்றிலும் புதியதொரு நகர்த்தல் மூலம் மூன்றாவது ஆட்டத்தை ஆனந்த் கடுமையாகப் போராடி வென்றார்.

கிராம்னிக்கின் விளையாட்டில், அவர் வெற்றிகளுக்கு பெரும்பாலும் வெள்ளைக் காய்களையே நம்பியிருந்தார். தனக்குக் கருப்புக் காய்கள் வாய்க்கும் போதெல்லாம் டிராவை நோக்கியே ஆட்டத்தைச் செலுத்துவார்.  மூன்றாவது ஆட்டத்தில் வெள்ளைக் காய்களுடன் விளையாடி தோற்றதால், அடுத்த ஆட்டத்தில் கருப்பு காய்களை எபப்டிக் கையாள்கிறார் என்று காண ரசிகர்கள் ஆர்வமாய் இருந்தனர். கிராம்னிக், தன் வழக்கப்படி தற்காத்தே விளையாடி டிராவைப் பெற்றார்.

மூன்றாம் ஆட்டத்தின் தோல்வியை ஆராய்ந்து, அந்த ஆட்டத்தில் தனக்கு வெற்றியை கொடுத்திருக்கக் கூடிய நகர்த்தல்களைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைத்த கிராம்னிக், மூன்றாவது ஆட்டத்தின் நகர்த்தல்களையே ஐந்தாம் ஆட்டத்திலும் ஆடினார். ஆனந்தும் அப்படியே செய்ய, ஆட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராம்னிக்குக்கு வெற்றி கொடுக்கக் கூடிய நகர்த்தல் வருமென்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் ஒரு முறை ஆனந்த் வென்றார். ஆட்டம் முடிந்ததும், “கிராம்னிக் இப்படி ஆடியிருக்க வேண்டுமா?”, என்று பலர் ஆராய்ந்தனர். ஆனால், ஏனோ “ஆனந்த் மூன்றாம் ஆட்டத்தில் ஆடிய படியே ஐந்தாம் ஆட்டத்திலும் ஆடியிருக்க வேண்டுமா?”, என்ற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. கிராம்னிக் எதையோ கண்டுபிடித்திருப்பார். அதனால் இப்படி ஆடுகிறார் என்று நினைத்துப் பதறாமல், தன் ஆட்டத்தின் மேல் ஆனந்த் வைத்திருந்த நம்பிக்கை அசாத்தியமானது.

ஆறாவது ஆட்டத்தில் கிராம்னிக் தன் இயல்புக்கு மாறாக ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனந்தோ, பொறுமையாக கிராம்னிக் எப்படி ஆடி ஜெயிப்பாரோ அந்த வகையில், கொஞ்சம் கொஞ்சமாய் முக்கியமான கட்டங்களைப் பிடித்ததன் மூலம் தன்பக்கத்துக்கு வலு சேர்த்து, பொதுவாய் கிராம்னிக் எப்படி விளையாடி ஜெயிப்பாரோ அது போல ஆட்டத்தை ஜெயித்து. 4.5-1.5 என்ற கணக்கில் முன்னிலை அடைந்தார்.

மொத்தம் பன்னிரண்டு ஆட்டங்கள் கொண்ட போட்டியில், முதலில் 6.5 புள்ளிகள் பெறுபவருக்கு வெற்றி. ஆறு ஆட்டங்களிலேயே முன்னிலை பெற்றுவிட்ட ஆனந்த் வெல்வாரா? அல்லது 1994-ல் காம்ஸ்கியுடன் விளையாடிய போது ஏற்பட்ட சரிவு போல ஆகுமா?  என்ற கேள்வி எழும்பியது. மூன்று புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தபோதும், ஆனந்த் தன் வழக்கமான பாணியிலேயே விளையாடினார். அடுத்த மூன்று ஆட்டங்கள், ஆனந்த் டிராவுக்காக ஆடாத போதும், டிராவில் முடிந்து, 6-3 என்று முன்னிலை பெற்றிருந்தார். இன்னும் ஒரு டிரா பெற்றால் பட்டம் என்ற நிலையில், பத்தாவது ஆட்டத்தில் கிராம்னிக் அற்புதமாய் விளையாடினார். கிராம்னிக்கின் திட்டங்களுள் முதல் முறையாக மாட்டிய ஆனந்த், முதல் முறையாகத் தோல்வியுற்றார். முதல் பத்து ஆட்டங்களில் d4-ல் ஆட்டத்தைத் துவங்கி கிராம்னிக்கை அசர வைத்த ஆனந்த், 11-ஆவது ஆட்டத்தில் அவருக்கு ரொம்பப் பழக்கப்பட்ட e-4-ல் ஆட்டத்தைத் துவங்கினார். ஜெயித்தே ஆக வேண்டிய நிலையில் இருந்த கிராம்னிக், ஆட்டத்தை மிகவும் குழப்பமான சுழலுக்குள் தள்ளிய போதும், ஆனந்த் அசராமல் ஈடுகொடுத்தார். இறுதியில் கிராம்னிக் வேறு வழியின்று draw offer கொடுத்தார். 6.5-4.5 என்ற வித்தியாசத்தில், ஆனந்த் மூன்றாவது முறையாக, மூன்றாவது வகையாக உலக சாம்பியன் பட்டம் பெற்றார்.

ஆனந்த் - க்ராம்னிக் 'Final Handshake'ஆனந்த் – க்ராம்னிக் ‘Final Handshake’ 

இம்முறை யாராலும் அவரது பட்டத்தைக் குறை சொல்ல முடியவில்லை. “மேதை என்றால் மனப்பிறழ்வு  (eccentricity) இருக்க வேண்டும். நல்ல ஆட்டக்காரர் என்றால் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள வேண்டும்”, என்பவை செஸ் உலகின் நிதர்சன நியதிகள். இது வரை எந்த சர்ச்சையிலும் மாட்டிக் கொள்ளாத ஆனந்த், “Nice guys always come second”, என்பதைத் தன் விடாமுயற்சியால் பொய்யாக்கியவர்.

“Knock out format”, “Tournament Format”, “Match Format” ஆகிய மூன்றிலும் வெற்றி வாகை சூடிய ஒரே சாம்பியன் ஆனந்த்தான்.

நாற்பது வயதைத் தாண்டியும் விளையாடிக் கொண்டிருந்த இவான்சுக்கும் சில வாரங்கள் முன் தன் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், தன்னை விட பாதி வயதானவர்கள் பலருடன் இன்னும் உற்சாகமாய்ப் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார் ஆனந்த். தரவரிசையில் முதல் பத்து இடங்களில் மூத்தவர் ஆனந்த்தான். இன்னும் கொஞ்ச நாளில் பல்கேரியாவைச் சேர்ந்த டொபலோவுடன், தன் சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மோதுகிறார்.

1996-ல் தொடங்கி இன்று வரை (2008-ல் சில மாதங்கள் தவிர) உலகின் முதல் மூன்று ஆட்டக்காரர்களுள் ஒருவராக இருக்கும் ஆனந்த் வாழும் போதே நானும் வாழ்ந்து, அவர் ஆட்டங்களை ரசிக்கக் கொடுத்து வைத்திருப்பது எனக்குக் கிடைத்திருக்கும் பெரும் பேறு.

பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடிப் போவார் ஒருவர். பத்தடிக்கு ஒரு தடவை பந்தை வைத்திருக்கிற அந்த ஒருவர் வீழ்த்தப்படுவார். அதையடுத்த ஐந்து நிமிடங்களுக்கு நண்டு மாதிரி வியூகம் அமைத்துக் கொண்டு இரு அணியினரும் பந்தை சுற்றி நிற்பார்கள். ஒருத்தர் துணிச்சலாக பந்தை எடுத்து அந்த நண்டின் கால் பகுதியில் நிற்பவரிடம் வீசுவார். பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடிப் போவார் அவர். பத்தடிக்கு ஒரு தடவை பந்தை வைத்திருக்கிற அந்த ஒருவர் வீழ்த்தப்படுவார்.

இப்படி இரு திசையிலும் தேங்கித் தேங்கி ஒரு வெள்ளம் பாயும். ஒரு வழியாக H மாதிரி இருக்கிற கோல் போஸ்ட் கூப்பிடு தூரத்தில் தென்பட்டதும் பந்தைக் கையில் வைத்திருக்கிற புண்ணியவான் “பூம்!” என்று அதை பலம் கொண்ட மட்டும் எட்டி உதைப்பார். எட்டி உதைப்பார் என்று சொன்னால் இந்த உதையின் உக்கிரம் தெரிவதில்லை. ஏறத்தாழ பீரங்கியை விட்டுப் புறப்படுகிற குண்டு மாதிரி அந்தக் கோணல் வடிவ பந்து வெடித்துக் கிளம்பும். ஏறத்தாழ எப்போதும் அது உதைத்தவரின் உத்தேசத்துக்குப் போக்கு காட்டி விட்டு எங்கேயோ போய் விழும்.

சுவாரசியமான விளையாட்டு. நேரம் காலம் போவது தெரியாமல் நண்டு பிடிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். வாழ்க்கை அசுவாரசியப்படுகிற தருணங்களில் எல்லாம் நான் இந்த விளையாட்டைத்தான் பார்ப்பது. நேரம் கிடைக்கும்போது பாருங்கள்-

ரூல்ஸ் ரக்பி பார்த்தால் கனத்த இதயம் கொண்ட தத்துவ மேதைகள் (ஹிஹி…) கடி ஜோக் அடிப்பார்கள் என்று மாம்பலத்தில் கண்டெடுக்கப்படவுள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது- எங்கே என்று கேட்காதீர்கள். இனிதான் ஆர்டர் பண்ண வேண்டும்.

ஏன் சொல்கிறேன் என்றால் அபத்தங்களை அர்த்தமுள்ளதாக மாற்றக்கூடிய ரசவாதம் இந்த விளையாட்டுக்கு உண்டு. அதனால்தானோ என்னவோ நாமெல்லாம் நடக்கிற காரியமா இது என்று தாண்டிச் செல்கிற தீண்டாமைக்கு (discrimination) எதிரான இயக்கத்தை இந்திய ரூல்ஸ் ரக்பி வீரர் ராகுல் போஸ் துவக்கி இருக்கிறார். தீண்டாமை என்றால் வெறுமே ஜாதிக்கு எதிரான இயக்கம் என்று நினைக்காதீர்கள்- நிறம், பணம், ஊனம், மொழி என்று எங்கெங்கு எந்தக் காரணத்தால் மக்கள் தூர ஒதுக்கி நிறுத்தப்பட்டாலும் அது தப்பு, இதை மாற்ற வேண்டும் என்று ஒரு தொண்டு நிறுவனத்தைத் துவக்கி இருக்கிறார் ராகுல் போஸ்.

கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று உங்களில் சிலர் யோசிக்கலாம், ஆமாம், அவரேதான் இவர்.

நடிகர், கதாசிரியர், இயக்குனர், ரூல்ஸ் ரக்பி விளையாட்டு வீரர், தொண்டு நிறுவனக் களப்பணியாளர் என்று பல முகங்கள் இருக்கின்றன இந்த சகலகலா வல்லவருக்கு (மனுஷன் கமலை மிஞ்சிய ஆளாய் இருப்பான் போலிருக்கிறது- யூட்யூபில் ராகுல் போஸ் என்று தட்டச்சு செய்தால் தேடு பொறி Rahul Bose kiss, Rahul Bose kissing, Rahul Bose hot scenes, rahul bose and mallika sherawat என்று குறிப்பெடுத்துத் தருகிறது! )

சரி, விஷயத்துக்கு வருகிறேன் :)

தன் தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்ட வேண்டி இந்திய விளையாட்டு வீரர்கள் தனக்கு தானமாய்க் கொடுத்த நினைவுப் பொருட்கள் இருப்பத்தைந்தை ராகுல் போஸ் இந்நேரம் ஏலம் விட்டிருப்பார். அவற்றைத் திரட்டியது குறித்த அனுபவத்தை இங்கே , தெஹல்காவில் அருமையாக எழுதி இருக்கிறார், படித்துப் பாருங்கள்.

விஸ்வநாதன் ஆனந்த் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் பான் நகரில் தான் வென்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் பதக்கத்தைத் தருகிறார்.

ஆனந்தின் இந்த வெற்றியின் முக்கியத்துவத்தைப் பார்ப்போம்.

”Classical Championship”, “Fide Championship” என்று இரு வகையில் சாம்பியன்கள் தேர்வு செய்யும் நிலையை மாற்றி “Unified Champion”-ஆக ஒருவரைத் தேர்வு செய்யலாம் என்று 2007-ல் முடிவெடுக்கப்பட்டது. அந்தத் தேர்வு Tournament முறையில் அமையும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போதைய Classical Champion-ஆன கிராம்னிக் ஒரு நிபந்தனை விதித்தார். “டோர்னமெண்டில் நான் ஜெயித்தால் நான்தான் சாம்பியன். தோற்றால், ஜெயித்தவருக்கும் எனக்கும் அடுத்த வருடம் ஒரு போட்டி வைக்க வேண்டும்.” இந்த நிபந்தனைக்கு இணங்கியதால் ஆட்டம் நடந்தது. டபிள் ரவுண்ட் ராபின் முறையில் நடந்த போட்டியில், ஆடிய பதினான்கு ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்காமல், ஒன்பது புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை மெக்ஸிகோவில் ஆனந்த் வென்றார்.

இந்தியாவில் ஆர்ப்பாட்டமான வரவேற்பு அவருக்குக் கிடைத்த போதும், “ஆனந்த் நல்ல டோர்னமண்ட் ஆட்டக்காரர் என்று தெரியாதா என்ன? காஸ்பரோவ் போன்ற Classical சாம்பியன்கள் இந்த வகையிலா ஜெயித்தார்கள்? எட்டு பேர் ஆடும் போட்டியில், சரியாக விளையாடாதவரை ஜெயித்து, நல்ல ஆட்டக்காரருடன் டிரா செய்தால் கூட ஜெயித்து விட முடியும். Match format-ல் நடை பெறும் போட்டியில், எதிராளி நல்ல ஆட்டக்காரராக இருந்தால் டிரா செய்து ஒப்பேற்ற முடியாது. ஆனந்த் காஸ்பரோவிடமும், அதற்கு முன் காம்ஸ்கியிடமும் தோற்றதிலிருந்து, இந்த வகைப் போட்டியில் ஆடி ஜெயிக்க போதுமான தன்னம்பிக்கை அவரிடம் இல்லை”, என்ற வாதம் எழ ஆரம்பித்தது. காஸ்பரோவையே match format-ல் வீழ்த்தியவர் கிராம்னிக். “என் பட்டத்தை செஸ் உலகின் நன்மைக்காக, ஆனந்திடம் இரவல் கொடுத்திருக்கிறேன்”, என்று கிராம்னிக் சொன்னபோது அவரை ஆதரித்தவர்கள் எண்ணற்றவர்கள்.

ஆனந்தின் ரசிகர்களும், ரசிகரல்லாதவரும் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்தனர். கிராம்னிக்கும் ‘mind games’ என்ற பெயரில் ஆனந்தை சமயம் கிடைத்த போதெல்லாம் சதாய்த்துக் கொண்டே இருந்தார். ஒரு காலத்தில் ஆனந்தின் ஆலோசனைக் குழுவில் இருந்த பீட்டர் லீகோ, கிராம்னிக்கின் ஆலோசகர்களுள் ஒருவர் என்றபோது, பரபரப்பு உச்சத்தை அடைந்தது. போட்டியின் தொடக்கத்துக்கு முன், ”சாம்பியன் ஆனந்த். அவருடைய சாலஞ்சர் கிராம்னிக்.”, என்பதுதான் உண்மையெனினும், “கிராம்னிக் சாம்பியன். அவரை எதிர்ப்பவர் ஆனந்த்”, என்பது போன்ற மனநிலையை கிராம்னிக் ஏற்படுத்த முயன்றார். இவ்வளவுக்கும் இடையில், ஆனந்த் அமைதியாகவே இருந்தார்.

ஆனந்தின் ஆட்டங்களைப் பார்த்தோமெனில், அவர் பெரும்பான்மையான ஆட்டங்களை ‘e-4′ என்ற கட்டத்திலிருந்து தொடங்குவார். அந்த வகை ஆரம்பங்களை அறவே தவிர்த்து ‘d-4′-லிருந்து ஆட்டத்தைத் தொடங்குவது என்று ஆனந்த் எடுத்த முடிவு கிராம்னிக்கின் ‘e-4′-க்கு எதிரான திட்டங்களை வீணாக்கியது.

அக்டோபர் 2008-ல் தொடங்கிய போட்டியின் முதல் ஆட்டம் மிகச் சாதாரண டிராவில் முடிந்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்தின் கை ஓங்கிய போதும், போதிய நேரமில்லாததால் அந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது. கிராம்னிக் ‘positional play’-ல் வல்லவர். அதாவது, தடாலடியாக காய்களை நகர்த்தாமல், காய்கள் இருக்கும் இடங்களை வைத்துக் கொண்டு சிறிது சிறிதாய் தனக்கு சாதகமாய் ஆட்டத்தை மாற்றிக் கொள்வதில் வல்லவர். இதை உணர்ந்த ஆனந்த், அதிகம் அறியப்படாத, கிராம்னிக்கால் அதிகம் ஆராயப்பட்டிருக்காத position-களை ஆட்டத்தின் சில நகர்த்தல்களுக்குள்ளேயே உருவாக்க ஆரம்பித்தார். தனது திட்டங்களைச் செயல்படுத்துவதை விட்டு, ஆனந்த் உருவாக்கும் புதிய நிலைகளை ஆராய்வதில் கவனம் செய்ய வேண்டியாகிவிட்டது. ’Bb7′ என்ற முற்றிலும் புதியதொரு நகர்த்தல் மூலம் மூன்றாவது ஆட்டத்தை ஆனந்த் கடுமையாகப் போராடி வென்றார்.

கிராம்னிக்கின் விளையாட்டில், அவர் வெற்றிகளுக்கு பெரும்பாலும் வெள்ளைக் காய்களையே நம்பியிருந்தார். தனக்குக் கருப்புக் காய்கள் வாய்க்கும் போதெல்லாம் டிராவை நோக்கியே ஆட்டத்தைச் செலுத்துவார். மூன்றாவது ஆட்டத்தில் வெள்ளைக் காய்களுடன் விளையாடி தோற்றதால், அடுத்த ஆட்டத்தில் கருப்பு காய்களை எபப்டிக் கையாள்கிறார் என்று காண ரசிகர்கள் ஆர்வமாய் இருந்தனர். கிராம்னிக், தன் வழக்கப்படி தற்காத்தே விளையாடி டிராவைப் பெற்றார்.

மூன்றாம் ஆட்டத்தின் தோல்வியை ஆராய்ந்து, அந்த ஆட்டத்தில் தனக்கு வெற்றியை கொடுத்திருக்கக் கூடிய நகர்த்தல்களைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைத்த கிராம்னிக், மூன்றாவது ஆட்டத்தின் நகர்த்தல்களையே ஐந்தாம் ஆட்டத்திலும் ஆடினார். ஆனந்தும் அப்படியே செய்ய, ஆட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராம்னிக்குக்கு வெற்றி கொடுக்கக் கூடிய நகர்த்தல் வருமென்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் ஒரு முறை ஆனந்த் வென்றார். ஆட்டம் முடிந்ததும், “கிராம்னிக் இப்படி ஆடியிருக்க வேண்டுமா?”, என்று பலர் ஆராய்ந்தனர். ஆனால், ஏனோ “ஆனந்த் மூன்றாம் ஆட்டத்தில் ஆடிய படியே ஐந்தாம் ஆட்டத்திலும் ஆடியிருக்க வேண்டுமா?”, என்ற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. கிராம்னிக் எதையோ கண்டுபிடித்திருப்பார். அதனால் இப்படி ஆடுகிறார் என்று நினைத்துப் பதறாமல், தன் ஆட்டத்தின் மேல் ஆனந்த் வைத்திருந்த நம்பிக்கை அசாத்தியமானது.

ஆறாவது ஆட்டத்தில் கிராம்னிக் தன் இயல்புக்கு மாறாக ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனந்தோ, பொறுமையாக கிராம்னிக் எப்படி ஆடி ஜெயிப்பாரோ அந்த வகையில், கொஞ்சம் கொஞ்சமாய் முக்கியமான கட்டங்களைப் பிடித்ததன் மூலம் தன்பக்கத்துக்கு வலு சேர்த்து, பொதுவாய் கிராம்னிக் எப்படி விளையாடி ஜெயிப்பாரோ அது போல ஆட்டத்தை ஜெயித்து. 4.5-1.5 என்ற கணக்கில் முன்னிலை அடைந்தார்.

மொத்தம் பன்னிரண்டு ஆட்டங்கள் கொண்ட போட்டியில், முதலில் 6.5 புள்ளிகள் பெறுபவருக்கு வெற்றி. ஆறு ஆட்டங்களிலேயே முன்னிலை பெற்றுவிட்ட ஆனந்த் வெல்வாரா? அல்லது 1994-ல் காம்ஸ்கியுடன் விளையாடிய போது ஏற்பட்ட சரிவு போல ஆகுமா? என்ற கேள்வி எழும்பியது. மூன்று புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தபோதும், ஆனந்த் தன் வழக்கமான பாணியிலேயே விளையாடினார். அடுத்த மூன்று ஆட்டங்கள், ஆனந்த் டிராவுக்காக ஆடாத போதும், டிராவில் முடிந்து, 6-3 என்று முன்னிலை பெற்றிருந்தார். இன்னும் ஒரு டிரா பெற்றால் பட்டம் என்ற நிலையில், பத்தாவது ஆட்டத்தில் கிராம்னிக் அற்புதமாய் விளையாடினார். கிராம்னிக்கின் திட்டங்களுள் முதல் முறையாக மாட்டிய ஆனந்த், முதல் முறையாகத் தோல்வியுற்றார். முதல் பத்து ஆட்டங்களில் d4-ல் ஆட்டத்தைத் துவங்கி கிராம்னிக்கை அசர வைத்த ஆனந்த், 11-ஆவது ஆட்டத்தில் அவருக்கு ரொம்பப் பழக்கப்பட்ட e-4-ல் ஆட்டத்தைத் துவங்கினார். ஜெயித்தே ஆக வேண்டிய நிலையில் இருந்த கிராம்னிக், ஆட்டத்தை மிகவும் குழப்பமான சுழலுக்குள் தள்ளிய போதும், ஆனந்த் அசராமல் ஈடுகொடுத்தார். இறுதியில் கிராம்னிக் வேறு வழியின்று draw offer கொடுத்தார். 6.5-4.5 என்ற வித்தியாசத்தில், ஆனந்த் மூன்றாவது முறையாக, மூன்றாவது வகையில் உலக சாம்பியன் பட்டம் பெற்றார்.

1990-களில் இருந்து அடை காத்த கனவு 2008-ல் நனவானதின் சின்னமே, பான் நகரில் ஆனந்த் வென்ற பதக்கம்.

ராகுல் போஸ் இந்தப் பதக்கத்தின் முக்கியத்துவம் தெரிந்தவராதலால், “ஏன்? ஏன்? வேற ஏதாவது கொடுக்ககூடாதா?” என்று கேட்கிறார்.

ஆனந்த், “இல்லை இல்லை நீ செய்வது பெரிய வேலை. எடுத்துக் கொள். இது இனி உன்னுடையது, ” என்று சொல்கிறார்.

ஆனந்தின் மனைவி அருணா, ராகுல் போஸை அமர்த்திவிட்டு உள்ளே செல்கிறார். திரும்பி வரும்போது அவர் கையில் ஆனந்த் ஜெயித்த முதல் உலக சாம்பியன்ஷிப் கோப்பை. அதையும் ஏலம் விடக் கொடுக்கிறார் அவர்.

அபினவ் பிந்த்ரா (மறந்திருக்க மாட்டீர்களே?) தான் இருபத்தைந்து பதக்கங்கள் வெல்லக் காரணமாயிருந்த துப்பாக்கியைத் தருகிறார். இந்த இருபத்தைந்தில் அவர் வென்ற உலக சாம்பியன்ஷிப் பதக்கமும், உலக சாதனை செய்து ஜெயித்த மெடலும், அவ்வளவு ஏன், ஒலிம்பிக் சாதனை செய்து வென்ற பதக்கமும் எல்லாம் அடக்கம். அவ்வளவு முக்கியமான துப்பாக்கியைத் தருகிறார் பிந்த்ரா.

சாய்னா நெஹ்வால், கீத் சேதி, டைகர் படோடி, ஹாக்கி வீரர் அஜித் பால் சிங் என்று பலரும் மனமுவந்து பொக்கிஷங்களை தாரை வார்த்துள்ளனர்.

ராகுல் போஸ் இந்தக் கட்டுரையில் ஒரு தத்துவ முத்தை உதிர்க்கிறார். “விளையாட்டு வீரர்களுக்கு உலகம் ஒரு மாயை என்று சொல்லத் தேவை இல்லை. அர்ஜுனன் உலக அளவில் விளையாடி இருந்திருந்தால் கிருஷ்ணர் கீதோபதேசம் செய்திருக்க வேண்டி வந்திருக்காது. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை அப்படி. கணத்துக்கு கணம் வாழ்ந்தாக வேண்டும். வெற்றி தோல்விதான் அவர்களுக்கு அனைத்தும். ஆனால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்றும் தெரிந்து வைத்திருப்பவர்கள் அவர்கள். இன்று எதை நன்றாக செய்ய முடியுமோ, அதை செய்கிறார்கள் அவர்கள். விளையாட்டு வீரர்கள் மாபெரும் தத்துவ மேதைகள்,” என்கிறார் போஸ்.

- சுவாரஸ்ய மேட்டர்கள்: நாட்பாஸ், மொக்கை செஸ் விவரங்கள்: லலிதா ராம்

என்னப்பா இது, கிரிக்கெட் தவிர என்று பேர் போட்ட காரணத்துக்காக நம் வாழும் தெய்வம் சச்சின் கொடுத்த மட்டை குறித்த செய்தியைக் கூட ஈவு இரக்கமில்லாமல் இருட்டடிப்பு செய்யலாமா என்று கேட்கிற கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அவர் தந்த மட்டையும், டைகர் படோடியின் ஜாகெட்டும் இங்கு அடிக்குறிப்பில்தான் வரும்.

சச்சின் டெண்டுகர் பெரிய மனசு பண்ணி நியூ ஜீலாந்து அணிக்கு எதிராக 133 பந்துகளில் 163 ரன்கள் குவித்து சாதனை படைத்த மட்டையை ராகுல் போஸிடம் ஏலம் விடக் கொடுத்திருக்கிறார். இந்த மட்டை சச்சின் அடித்த ஒரு நாள் கோப்பை சதங்களில் நான்காவது பெரிய சதத்தை அடித்துத் தந்திருக்கிறது. உலக அரங்கில் ஏலம் என்றால் ஆனந்தின் பதக்கத்துக்கு அதிகப்படியான வரும்படி இருக்கக் கூடும். இந்தியாவில் ஏலம் நடப்பதால் சச்சினின் மட்டைதான் அதிக விலைக்குப் போகும் என்று சொல்லத் தேவையில்லை.

தலைவர் ஆனந்த் பில்போவில் ஆடிய கையோடு சைனாவில் (நேற்று முதல்) ஆடுகிறார். ஆண்டின் Highest Rating average உள்ள ஆட்டத் தொடர் பில்போதான் என்ற போதும், 4 பேர் ஆளுக்கு ஆறு ஆட்டங்கள் ஆடுவதை விட, 6 பேர் ஆளுக்கு பத்து ஆட்டங்கள் ஆடுவது (டபிள் ரவுண்ட் ராபின் முறையில்) ரசிகர்களுக்கு இன்னும் உவப்பாக அமையும்.

ரேட்டிங்கில் 2800-ஐ தாண்டிய மூவர் (கார்ல்சன், ஆனந்த்,டொபலோவ்) இந்தப் போட்டியில் ஆடுவதிலிருந்து தொடரின் மதிப்பைப் புரிந்து கொள்ளலாம். இவர்கள் தவிர காஷிமோவ், பார்காட், மண்ணின் மைந்தர் வாங் யூ-வும் பங்கு பெறுகின்றனர்.

போன வருடம் சுலபமாக கார்ல்சன் வென்றார். மட மட என தர வரிசையில் முன்னேறி முதல் இடத்தை அடைந்த 19 வயது கார்ல்சன் இந்த வருடம் சில சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஒலிம்பியாடிலும், பில்போவிலும் அவரடைந்த தோல்விகள் பற்றிச் சொல்லும் போது, “ஆனந்த், கிராம்னிக் போன்ற தெர்ந்தவர்களுடன் அடைந்த தோல்விகளுக்கு கார்ல்சனின் ஃபாஷன் உலக வாழ்க்கையும், வயது கோளாரில் எற்படும் கவனச் சிதறல்களும் காரணம் என்று சொல்வதே கார்ல்சனுக்கு பெரிய பெருமை.”, என்றுள்ளார் பிரபல செஸ் எழுத்தாளர் மிக் கிரீன்கார்ட்.

கிராம்னிக்கை வென்று உலக சாம்பியன் ஆனதிலிருந்து, ஆனந்தின் கவனம் எல்லாம் டோர்னமெண்ட் பக்கம் முழுமையாக செலுத்த முடியாத நிலை. புதிய திட்டங்களை எல்லாம் சாம்பியன்ஷிப் ஆட்டங்களில் ஆடிக் கொள்ளலாம், டோர்ணமெண்டைப் பொறுத்த வரை தோற்காமல் ஆடினால் போதும் என்கிற மனநிலையிலேயே ஆடி வருகிறார். அடுத்த சாம்பியன்ஷிப்புக்கு 2 வருடங்கள் இருக்கும் நிலையில், இந்த போட்டியிலாவது ஆனந்த் தடையின்றி ஆடுவாரா என்று பார்க்க வேண்டும்.

ஆனந்திடம் தோற்ற பின், டொபலோவ் ஒலிம்பியாடில் ஆடினார். இரண்டுக்கும் இடையில் அவருக்கு திருமணம் ஆகியுள்ளது. அதனாலோ, அல்லது வெறு எதனாலோ ஒலிம்பியாடில் டொபலோவால் சோபிக்க முடியவில்லை. சோஃபியாவில் தோற்ற பின், ஆனந்தை இங்கு டொபலோவ் ஆடுகிறார். சென்ற வருடம் கார்ல்சனிடம் தோற்றதற்கும் பழி வாங்கக் காத்திருப்பார் டொபலோவ். இவருடைய ஆட்ட்ங்களில் சரவெடிகள் பல வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நேற்று தொடங்கிய ஆட்டங்களில் கார்ல்சன் பார்காடை வென்று மீண்டும் லைவ் ரேட்டிங்கில் நம்பர் 1 ஆனார். ஆபிஸ் வேளையில் நடந்த ஆட்டங்களை கவனிக்க முடியவில்லை. மற்ற ஆட்டங்கள் எல்லாம் டிராவில் முடிந்தன. ஆனந்த் முன்பெல்லாம் டோர்னமெண்டில் 1.e4-ல் ஆட்டத்தைத் தொடங்குவார். கிராம்னிக்குடனும், டொபலோவுடனும் ஆடிய சாம்பியன்ஷிப் ஆட்டங்களில் ஷாக் வால்யூக்காக 1.d4-க்குத் தாவினார். நேற்றைய ஆட்டத்தில், டோர்னமெண்ட் என்ற போதும், 1.d4-ல் தொடங்கியுள்ளார். வாங்-யூ தவறு ஏதும் செய்யாத நிலையில், ஆனந்த் சந்தோஷமாக டிராவை ஏற்றுக் கொண்டார்.

போட்டியைப் பார்த்த ரசிகர்கள், மீண்டும், “கில்லர் இன்ஸ்டிங்ட் ஆனதுக்கு இல்லை. டோர்ணமெண்டை கடனுக்கு ஆடுகிறார். டோர்ணமெண்டைப் பொறுத்த மட்டும் ஆனந்தை “டிரானந்த்” என்றால் மிகையாகாது. 2.5 வருடங்களுக்கு மேலாக எந்தடோர்ணமெண்டையும் ஆனந்த் வெல்லவில்லை.”, என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இதில் கொஞ்சம் உண்மை உண்டென்ற போதும், நிறைய அதீதம்.

பத்து ஆட்டங்கள் கொண்ட டோர்னமெண்டில், கடைசி ஆட்டத்தில் கூட நிலை மாறக் கூடும். ஆனந்த் ரசிகர்கள் இந்தப் புலம்பல்களை போட்டி முடிந்ததும் சொல்வதே சரி:-)

இன்று ஆனந்த் கார்ல்சனுடன் ஆடுகிறார். உலக சாம்பியன் Vs உலக நம்பர் 1. ஆனந்த் நிதானமாக ஆடி கார்ல்சனை ஆழம் பார்ப்பார் என்றே தோன்றுகிறது.

டோர்னமெண்டில் வலைத்தளம்: http://www.chess-pearlspring.com/www/chess_pk/2009/en/index.htm

இந்தியாவில் சூப்பர் கிரான்மாஸ்டர் டோர்னமெண்ட் எப்போது நடக்கும்?

பல வருடங்களாக கோரஸ் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. கோரஸ் கம்பெனியை டாடா நிறுவனம் வாங்கி விட்ட நிலையில், அதை இந்தியாவுக்கு மாற்றுவது சுலபமாகாதா?

மனமிருந்தால் மார்கபந்து!

இந்த வாரம் விளையாட்டு ரசிகர்களுக்கு எக்கெச்செக்க தீனி.

காமன் வெல்த் ஆட்டங்களில் இந்தியா பட்டையை கிளப்புகிறது. துப்பாக்கி சுடுதலை பார்பதற்கு ஒன்றும் சுவாரஸ்யமாக (எனக்கு) இல்லை என்ற போதும் இந்தியா நிறைய பதக்கங்கள் அள்ளியதைக் குறித்து மகிழ்ச்சி.

எனக்கு சுமாராக விளையாட வரும் ஆட்டம் டேபிள் டென்னிஸ் என்பதால், அதனை விரும்பிப் பார்த்தேன். யான்-ஓவ்-வால்ட்னர் காலத்திலிருந்து டேபிள் டென்னிஸை டிவி-யில் தொடர்ந்து பார்க்கும் பிரகஸ்பதி நானாகத்தான் இருப்பேன்.

90-களில் அவரைப் பற்றி எப்போதாவது ஸ்போர்ஸ்டாரில் வரும் செய்திகளை கத்திர்த்து வைத்துக் கொள்வேன். (அவை எல்லாம் எங்கே போயிற்றோ). இந்த காமன் வெல்த் ஆட்டங்களிலும் டேபிள் டென்னிஸை தொடர்ந்து பார்த்தேன்.

குழு ஆட்டங்களில் ஆண்கள் வெங்கலமும், பெண்கள் வெள்ளியும் வென்றனர். சைனா காமன்வெல்தில் இல்லாத நிலையில், தங்கமே வென்றிருக்கலாம். தனி நபர் ஆட்டங்களில் அசந்தா ஷரத்கமல் தங்கம் வெல்வார் என்று நம் இக்கை இருந்தது.அவரும் கவுழ்த்துவிட்டார். எதிர்பாரா வண்ணம் சாஹாவுடன் சேர்ந்து ஷரத் கமல் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார். நேற்று இரவு ஹைலைட்ஸ் பார்த்தேன். த்ரில்லிங் ஆட்டம். ஆளுக்கு இரண்டு செட் வென்ற நிலையில், சாஹா அற்புதமாய் பல அதிரடி ஷாட்கள் ஆடினார். 11-8 என்று கடைசி செட்டை வென்று இன்னொரு தங்கம் இந்தியாவுக்குக் கிடைக்கச் செய்தனர்.

ஹாக்கியிலும், edge of the seat thriller. சினிமாவில் வருவது போல, கடைசி நிமிடம் வரை பின் தங்கி இருந்து, 1-3 deficit-ஐ நீக்கி, பினால்டி ஸ்ட்ரோக்கில் ஒரு கோல் வித்தியாசத்தில் இந்தியா வந்தது. ஷாருக் கான் கேமிராவை கொண்டு வந்திருந்தால், சக்-தே இந்தியா பட ஷூட்டிங் செலவு மிச்சமாயிருக்கும். இந்தியா முதன் முரையாய் இறுதி ஆட்டத்துக்குச் செல்கிறது. ஆஸ்திரேலியாவை வெல்வது கடினம் என்றாலும், India have nothing to lose என்பதால் கவலையின்றி ஆடலாம். ஒருவேளை ஜெயித்தாலும் ஜெயிக்கலாம்.

பேட்மிண்டன் அரை இறுதியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னாவும், இரட்டைஅய்ர் பிரிவில் ஜ்வாலா-அஸ்வினி ஜோடியும் தகுதி பெற்றிருக்கிறது. காட்டிய கொஞ்ச நேரத்தில் இரட்டையர் ஆட்டம் பார்க்க படு சூப்பராய் இருந்தது. வழக்கமாய் ஜ்வாலாதான் அதிரடியில் இறங்குவார். அரை இறுதியில் அஸ்வினி சரமாரியாய் ஸ்மாஷ்களை அள்ளி வீசினார்.

சிங்கபூர் ஜோடியிடம் ஏற்கெனவே குழு ஆட்டங்களில் தோற்றிருந்தாலும், இப்போது ஆடுவது போலத் தொடர்ந்தால் நிச்சயம் தங்க மங்கைகள் ஆகலாம்.

ஒற்றையர் பிரிவில் சாய்னா அரை இறுதியில் சுலபமாக வென்றாலும், ஆட்டத்தில் zing மிஸ்ஸிங். அதிகம் அலட்டிக் கொள்லாமல் ஆடியது போலவே தோன்றியது. முன்பு நடந்த ஆட்டத்தில் போராட்டத்துக்குப் பின் தோற்ற மலேசிய வீராங்கனை வாங் மியூ சூ, இப்போது அடி பட்ட புலியாய் சீறுவார். சாய்னா பழைய துல்லிய ஆட்டத்துக்குத் திரும்பாவிடில் தங்கம் இழக்கும் வாய்ப்பும் உள்ளது.

இங்கிலாந்தும் இந்தியாவும் இரண்டாவது இடத்துக்கு மயிர்பிடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு தங்கமும் மிக மிக முக்கியமானவை.

தங்கம் என்றதும் நினைவுக்கு வருவது தடகள தங்கங்கள்தான். இம்முறை இந்தியாவுக்கு டிஸ்கஸ் த்ரோ மற்றும் 400 மீட்டர் ரிலே ஓட்டம் இரண்டிலும் தங்கம் கிடைத்துள்ளது. டிஸ்கஸில் மூன்று பதக்கங்களையுமே இந்தியர்கள் வென்றுள்ளனர். அதற்கு காரணம் அவர்கள் வீட்டில் கோபத்தில் புருஷன்மார்களை நோக்கி பாத்திரங்களை வீசுவதுதான் என்று ஒரு வதந்தி உலவுகின்றது. ரிலே ரேஸும் பார்க்க விறுவிறுப்பாய் இருந்தது, முதல் இரண்டு leg-ல் பின் தங்கி இருந்த இந்திய அணி, மூன்றாவதில் விட்டததைப் பிடித்து, நான்காவதில் கிடைத்ததைத் தக்க வைத்து தங்கத்தை வென்றது.

கிரிக்கெட்டே கதி என்ற நாட்டில், இது போன்று மற்ற ஆட்டங்களில் உழைத்து, வெற்றியும் பெரும் இவர்களைப் பொன்றவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும். ஜாவா கோர்ஸ், கமாஸில் ஜாவளி, நுனி நாக்கு ஆங்கிலம், அமெரிக்க மாப்பிளை என்று வாழ்க்கையை பிளான் செய்து கொள்ளாமல், சொந்த முயற்சியினால் இது போன்ற தடகள ஆட்டங்களில் தீவிரமாய் ஈடுபடும் வீராங்கனைகளுக்கு ஹாட்ஸ் ஆஃப்.

காமன்வெல்த் தவிர, தலைவர் ஆனந்த் பில்போ-வில் ஆடிக் கொண்டிருக்கிரார். கார்லசனை வென்றதன் மூலம், தற்போதைய தர வரிசையில் உலக நம்பர் 1 ஆகவும் விளங்குகிறார். இதுவரை நடந்த ஆட்டங்களில் 1 வெற்றியும் மூன்று டிராகளும் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். கிராம்னிக் இரண்டு வெற்றிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

கார்ல்சன் சொதப்பலாய் ஆரம்பித்தாலும், இப்போது நன்றாக ஆட ஆரம்பித்துள்ளார். ஷுரோவுடனான ஆட்டம் 175 நகர்த்தல்கள் வரை சென்றது. பல நேரங்களில் கார்சனின் கை ஓங்கி இருந்த போதும், அதை வெற்றியாக்க முடியாமல் போனது. நேற்ரைய ஆட்டத்தில் one-pawn-down நிலையிலும், end game பிஸ்தாவான கிராம்னிக்கிடம் மிகவும் போராடி டிராவைப் பெற்றார். 2009-ல் தொட்டதெல்லாம் தங்கமான கார்ல்சனுக்கு, இந்த வருட ஒலிம்பியாடும், பில்போ மாஸ்டர்ஸும் சறுக்கல்கள்தான். மாடலிங்கில் கவனம், டீனேஜுக்குரிய கவனச் சிதறல்கள், over confidence, திமிர்த்தனன் என்று பல காரணங்களை ரசிகர்கள் கார்ல்சனின் சரிவுக்குக் காரணமாகக் கூறுகின்றனர். சரிவு வராத ஆட்டக்காரரே கிடையாது. இதெயெல்லாம் கார்ல்சன் பொருட்படுத்த மாட்டார் என்றே நினைக்கிறேன். இந்த வருடம் போனால் அடுத்த வருடம். அவருக்கென்ன வயசுக்கா பஞ்சம்?

கலியுக பிரத்யட்ச அவதாரம் என்று பலரால் கன்னத்தில் போட்டுக் கொள்ளப்படும் திருவாளர் ரொஜர் ஃபெடரர் மகராஜ், ஷாங்காயில் ஆடிக் கொண்டிருக்கிறார். எப்படியோ நல்ல படியாய் ஆடி, அடுத்த வருட கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை இன்னும் சில பட்டங்களை வென்று, குறிப்பாய் சம்பிராஸின் விம்பில்டன் ரிக்கார்டை உடைக்க வேண்டி பலர் பூ மிதிக்கு வேண்டிக் கொண்டிருப்பதாக நம்பவே முடியாத வட்டாரச் செய்திகள் கூறுகின்றன.

சென்ற வார இறுதியில் பல ஆட்டங்கள்.

சாய்னா நெஹ்வால் காலிறுதியில் தோல்வியுற்றார். சமயத்தில் இது போன்ற தோல்விகளும் ஆட்டத்தை விருத்தி செய்ய உதவும். தோல்விக்குப் பின் புயலாக புறப்படுவார் என்று நம்புவோம். ராஜீவ் காந்தி கேல் ரத்னாவை வென்றிருக்கும் இவரை வாழ்த்துவோம்.

ஆனந்த் இரண்டு நாளாய் ரேபிட் ஆட்டங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். உலகின் நம்பர் ஒன் கார்ல்ஸன், நார்வேயின் சிறந்த வீரர் (கார்ல்ஸனைத் தவிர) ஹாமர் மற்றும் ஜூடி போல்கர் பங்கேற்கும் போட்டியில் டபுள் ரவுண்ட் ராபின் முறையில் இரண்டு நாள் ஆட்டங்கள் முடிவடைந்துவிட்டன. ஆனந்த் கார்ல்ஸனிடம் இரண்டு ஆட்டங்களிலும் டிரா செய்தார். மற்ற இருவரிடமும் நான்கு ஆட்டங்களில் சுலபமாகவே வென்றார்.

இன்று மாலை முதலிடத்துக்கான இறுதி ஆட்டம் கார்ல்ஸனுக்கும் ஆனந்துக்கும் இடையே நடக்கவிருக்கிறது.

எனக்கென்னமோ ராபிட் ஆட்டங்கள் பார்க்கப் பிடிப்பதில்லை. பிடிப்பதில்லை என்று சொல்வ்சதை விட, அந்த வேகத்துக்கு ஈடுகொடுத்துப் பார்க்க முடிவதில்லை. 4 மணி நேரம் நடக்கும் கிளாசிகல் ஆட்டங்களில் கணினி உதவியுடன் நகர்த்தல்களை ஆய்ந்து நாம் அறிந்து கொள்ள நிறைய வாய்ப்புகள் உண்டு. 20 நிமிடங்களுக்குள் 60 நகர்த்தல்களுக்கு மேல் நடக்கும் ராபிட் ஆட்டங்களில் அவ்வாறு ஃபாலோ செய்வது கடினம்.

இறுதி ஆட்டத்தைப் பார்க்க விழைபவர்கள் இங்கு காணலாம்: http://www.chessdom.com/news-2010/anand-carlsen-hammer-polgar-live

chessbase.com-ல் போட்டி பற்றிய விவரங்கள், ஆட்டங்களின் அலசல், படங்கள், விடியோ என்று நிறையவே காணக் கிடைக்கிறது.

ஷுமாக்கர் மீண்டும் ஜெயிக்காததை இன்று பேப்பரில் பார்த்துத் தெரிந்து கொண்டேன். வெறு எவன் ஜெயித்தால் எனக்கென்ன?

அமெரிக்க ஓபன் இன்று தொடங்குகிறது. டென்னிஸ் ரசிகர்களுக்கு சிவராத்திரி ஆரம்பம். என் ஆதர்ச புருஷர்களுள் ஒருவரான போரிஸ் பெக்கர், பட்டத்தை ஃபெடரரோ, முர்ரேயோ வெல்லக் கூடும் என்கிறார். பார்ப்போம் என்ன ஆகிறதென்று.

பெண்கள் பிரிவில் ஏதோ வாயில் நுழையாத பெயரைக் கொண்ட டென்மார்க் வீராங்கனைக்கு முதல் சீடாம். இது வரை எந்த கிராண்ட் ஸ்லாமும் வெல்லாதவர் மற்ற போட்டிகளில் செர்த்துக் கொண்ட புள்ளிகளின் மூலம் மட்டுமே நம்பர் ஒன் சீடாக முடிவது ஆச்சரியம்தான். கிராண்ட் ஸ்லாமில் எல்லாம் தோற்றும் உலக நம்பர் 1-ஆக பல மாதங்கள் இருந்த சஃபினாவைப் பார்க்க இது தேவலாம். தனது சீடிங்குக்கு பொருத்தமாக ஆடுவாரா வோஸ்னியாகி என்று பார்ப்போம்.

இங்க்லிஷ் பிரிமியர் லீகில் லிவர்பூல் ஒரு வழியாய் முதல் வெற்றியைக் கண்டது. மான்சஸ்டர் சிடி-யிடம் தர்ம அடி வாங்கியதன் பாதிப்பிலிருந்த வெளி வர இந்த வெற்றி உதவக் கூடும். உலகக் கோப்பையில் சோபிக்காது போன டொரேஸ் அடித்த கோலில் 1-0 என்று West Bromwich Albion-ஐ வென்றது.

மூன்று ஆட்டங்களில் மூன்று வெற்றிகளைப் பெற்று செல்ஸி முதல் இடத்தில் உள்ளது. சில வாரங்களுக்குள் இந்த நிலை மாறினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

அமெரிக்க ஓபன் அப்டேட்டுன் விரைவில் வருகிறேன். அது வரை ஃபெடரரின் இந்த சாகஸத்தைப் பார்த்து மகிழுங்கள்: http://www.huffingtonpost.com/2010/08/20/roger-federers-trick-shot_n_688197.html

ஆனந்த் காஸ்பரோவிடமும் கிராம்னிக்கிடமும் பெற்ற உதவியைப் பற்றி போன பதிவில் கூறியிருந்தேன்.

அதன் பின் பத்தரிக்கைகள் இந்த விஷயத்தை ஊதி ஊதி குளிர் காய்ந்தன.

நமது தமிழ்ப் பத்திரிக்கைகள் சும்மா இருக்குமா? லேட்டாக என்றாலும், லேட்டஸ்டாகப் கோதாவில் குதித்துள்ளன.

தினமலரில் நேற்று வந்த செய்தி சூப்பரப்பு!

என்னே ஒரு தலைப்பு, “காஸ்பரோவ் உதவியில் வென்ற ஆனந்த் – ஜெர்மனி வீரர் அதிரடி புகார்”

காஸ்பரோவிடம் பெற்ற உதவியைப் பற்றி சம்பந்தமே இல்லாத ஒருவர் எப்படி புகார் கொடுக்க முடியும்? என்று நாம் குழம்பி மேலும் படிக்கையில், அது புகாரல்ல கருத்து என்று தெரிய வருகிறது.

“கூட்டுச் சதி” என்ற சப் டைடிலைப் பார்த்தவுடன் தினமலரை டேனைலோவ் வாங்கிவிட்டாரோ என்று எண்ணினேன்.

பாக்கி நியூஸை நீங்களே படித்து சிரியுங்கள்

ஆனந்துக்கு இது நிச்சயம் தேவைதான்.

வாழ்க தமிழ் மீடியா!

இட்லிவடைக்காக எழுதிய பதிவு:

இது ரிப்போர்டாக இல்லாமல் நாவலாக இருந்தால், பத்து பக்கங்களுக்கு நீட்டி முழக்கி, சஸ்பன்ஸை வளர்த்து, நகம் கடிக்க வைத்து, சீட் நுனிக்கு இழுத்து இறுதியில் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கலாம்..

இப்போது அதற்கெல்லாம் வழியில்லை.

ஆனந்த் மீண்டும் (செஸ்ஸில்) ‘விஸ்வநாதன்’ ஆனார்.

ஒரு சின்ன recap:

************

போட்டியின் பெரும்பான்மையான ஆட்டங்களில் அதிரடியாய் ஆடுவதைத் தவிர்த்து, எதிராளியைத் தவறு செய்யத் தூண்டும் விதமாகவே ஆட முயன்றார் ஆனந்த். போட்டியின் முதல் பகுதியில் வெற்றியும் கண்டார். ஆனால், இரண்டாவது பகுதியில் டொபலோவ் விழித்துக் கொண்டு துல்லியமாக ஆடினார். பெரும்பாலான தவறுகளை ஆனந்தே செய்தார். இதனால் எட்டாவது ஆட்டத்தில் தோல்வியை அடைந்ததோடன்றி, ஒன்பதாவது ஆட்டத்தில் கிடைக்க வேண்டிய வெற்றி டிராவாகிப் போனது.

************

பதினோறாவது ஆட்டத்தில் ஆனந்துக்கு கடைசி வெள்ளை.

பத்து ஆட்டங்களில் சமநிலையில் முடியாத ஆட்டங்கள் அனைத்திலுமே வெள்ளைக் காய்களுடன் விளையாடியவரே வென்றிருந்தார். கிட்டத்தட்ட ஆனந்தின் வெற்றிக்கு அதுதான் கடைசி வாய்ப்பு.

இந்த சூழலில் ஆனந்த் தன் ஆட்டத்தை மாற்றிக் கொள்வாரா?

ஓபனிங்கைப் பொறுத்த வரை, நான்கு ஆட்டங்களில் விளையாடிய Catalan-ஐ டொபலோவ் மழுங்கடித்து விட்டார். ஒரு ஆட்டத்தில் விளையாடிய Nimzo Indian-ல் ஆனந்தின் கை ஓங்கியிருந்த போதும், கிடைத்த ஓய்வு நாளில் டொபலோவின் டீம் அந்த ஓபனிங்கை அலசித் தீர்த்திருக்கும். சர்வ நிச்சயமாய் வேறொரு ஓபனிங்கைத்தான் ஆனந்த் விளையாடியாக வேண்டும்.

ஐந்து ஆட்டங்களை 1.d4 என்ற நகர்த்தலில் தொடங்கிய ஆனந்த், ஆறாவது வெள்ளை ஆட்டத்தை 1.c4 என்ற நகர்த்தலில் தொடங்கினார்.

இந்த முடிவு டொபலோவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று ஆனந்த் எதிர்பார்த்திருக்கக் கூடும். English Opening-ல் ஆனந்த் ஆட்டத்தைத் தொடங்கிய போதும், ஆட்டம் சமமாகவே தொடர்ந்தது. ஆனந்தின் திட்டமென்ன என்று அறியும் வரை, டொபலோவ் கோதாவில் குதிக்கத் தயாராகயில்லை. ஆனந்தும் டொபலோவ் பொறுமையிழக்கும் வரை விடுவதாக இல்லை. இருவரும் சளைக்காமல் middle game-ஐ ஆடி, ஆட்டம் நிச்சயம் டிராதான் என்ற நிலைக்கு இழுத்துச் சென்றனர்.

48 நகர்த்தல்களுக்குப் பின், இருவரிடமும் 3 pawns, ஒரு குதிரை, ஒரு யானை மட்டுமே மிஞ்சியிருந்தது. 49-வது நகர்த்தலில் ஆனந்த் அதிரடியாய் விளையாடினார். தனது queen-side pawn-ஐ King-side play-க்காக தியாகம் செய்தார்.

ஆட்டம் சமநிலையிலிருந்து விலகியது.

கரணம் தப்பினால் மரணம்.

யாருக்கு? இருவருக்கும்தான்.

ஆனந்த் முதன் முறையாய் வெற்றிக்காக ஆட ஆரம்பித்தார். டொபலோவும் வெற்றியைப் பெற முனைந்தார்.

கடைசி வெள்ளை ஆட்டத்தில் ஜெயிக்க மிகப் பெரிய ரிஸ்கை ஆனந்த் எடுத்த போதும், இருவரும் துல்லியமாக ஆடினர்.

ஆட்டத்தை லைவாகப் பார்த்த ஆனந்த் ரசிகர்களுக்கு இதயத்துடிப்பு காய்கறி விலை போல எகிறியிருக்கும்.

கடுமையான போராட்டத்துக்குப் பின் ஆட்டம் டிராவில் முடிந்தது.

அடுத்த நாள் ஒய்வுக்குப் பின், கடைசி ஆட்டம். டொபலோவுக்கு வெள்ளை.

கருப்புக் காய்களுடன் கடைசி ஆட்டத்தை ஆடுவது ஆனந்துக்கு சிரமம்தான் என்ற போதும், டொபலோவுக்கு வேறு வகையில் நெருக்கடிகள்.

ஒரு வேளை ஜெயிக்கவில்லை என்றால், போட்டி ராபிட் ஆட்டங்களுக்குச் செல்லும். ஆனந்தான் Best ever rapid player. டொபலோவை பல முறை வென்றும் இருக்கிறார். 2006-ல் கிராம்னிக்குடனான போட்டியிலும் டொபலோவ் ராபிட் ஆட்டங்களில்தான் தோல்வியுற்றார்.

ஆனந்துக்கு கடைசி ஆட்டத்தை ஜெயித்துதான் ஆக வேண்டும் என்றில்லை.ஆனால், டொபலோவுக்கோ நிச்சயம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடி.

போட்டியைத் தொடர்ந்து பார்த்த எனக்கே, ஓய்வு நாளில் மிகவும் சஞ்சலமாக இருந்தது. போட்டியாளர் இருவரும் எப்படிக் கழித்தனரோ! பாவம்.

ஆனந்தின் strategy,

1. டொபலோவின் preparation-ல் மாட்டிக் கொள்ளக் கூடாது.
2. டொபலோவை drawish ஆட்டத்துக்குள் இழுக்க வேண்டும்.
3.டொபலோவ் டிராவுக்கு இசைந்தால் சரி. டிரா கூடாது என்று நினைத்து அதீதமாய் அதிரடி ஆட்டத்தைப் பயன்படுத்தி, தோல்வியை அடைந்தால் நல்லதாய் போயிற்று!

இந்த strategy-க்கு ஏற்ற தொடக்கததை ஆனந்த் தயார் செய்ய வேண்டும்.

மூன்று முறை டிரா செய்த Slav defense-க்கே ஆனந்த் திரும்புவாரா? அல்லது சமீபத்தில் பயன்படுத்திய Grunfeld-ல் தொடங்குவாரா?

இரண்டிலும் இல்லை. காலம் காலமாய் black-ல் தொற்காமல் இருக்கும் சூழல்களை எண்ணற்ற ஆட்டங்களில் அளித்து வந்த Queen’s Gambit Declined-ஐ தேர்வு செய்தார்.

முதல் இருபது நகர்த்தல்கள் கடகடவென்று வைத்தார் ஆனந்த். அந் நிலையில் அவரது C5 pawn சற்று weak-ஆக இருப்பினும், அவரது வெள்ளை பிஷப்பும் யானையும் டொபலோவின் back rank-ஐத் தாக்கத் தயாராக இருந்தன.

சில நகர்த்தல்களுக்குப் பின் ஆனந்தின் பிஷப் a8-h1 diagonal-ஐ வியாபித்து இருந்தது. அதே diagonal-ல் இருந்த ராஜாவை, டொபலோவின் e-pawn-ம், f-pawn-ம் காத்தன.

ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் டிராவை நோக்கிச் செல்வதை டொபலோவ் உணர்திருக்க வேண்டும். எதையாவது செய்து சமநிலையைக் குலைக்க விழைந்தார் டொபலோவ். தனது 31 & 32-வது நகர்த்தலில் முன் குறிப்பிட்ட e மற்றும் f pawn-கள் கொண்டு ஆனந்தின் pawn-கள் இரண்டை வீழ்த்தினார். இதனால் டொபலோவின் ராஜாவைத் தாக்குவது சுலபமானது.

இவ்விரு நகர்த்தல்களை விளையாடியதுமே ஆனந்தின் கை ஓங்கிவிட்டது. ஆட்டத்தை லைவாக விமர்சனம் செய்த வல்லுனர்களை டொபலோவின் blunder அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Tiger from Madras had smelt blood.

அடுத்தடுத்து அதிரடியாய் ஆடி டொபலோவை நெருக்கினார்.

டொபலோவ் தனது 40-வது நகர்த்தலில் செக் வைத்தார். ஆனந்த் தன் ராஜாவை நகர்த்தியதும், Susan Polgar என்ற commentator & GM, அந்த நகர்த்தலை blunder என்றார். அதனைப் படித்த போது ஒரு நிமிடம் இதயமே நின்றுவிட்டது. .

9-வது ஆட்டத்திலும் ஆனந்த் 40-வது நகர்த்தலில்தான் தவறிழைத்து கை மேல் இருந்த வெற்றியைக் கோட்டை விட்டார்

மீண்டுமொருமுறை வெற்றியின் விளிம்பில் இருந்து வீழ்வாரா ஆனந்த்?

நல்ல காலம் அப்படியொன்றும் ஆகவில்லை. சூசன் போல்கர்தான் அவசரக் குடுக்கை!

“இந்த நகர்த்தலை ஆடியதும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன். அப்புறம்தான் நான் செய்தது blunder அல்ல என்று உரைத்தது”, என்று press conference-ல் கூறியிருக்கிறார் ஆனந்த்

டொபலோவுக்கு தன் தவறு உடனே புரிந்திருக்க வேண்டும். இருப்பினும் தொடர்ந்து ஆடினார். ஒரு கட்டத்தில் தன் ராணியை ஆனந்தின் யானை மற்றும் பிஷப்புக்காக தியாகம் செய்தார்.

ஆனந்த் நிச்சயம் வெற்றி பெறப் போகிறோம் என்று உணர்ந்ததும், பொறுமையாக ஆட ஆரம்பித்தார். எண்ணற்ற வழிகளில் வெற்றியைப் பெறலாம் என்ற நிலையில்,உள்ளதில் பாதுகாப்பான வழியிலேயே ஆட்டத்தைத் தொடர்ந்தார். டொபலோவின் காய்களை வீழ்த்தாமல், zugzwang சூழல்களை உருவாக்கினார். (zugzwang என்பது நம் கையாலேயே நம் கண்ணைக் குத்திக் கொள்ளும் நிலை. எதை நகர்த்தினாலும் நிலைமை மோசமாகிவிடும்.)

ஒரு ராணியே பாடாய் அடுத்தும் நிலையில், இன்னொரு ராணியையும் ஆனந்த் passed pawn மூலம் பெற்றுவிடுவார் என்று உணர்ந்த போது, டொபலோவ் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

பன்னிரெண்டு ஆட்டங்களில் முதன் முறையாய் கருப்புக்கு வெற்றி.

டொபலோவ் தோற்றாலும் நிச்சயம் பல இதயங்களை வென்றிருப்பார்.

போட்டியின் பல நேரங்களில் அவர் கையே ஓங்கியிருந்தது. இறுதியில் ஆனந்த் வென்றாலும், இருவரும் கடைசி நொடி வரை போராடினர்.

Kasparov-Karpov-க்குப் பின், மயிரிழையில் சாம்பியன் முடிவானது இந்தப் போட்டியில்தான். (கிராம்னிக்-டொபலோவ் ஆட்டங்கள் ராபிட் வரை சென்ற போதும், அங்கு ஏற்பட்ட சர்ச்சைகள் ஆட்ட முடிவை வெகுவாக பாதித்தன.)

Kasparov era-க்கும் carlsen era-க்கும் இடைப்பட்ட குறுகிய காலத்தை ஆனந்த் ஆக்கிரமித்தார் என்று நாளைய வரலாறு கூறுவதை ஆனந்த் இந்த வெற்றியின் மூலம் தவிர்த்துள்ளார்.

Post Kasparov era-வில் சிறந்த ஆட்டக்காரர்களான கிராம்னிக் மற்றும் டொபலோவை வீழ்த்தியதன் மூலம், ஆனந்த் தன் புகழை நிலைக்கச் செய்துள்ளார்..

இந்தப் போட்டியில் ஆனந்த் தோற்றிருந்தால், இன்னும் சில வருடங்கள் free-flowing chess விளையாடியிருப்பார். இப்போது, அடுத்த challenger-க்காகத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

Preview மட்டும் எழுதி கடைசியில் ஒரு round up எழுதலாம் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். இ.வ ரசிகர்கள் கொடுத்த உற்சாகத்தில் ஏழு கட்டுரைகள்! இருபது நாட்களுக்குள்! என் போன்ற சோம்பேறியை இவ்வளவு எழுத வைத்ததற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உச்சத்தை அடைவது கடினம். அதைவிடக் கடினம் உச்சத்தில் நீடிப்பது.

அதைச் சாதித்துக் காட்டிய ஆனந்துக்கு hats off!

லலிதா ராம்
பெங்களூர் (1.15 AM)

பி.கு: 12-வது ஆட்டத்தில் டிரா செய்தால், ஆனந்தை ராபிட் ஆட்டங்களில் சந்திக்க வேண்டுமே என்று டொபலோவ் பயப்படவில்லையாம். 13-ம் தேதி ராபிட் ஆட்டங்கள் ஆட நேரிடுமே என்று பயந்தாராம். 2006-ல் கிராம்னிக்குடனும் 13-ம் தேதி விளையாடிதான் டொபலோவ் தோற்றாராம். அதனால்தான் ஆட்டத்தை ராபிட் ஆட்டங்களுக்கு செல்லவிடாமல் தடுக்க முயன்றாராம். பாவம் டொபலோவ்! சென்டிமெண்டால் வடை போச்சு!

உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது பகுதியில் இரண்டு ஆட்டங்கள் முடிந்துள்ளன. இரண்டுமே ஆனந்துக்கு சாதகமாக அமையவில்லை.
Mutual Fund விளம்பரங்களில் எல்லாம் “Past performance do not gaurantee future returns” என்றொரு disclaimer இருக்கும். அது Chess Opening-களுக்கும் பொருந்தும்.
ஏழாவது ஆட்டத்தில் ஆனந்துக்கு வெள்ளை. மூன்று முறை Catalan Opening-ஐ விளையாடி அதில் இரண்டு வெற்றிகளையும் பெற்றிருந்தார் ஆனந்த். மூன்றாவது முறை ஆடிய போதும் ஆனதின் கை ஓங்கியிருந்தது என்ற போதும், டொபலோவ் சுலபமாகவே டிரா செய்தார். பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஆனந்தின் Opening Strategy எளிதில் யூகிக்கக் கூடிய ஒன்றாய் மாறிவிட்டது. வெள்ளைக் காய்களுடன் ஆடும் போது Catalan, கருப்புக் காய்களுடன் ஆடும் போது Slav Defense என்பதே ஆனந்தின் அது. இதைத்தான் ஆடுவார் என்று டொபலோவுக்கு தெளிவானதும், அந்த ஓபனிங் தரும் சூழலுள், புதிய கோணங்களை உருவாக்குவதற்காக டொபலோவின் டீம், ஓய்வு நாளில் நன்கு உழைத்திருக்கின்றது.
ஏழாவது  ஆட்டத்தை ஆனந்த் Catalan-ல் தொடங்கிய சில நகர்த்தல்களிலேயே டொபலோவ் அதிரடியாய் ஆட ஆரம்பித்தார். முதலில் தனது யானையை ஆனந்தின் பிஷப்புக்காக பலி கொடுத்தார். அதன் பின், தனது குதிரையையும் வெட்டுக் கொடுத்தார். ஆனந்த் டொபலோவ் அளித்தவற்றை ஏற்றுக் கொண்டார் என்ற போதும், அதற்காக கணிசமான அளவு நேரத்தை செலவழிக்கும்படியாயிற்று.
முதல் இருபது நகர்த்தல்களை டொபலோவ் 3 நிமிடங்களுக்குள் நகர்த்திவிட்டார். ஆனந்துக்கோ ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது.
ஆட்ட விதிகளின் படி, முதல் நாற்பது நகர்த்தல்களை இரண்டு மணி நேரத்தில் வைக்க வேண்டும். இருவரும் கிட்டத்தட்ட ஒரே வேகத்தில் ஆடினால், நாற்பது நகர்த்தல்களுக்கு, இருவரின் நேரத்தையும் சேர்த்தால் நான்கு மணி நேரம் கிடைக்கும். ஆனால், ஒருவர் ஆட்டத்துக்கு வருவதற்கு முன்பே தயார் செய்து வைத்த நகர்த்தல்களை மின்னல் வேகத்தில் நகர்த்திக் கொண்டே போகும் போது, மற்றவருக்கு யோசிக்கும் நேரம் கணிசமாகக் குறையும். ஒருவரின் கிளாக்கில் மூன்று நிமிடங்களே செலவாகியிருக்கும் போது, மற்றவரின் கிளாக்கில் ஒரு மணி நேரத்துக்கு மேல் செலவாகியிருந்தால், அதுவே ஒருவித மன அழுத்தத்தைக் கொடுக்கும். நாம் வைக்கும் நகர்த்தல்கள் எல்லாம் எதிராளி ஏற்கெனவே ஆராய்ந்த நகர்த்தல்கள்தான் என்ற எண்ணம் நிச்சயம் free thinking-ஐ பாதிக்கும்.
இருபது நகர்த்தல்களுக்குப் பின், ஆனந்திடம் ஒரு குதிரை அதிகமாக இருந்தது. ஆனால், டொபலோவின் காய்கள் வலுவான இடத்தைப் பெற்றிருந்தன. குறிப்பாக, இரண்டு passed pawns, ஆனந்தின் அரையை அதிரடியாய் ஆக்கிரமித்து இருந்தன.
இந் நிலையில் ஆனந்த் தனது 21-ஆவது நகர்த்தலை ஒரு master stroke-ஆக விளையாடினார். சாதாரணமானவருக்குக் கூட, அந்த நிலையில் சிறந்த நகர்த்தல் எது என்று யூகிக்கக் கூடிய நகர்த்தலை ஆனந்த் தவிர்த்தார். அதை விட ஒரு மாற்று சுமாரான நகர்த்தலை விளையாடினார். இதனால், டொபலோவ் குழம்பினார். முதன் முறையாய். டொப்லாவ் தன் தயாரிப்பிலிருந்து வேறுபட்ட நகர்த்தலை சந்தித்தார். ஒரு piece down-ஆக இருக்கும் போது, ஒரு சிறு பிழை நேர்ந்தால் கூட நிச்சயம் தோல்விதான். அதனால், டொபலோவ் அதிக நேரம் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார். ஆனந்துக்கோ, தன் கிளாக் ஓடாத நிலையில் சாவகாசமாக ஆட்ட நிலையை ஆராய அது ஏதுவாக அமைந்தது. Out of preparation-ல் இழுக்கப்பட்ட பின் டொபலோவ் வைத்த முதல் நகர்த்தலே சுமாரான ஒன்றாக அமைந்தது.
முப்பது நகர்த்தல்களுக்கு மேல், ஆனந்த் துல்லியமாய் நகர்த்தினால் நிச்சயம் தோற்க மாட்டார் என்ற நிலை ஏற்பட்டது. ஆனந்தும் துல்லியமாகவே விளையாடினார். டொபலோவ் ஒரு கட்டத்தில் ஜெயிக்க முடியாது என்று நினைத்து, டிராவுக்காக நகர்த்தல்களை repeat செய்ய ஆரம்பித்தார். ஆனந்தும் ஆமோதிப்பது போல போக்குக் காட்டி, time control-ஐ நிறைவேற்றுவதற்கு வழு செய்து கொண்டார். மூன்றாவது முறை ஆனந்த் அதே நகர்த்தலை மீண்டும் ஆடினால் டிரா என்ற நிலையில், ஆனந்த் தன் நகர்த்தலை வேறு படுத்தி, டொப்லோவை அதிர்ச்சியுறச் செய்தார்.
டொபலோவின் passed pawns தடை செய்யப்பட்ட நிலையில் ஆனந்தின் extra piece அவர் நிலையை வலுப்படுத்தின. இருப்பினும் வெற்றி பெற ஒரே ஒரு வழிதான் இருந்தது. பொறுமையாய் கணினியின் உதவி கொண்டு தேடினால் அந்த வழியைக் கண்டுபிடிப்பது சுலபம். அதையே on the board கண்டுபடிப்பது என்பது மிகவும் கடினம். அதனால், ஆனந்த் அந்த நகர்த்தலை காணாததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஒரு வழியாய் 58 நகர்த்தல்களுக்குப் பின் ஆட்டம்
டிராவில் முடிந்தது.
முதன் முறையாய் ஆனந்தை டொபலோவ் தன் சூழலுக்குள் இழுப்பதில் வெற்றி கண்டுள்ளார். அதற்கு முக்கிய காரணம் ஆனந்தின் predictability. ஒரே ஓபனிங்கை நான்காவது முறை ஆடியதால் வந்த வினை. ஆட்டத்தின் முடிவில் ஆனந்த் தன் ஒரு புள்ளி லீடை தக்க வைத்த போதும் momentum டொபலோவ் பக்கம் இருப்பதாகவே தோன்றியது.
இப்படிப் பட்ட சூழலில், அடுத்த ஆட்டத்தில், ஆனந்துக்கு அதுவரை கைகொடுத்து வந்த Slav defense-ஐ மீண்டும் ஆடுவாரா?
ஆடினார். அதையே ஆடி மீண்டுமொரு முறை டிரா ஆனால், டொபலோவ் மிகவும் எரிச்சலடைவார் என்பதே ஆனந்தின் யூகமாக இருக்கும். இதைத்தான் ஆனந்த் ஆடுவார் என்று தெரிந்தும் டொபலோவால் வெல்ல முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டால் அது அவரை இன்னும் அழுத்தும் என்று ஆனந்த் நினைத்திருக்கலாம்.
கருப்பு காய்களுடனேயே ஆனந்தை திக்குமுக்காட வைத்த டொபலோவ், வெள்ளைக் காய்களுடன் எப்படி ஆடியிருப்பார் என்று சொல்லவா வேண்டும்?
இத்தனைக்கும், முதலில் novelty-ஐ விளையாடியது ஆனந்த்தான். ஆனால், டொபலோவ் அனத நகர்த்தலை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. தன் திட்டத்தை செயல்படுத்தி வந்தார். முக்கியமாய், ஆனந்தின் novelty அவரை castling செய்யவிடாமல் தடுத்தது. இதனால், கருப்பின் காய்கள் develop ஆவதில் சிரமங்கள் ஏற்பட்டன. டொபலோவின் திட்டங்கள் அவருக்கு extra pawn-ஐக் கொடுத்தன. அவரது காய்களும் சிறந்த நிலைகளை அடைந்திருந்தன.
கூடுமானவரை ஆனந்த் சிறப்பாக ஆடினாலும், the best result that black could have got was a draw. ஒரு சிறு பிழை ஏற்பட்டால் கூட டொபலோவ் வென்றுவிடுவார். ஆனந்த் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் சிறப்பாகவே ஆடினார். ஆட்டம் opposite coloured bishop ending-ஐ நோக்கிப் பயணித்தது. பொதுவாக இது போன்ற நிலைகள் டிராவில்தான் முடியும். ஆனால், கருப்பின் அனைத்து நகர்த்தல்களும் துலியமாய் இருக்க வேண்டும். வெள்ளைக்கோ தோல்வி ஏற்படுமோ என்ற பயமேயில்லை. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆட்டத்தை இழுக்கடித்துக் கொண்டே போகலாம்.
டொபலோவ் அதையே செய்தார். ஒரு கட்டத்தில் ஆனந்த் மிகவும் களைப்புற்றிருக்க வேண்டும். தனது 56-ஆவது நகர்த்தலில் ஆனந்த் தவறிழைத்தார். எவ்வலவோ கடினமான தடைகளை முறியடித்த பின், ஒரு சாதாரண நகர்த்தலில் கோட்டை விட்டதற்கு வேறு காரணங்கள் இருக்க முடியாது. அடுத்த நொடியிலேயே தன் தவறை உணர்ந்து, தன் தோல்வியையும் ஒப்புக் கொண்டார்.
டொபலோவ் இப்போது ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்.
ஆனந்தைப் பொறுத்த வரை, ஒரு நல்ல விஷயம் தற்காப்புக்கும், அதிரடிக்கும் இடையில் சிக்கித் தவிக்கத் தேவையில்லை. அதிரடியாகவே ஆடலாம். சர்வ நிச்சயமாய் இப்போது Catalan-ஐயும், Slav-ஐயும் தவிர்த்து வேறொரு ஓபனிங்கை ஆனந்த் ஆடியாக வேண்டும். இந்தத் தோல்விக்குப் பின் கூட, ஆனந்தின் ஆட்டத்தைப் பார்த்தோமெனில், அது மிகச் சிறப்பாகவே அமைந்துள்ளது. டொபலோவின் அத்தனை திட்டங்களையும் on the board ஆனந்த் தகர்த்துள்ளார். Well. almost தகர்த்துள்ளார்:-). ஆனால், இந்தத் தோல்விக்குப் பின் ஆனந்தின் மனநிலை எப்படி இருக்கும்? ஆட்டத்தின் தொடக்கத்தில் தோல்விகள் ஏற்படின் திரும்பி வர வாய்ப்புகள் அதிகம். ஆட்டம் முடிவை அடையும் வேளையில் ஏற்படும் தோல்விகள் பெரும்பாலும் மரண அடியாகவே முடியும். இன்னும் நான்கு ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில், It is only a matter of nerves.
டொபலோவ் பக்கம் இப்போது momentum இருக்கிறது என்ற போதும், அவரது பாணி எதிராளிக்கு நிறைய வாய்ப்புகளை அளிக்கும்.
அவற்றை ஆனந்த் எடுத்துக் கொள்ளும் மனநிலையில் இருப்பாரா?
வெற்றி இனி எதிராளியின் தவறுகள் மூலம் நிர்ணயிக்கப்படும்.
அடுத்த இரண்டு ஆட்டங்கள் இன்றும் நாளையும்.
பார்ப்போம் என்னவாகிறதென்று.
பிகு: ஆனந்தின் தோல்விக்குப் பின் கட்டுரை எழுதுவதென்பது மஹா மொக்கை படத்தை முப்பது முறை தொடர்ந்து பார்ப்பதற்கு நிகராக உள்ளது. அடுத்த இரு ஆட்டங்களிலும் ஆனந்துக்குத் தோல்வியே எனில், ஒரு final update மட்டுமே இந்தத் தொடரின் வரும் என்பதை முன் கூட்டியே தெரிவித்துவிடுகிறேன்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

போட்டியின் ஒரு பாதி முடிந்துள்ள நிலையில் ஆனந்த் 3.5-2.5 என்ற வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

ஐந்தாவது ஆட்டத்தில் டொபலோவ் வெள்ளைக் காய்களுடன் விளையாடினார். மூன்றாவது ஆட்டத்தைப் போலவே Slav Defence-யே ஐந்தாவது ஆட்டத்தின் Opening-ஆக தேர்வு செய்தார் ஆனந்த். மூன்றாவது ஆட்டத்தின் முடிவில், “ஒரு கட்டத்தில் வெள்ளைக் காய்கள் நல்ல நிலையில் இருந்தன, அதன் பின் சில நகர்த்தல்கள் துல்லியமாக அமையாததால், கருப்புக் காய்கள் சமநிலையை அடைந்துவிட்டன.”, என்றார். டொபலோவ் கிடைத்த ஓய்வு நாளில் விட்டதைப் பிடிக்கும் நகர்த்தலகளைக் கண்டுபிடித்திருப்பாரா என்ற எதிர்பார்ப்பு மேலெழுந்தது. ஆட்டத்தின் முதல் 14 நகர்த்தல்கள் மூன்றாவது ஆட்டத்தின் நகர்த்தல்களாகவே அமைந்தன.

15-ஆவது நகர்த்தலில் ஆனந்த் மூன்றாவது ஆட்டத்திலிருந்து மாறுபட்டார். இந்த மேட்சிலும் சரி, கிராம்னிக்குக்கு எதிராக விளையாடிய மேட்சிலும் சரி, பெரும்பான்மையான ஆட்டங்களில் புதிய நகர்த்தலை ஆனந்தே முதலில் நகர்த்தியுள்ளார். அதன் மூலம், எதிராளியின் Preparation-க்குள் தான் சிக்காமல், எதிராளியை தனக்குப் பரிச்சியமான சூழலுக்குள் இழுத்துவிடுகிறார். இதுவே இவரது வெற்றியின் முக்கிய காரணங்களுள் ஒன்று.

17-ஆவது நகர்த்தலின் போது அரங்கில் மின்வெட்டு (அங்குமா?). ஆட்டம் தொடருமா? இது டேனைலோவின் சதியா? இருட்டிலும் ஆனந்தின் clock ஓடிக் கொண்டிருக்குமா?, என்ற கேள்விகள் இணையம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. ஆர்பிடர் வந்து ஆனந்தின் clock-ஐ நிறுத்தி வைத்திருந்தார். மின்சாரம் மீண்டதும் ஆட்டம் தொடர்ந்தது. இறுதியில் ஆட்டம் டிராவில் முடிந்ததால் இதைப் பற்றி இரு ஆட்டக்காரர்களும் கண்டுகொள்ளவில்லை. யாரேனும் ஒருவருக்கு வெற்றி என்ற நிலை ஏற்பட்டிருப்பின், இந்த மின்வெட்டை இவ்வளவு சுளுவாக ஏற்றுக் கொண்டிருப்பரா என்பது சந்தேகமே. ஆட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் இந்தத் தடைக்கு மன்னிப்பு கோரி, இனிமேல் நடக்காதிருக்க ஆவன செய்துவிட்டதாகவும் உறுதியளித்துள்ளனர்.

மின்வெட்டின் போது, “Nice tactic. Would be even more effective against a computer”, என்றார் மிக் கிரீன்கார்ட்

ஆட்டத்தின் 22-வது நகர்த்தலில் தனது f-pawn-ஐ ஆனந்த் f6 என்ற கட்டத்துக்கு நகர்த்தினார். ஆட்டத்தை நேரிடையாக ஆராய்ந்த பல கிராண்ட்மாஸ்டர்கள் இந்த நகர்த்தலை வெகுவாக சிலாகித்தனர். இந்த நகர்த்தலைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றும் கூறினர். இந்த நகர்த்தல் மூலம் தனது பிஷப் நகர வழி செய்து கொண்டார் ஆனந்த் என்பது புரிந்தாலும், இது ஏன் அவ்வளவு கஷ்டமான நகர்த்தல் என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. (ஓநாயா இருந்தாத்தான் அதோட நியாயம் புரியும் என்பது போல, கிராண்ட்மாஸ்டராக இருந்தால்தான் அந்தக் கஷ்டம் புரியும் என்று நினைக்கிறேன்.) அடுத்த சில நகர்த்தல்களிலேயே, டொபலோவ் ஏதேனும் தவறு செய்தாலன்றி ஆட்டத்தில் ஒருவர் வெற்றி பெறுவது நடக்காது, என்ற நிலை ஏற்பட்டது.

டொபலோவ் டிரா செய்ய மறுப்பதால், செஸ் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆட்டமும் End Game பாடங்களாக அமைகின்றன. 23-ஆவது ஆட்டத்திலேயே டிரா என்று தேர்ந்தவர்களுக்கு வேண்டுமானாலும் தெரியலாம். அதிக பயிற்சி இல்லாதவர்களுக்கு இந்த ஆட்டங்கள் சிறந்த பாடங்கள். அதற்காகவே டொபலோவுக்கு நன்றி சொல்லலாம். டொபலோவின் பிடிவாதத்தால், ஆட்டம் 41-ஆவது நகர்த்தல் வரை தொடர்ந்து repetition மூலம் டிராவில் முடிந்தது. ஆனந்த், ஆட்டம் முழுவது எவ்வித சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல், சுலபமாக டிராவைப் பெற்றார்.

அடுத்த நாள் நடந்த ஆறாவது ஆட்டத்தில் ஆனந்துக்கு வெள்ளைக் காய்கள். அதற்கு முன் ஆனந்த் வெள்ளைக் காய்களுடன் ஆடியிருந்த இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தார். இரண்டிலுமே catalan opening-ஐ தேர்வு செய்திருந்தார்.

ஆனந்த் மூன்றாவது ஆட்டத்திலும் அதே ஓபனிங்கை தேர்வு செய்வாரா? உலகின் தலை சிறந்த ஆட்டக்காரர்களுள் ஒருவரை ஒரே விதமாய் விளையாடி மூன்று முறை வெல்ல முடியுமா? Catalan-ஐ விளையாட டொபலோவும் அனுமதிக்க வேண்டுமே? டொபலொவ் தோற்ற இரண்டு ஆட்டங்களைப் பார்க்கின், அவர் தோற்றது ஓபனிங்கால் அல்ல என்பது தெளிவாகும். Middle Game-ல் செய்த தவறால்தான் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியுற்றார். இருப்பினும், இரு முறை சூடு பட்ட பின்னும் அதே ஓபனிங்கை விளையாட டொபலோவ் அனுமதிப்பாரா?

இப்படிப் பல கேள்விகள்.

ஆட்டம் தொடங்கிய போது, மீண்டும் ஒரு முறை Catalan-ஏ அரங்கேறியது.

இந்த ஆட்டத்திலும் ஆனந்தே முதலில் Novelty-ஐ அறிமுகப்படுத்தினார். முதல் இருபது நகர்த்தல்களுக்குப் பின் ஆனந்திடம் இரு குதிரைகளும், டொபலோவிடம் இரு பிஷப்களும் இருந்தன. End Game-ல் இரண்டு பிஷப்களும் இருப்பதென்பது சாதகமான விஷயம் என்ற போதும், டொபலோவின் காய்கள் ஒருங்கிணைப்புடன் அமையவில்லை. 22-ஆவது நகர்த்தலில் தொடங்கி 34-ஆவது நகர்த்தல் வரை ஆனந்த் தனது குதிரைகளையே மீண்டும் மீண்டும் நகர்த்தி, டொபலோவின் காய்கள் போதிய அளவு coordination-ஐப் பெற முடியாத படி பார்த்துக் கொண்டார். இறுதியில் தன் குதிரையைக் கொடுத்து டொபலோவின் கருப்பு பிஷப்பை வென்றார். ஆனந்தின் doubled rooks (அதாவது ஒன்றன் பின் ஒன்றாக இருக்கும் யானைகள்), c-file-ஐ வியாபித்திருந்த போதும், ஆனந்தின் King Pawn (அதாவது e-file-ல் இருக்கும் pawn), எப்போது வேண்டுமானால் வீழ்ந்து ஆனந்தின் ராஜாவை expose செய்யும் அபாயமும் இருந்து வந்தது. இரு ஆட்டக்காரர்களும் தங்கள் நிலையை பலப்படுத்த கடுமையாக முயன்றனர். இறுதியில், 58-ஆவது நகர்த்தலுக்குப் பின் ஆட்டம் டிராவில் முடிந்தது. இம் முறையும் டொபலோவ் ஆர்பிடரை அழைத்து வந்தார்.

“எதிராளியுடன் பேச மாட்டேன். எதுவாகினும் ஆர்பிடர் மூலமாகவே தெரியப்படுத்துவேன்”, என்று டொபலோவ் பிடிவாதமாக இருப்பது சின்னப்புள்ளத்தனமாக இருக்கிறது.

போட்டியில் முதல் முறையாக, டொபலோவ் சற்றே நிறைவுடன் ஓய்வு நாளுக்குள் செல்வார்.

போட்டி தொடங்கு முன்னரே ஆனந்தின் வயதும் இப்போட்டியின் முடிவை நிர்ணயிக்கும் என்று பலர் கருதினர். அதிலும், டொபலோவ் ஒவ்வொரு ஆட்டத்தையும் கடைசி வரை கொண்டு செல்கிறார். ஆனந்தின் வயது அவரை தளர்த்தக் கூடும் எனில், டொபலோவின் இந்த யுக்தி அவருக்கு சாதகமாய் அமையக் கூடும். முதல் ஆறு போட்டிகளில், ஆனந்த் தளராமல் ஈடுகொடுத்து வருகிறார். அடுத்த பாதியிலும் ஆனந்தின் துல்லியம் தொடருமா என்பதும் முக்கியமான கேள்வி.

ஏழாவது ஆட்டம் மிக முக்கியமான ஒன்று. அதில் ஆனந்துக்கு வெள்ளைக் காய்கள். அந்த ஆட்டத்தை அவர் ஜெயிப்பின், கிட்டத்தட்ட போட்டியை வென்ற மாதிரிதான். ஆனால், டொபலோவ் டிராவைப் பெற்றால் கூட அவருக்கு அது நல்ல முடிவுதான். ஏனெனில், எஞ்சியுள்ள ஐந்து ஆட்டங்களில் அவருக்கு மூன்று ஆட்டங்கள் வெள்ளைக் காய்களுடன் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்றை ஜெயித்து சமன் செய்தால் கூட momentum அவர் பக்கம் திரும்பிவிடும். சில ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில், ஆனந்தால் விட்டதைத் திரும்பிப் பெற முடியுமா என்பது பெரும் கேள்விக் குறி.

ஆனந்தின் நிலை தர்ம சங்கடானது.

பொதுவாக போட்டியில் ஒரு புள்ளி லீட் என்பது almost non-existent lead-தான். எப்போது வேண்டுமானாலும் இல்லாமல் போய்விடும்.

லீட் இருக்கிறதே என்று தற்காத்து ஆடவும் முடியாது, இருக்கின்ற லீடை விட்டுவிடாமல் இருக்க வேண்டும் என்பதால் அதிரடியாகவும் ஆட முடியாது. கிட்டத்தட்ட இரண்டுங்கெட்டான் நிலை.

டொபலோவுக்கு அதிரடியாய் ஆடுவதற்கான Motivation நிறையவே உள்ளது. ஆக்ரோஷமாய் களமிறங்குவார். இம் முறையில் வெற்றியும் பெறக் கூடும் என்ற போதும், அதீதமாய் தன் அதிரடியைக் காட்டி, தன்னையே மாய்த்துக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது.

இதெல்லாம் நமக்கே புரியும் போது, பழம் தின்று கொட்டைப் போட்ட ஆனந்துக்கா தெரியாமல் இருக்கும்? வெற்றிகள், தோல்விகள் இரண்டையுமே கணிசமான அளவு பார்த்தவர் ஆனந்த். இது போன்ற தர்ம சங்கடங்களை எப்படி அணுக வேண்டும் என்று அவரை விட வேறு யாருக்குத் தெரிந்திருக்க முடியும்?

Game 6 படங்கள்: http://photo.chessdom.com/thumbnails.php?album=248&page=5

Follow

Get every new post delivered to your Inbox.